தியேட்டர் வாசலில் சிவகார்த்திகேயனை கட்டிப்பிடித்து அழுத நடிகர்! ராதிகா உருக்கம்.. டிடி -யின் எதிர்பாராத செயல்
சென்னை: நடிகராக தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan Thai Kizhavi), தயாரிப்பாளராகவும் தரமான படைப்புகளை வழங்கி வருகிறார். அந்த வரிசையில் அவர் தயாரித்துள்ள புதிய படம் தாய் கிழவி. சிவக்குமார் முருகேசன் இயக்கியுள்ள இந்த படம் அவரின் முதல் படமாகும். ராதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் சிங்கம்புலி, அருள்தாஸ், பாலசரவணன், பால சரவணன், ரேச்சல், முத்துக்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் நாளை வெளியாக இருக்கிறது.

தாய் கிழவி பிரீமியர் ஷோ
படம் வெளியாகும் முன்பாக நேற்று திரையுலக பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. சூர்யா, ஜோதிகா, ஷாலினி, பிரபு, ராதா, சரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படத்தை பார்த்தனர். காட்சி முடிந்ததும் படத்திற்கு கிடைத்த வரவேற்பு படக்குழுவுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக ராதிகாவின் நடிப்பு குறித்து அனைவரும் ஒரே குரலில் பாராட்டி, அவருக்கு தேசிய விருது கூட கிடைக்கலாம் என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெகிழ வைத்த காட்சி
இந்தப் பிரீமியர் காட்சிக்குப் பிறகு நடந்த சில உணர்ச்சி பூர்வமான தருணங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன. படம் பார்த்துவிட்டு வெளியே வந்த நடிகர் பால சரவணன், சிவகார்த்திகேயனை பார்த்தவுடன் கட்டிப்பிடித்து கண்கலங்கி அழுதார். பின்னர் இயக்குநர் சிவக்குமார் முருகேசனையும் அணைத்து வாழ்த்தினார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளன.
ராதிகா செய்த செயல்
அதேபோல் ராதிகாவும் வெளியே வந்தவுடன் கண் கலங்கியபடி "சிவகார்த்திகேயன் எங்கே?" என்று கேட்டு அவரை நேரில் பார்த்து நன்றி தெரிவித்ததார். படத்தின் மீது அவருக்கு இருந்த நம்பிக்கையும், கிடைத்த வரவேற்பும் அந்த தருணத்தில் வெளிப்பட்டதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாராட்டிய டிடி
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிடி (திவ்யதர்ஷினி) சிவகார்த்திகேயனை கட்டிப்பிடித்து வாழ்த்திய காட்சியும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த காலத்தில் போட்டியாளராக வந்த சிவகார்த்திகேயன் இன்று நடிகர், தயாரிப்பாளர் என உயர்ந்திருப்பதை நினைவுபடுத்திக் கொண்ட டிடி, "என் முன்னாடியே வளர்ந்த தம்பி" என்று பெருமையுடன் பாராட்டி இருந்தார். அந்த நெருக்கமான தருணம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதற்கிடையில், ராதிகா மற்றும் ஷாலினி இணைந்து சிவகார்த்திகேயனை கலாய்த்த வீடியோவும் ட்ரெண்டாகி வருகிறது. ஷாலினியிடம் "சிவாவை தெரியும்ல?" என்று ராதிகா கேட்க, "தெரியாதே" என்று ஷாலினி சொன்னதும், "அப்படியே தெரியாமலேயே இருங்க" என்று ராதிகா பதில் சொன்ன காட்சி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
முன்னதாக இந்தப் படம் கமல்ஹாசனுக்காகவும் திரையிடப்பட்டிருந்தது. "இந்தப் படத்தை பற்றி நான் சொல்வதைவிட மக்கள் சொல்வார்கள்... சிறப்பான படம், சிறப்பான இயக்குநர்" என்று அவர் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ப்ரீமியர் காட்சியிலேயே இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பதால், பொதுமக்கள் மத்தியில் படம் எப்படி ஓடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எமோஷனல், நடிப்பு, இயக்கம் என பல அம்சங்களால் பேசப்படும் தாய் கிழவி நாளைய வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications