யார் இந்த ராஜ்நாத் சிங்?..

பாஜக தலைவர் பதவிக்கு நிதின் கத்காரியைப் போல ராஜ்நாத் சிங்கையும் ஆர்எஸ்எஸ் தான் தேர்வு செய்துள்ளது.
ஆரம்பத்தில் இருந்தே கத்காரியையே மீண்டும் தலைவராக்க ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் முயன்றார். நாக்பூர் தலைமையகத்தில் இருந்தவாரே தனது காய்களை அவர் நகர்த்திக் கொண்டிருந்தார்.
ஆனால், கத்காரிக்கு அத்வானியில் ஆரம்பித்து ஜேத்மலானி, நரேந்திர மோடி, சுஷ்மா சுவராஜ், யஷ்வந்த் சின்ஹா என மூத்த தலைவர்கள் அனைவரிடம் இருந்தும் எதிர்ப்புக் கிளம்பியது. கட்காரிக்கு எதிர்ப்பு என்ற பெயரில் இவர்களில் யாராவது தலைவராகிவிடுவதைத் தவிர்க்க ராஜ்நாத் சிங்கை தேர்வு செய்துள்ளது ஆர்எஸ்எஸ்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்நாத் சிங் இயற்பியல் பேராசிரியராக இருந்து அரசியலுக்கு வந்தவர். பாஜகவில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு பதவிகளை வகித்தவர். உத்தரப் பிரதேச மாநில பாஜக இளைஞரணித் தலைவராகவும், மாநிலத் தலைவராகவும் இருந்து பின்னர் 1991ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் அமைந்த முதல் பாஜக அரசில் கல்வி அமைச்சராகவும், பின்னர் மாநில முதல்வராகவும் ஆனார்.
இவர் கல்வி அமைச்சராக இருந்தபோது வரலாற்றுப் புத்தகங்கள் பெருமளவில் திருத்தப்பட்டன. வேத கால கணிதமும் புகுத்தப்பட்டது.
பின்னர் ராஜ்யசா மூலமாக எம்பியாகி வாஜ்பாய் அமைச்சரவையில் தரைவழிப் போக்குவரத்து அமைச்சராகவும், விவசாயத்துறை அமைச்சராகவும் இருந்தார். இதையடுத்து பாஜக தேசியத் தலைவராகவும் உயர்ந்தார்.
ஆனால், 2009ம் ஆண்டு பாஜக இரண்டாவது முறையாக தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் மண்ணைக் கவ்வியபோது இவர் தான் அந்தக் கட்சியின் தலைவராக இருந்தார். இதையடுத்து இவரைத் தூக்கிவிட்டு கட்காரியை தலைவராக்கியது ஆர்எஸ்எஸ்.
இப்போது கட்காரி பதவி விலக வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானதையடுத்து மீண்டும் தலைவராகியுள்ளார் ராஜ்நாத் சிங். இந்தப் பதவி தன்னை மீண்டும் தேடி வரும் என்று ராஜ்நாத்தே எதிர்பார்த்திருக்க மாட்டார்.
ஆனால், இவரைத் தேர்வு செய்ய முக்கியக் காரணங்கள்.. இவர் தனக்கென கோஷ்டி ஏதும் வைத்துக் கொள்ளாதவர். எந்தக் கோஷ்டியிலும் அடையாளம் காணப்படாதவர், கட்சியின் அனைத்து கோஷ்டிகளின் தலைவர்களுடனும் நல்லுறவை பேணுவதோடு, அனைவரின் பேச்சையும் கேட்டு முடிவுகள் எடுப்பவர். கட்காரி மாதிரி கட்சியின் மூத்த தலைவர்களுடன் மோதல் போக்கை கையாளாதவர். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர், அதே நேரத்தில் மிகத் தீவிரமான ஆர்எஸ்எஸ்காரர். இவையெல்லாம் இவரது பிளஸ் பாயிண்டுகள்.
இருந்தாலும் இவருக்கு தனது சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் கூட பெரிய அளவில் ஆதரவு வட்டம் இல்லை. அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியை இழந்து 15 வருடத்துக்கு மேலாகிவிட்டது. அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 80 சீட்களில் பெரும்பாலான இடங்களை பகிர்ந்து கொள்ளப் போவது முலாயம் சிங் யாதவும், மாயாவதியும் தான். மிச்சத்தைத் தான் காங்கிரசும், பாஜகவும் கூறு போட்டாக வேண்டும்.
உத்தரப் பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் வாக்குகளைப் ராஜ்நாத் கொஞ்சம் உதவலாம் என்றும் ஆர்எஸ்எஸ் நம்புகிறது. இதுவும் இவரைத் தேர்வு செய்ய ஒரு காரணம். ஆனால், இந்த பிளான் எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பது தெரியவில்லை.
கத்காரியுடன் மோதி வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தான் முதல் ஆளாக ராஜ்நாத் சிங்குக்கு தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். இன்று காலையே மோடி தனது ட்விட்டரில் ராஜ்நாத் தலைவராவதற்கு தனது முழு ஆதரவையும் வாழ்த்தையும் தெரிவித்துவிட்டார்.
இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது. கட்காரி இடத்தைக் காலி செய்ததில் பாஜகவில் எதிரும் புதிருமாக உள்ள அத்வானிக்கும் மகிழ்ச்சி, நரேந்திர மோடிக்கும் மகிழ்ச்சி. இரு வேறு துருவங்களைக் கூட ஒரு புள்ளிக்குக் கொண்டு வந்துள்ளார் ராஜ்நாத்.
இது மட்டும் தான் ராஜ்நாத் சிங்கின் பலம்!
கொசுரு...
பாஜக தலைவராக அந்தக் கட்சியில் உறுப்பினராக உள்ள, 12 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்.. ஆனால், அதற்கு 5 மாநில கட்சித் தலைமைகளிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெற வேண்டும். இது மூத்த பத்திரிக்கையாளர் பிரபு சாவ்லா ட்விட்டரில் தந்த தகவல்.












Click it and Unblock the Notifications