Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா- அமெரிக்கா.. ''அதுக்கும் மேல''!

Subscribe to Oneindia Tamil

-ஏ.கே.கான்

இந்தியா- அமெரிக்கா இடையிலான அணு சக்தி ஒப்பந்தத்தை அமலாக்குவதில் இருந்த தடைக்கற்கள் நீக்கப்பட்டுவிட்டதாகவும், இந்த ஒப்பந்தம் விரைவில் அமலுக்கு வரும் என்றும் இந்தியா வந்து சென்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.

அணு சக்தி உடன்பாட்டில் இருந்து வந்த முட்டுக்கட்டைகளை நீக்கி, முன்னெடுத்து செல்வதற்கு உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாக இரு தரப்பிலும் வெளியுறவுத்துறைகள் சார்பில் அறிக்கையில் 'மொட்டையாக' கூறப்பட்டுள்ளது.

''அணு சக்தி உடன்பாடு தொடர்பாக 2 விவகாரங்களை புரிந்து கொள்வதில் நாங்கள் ஒரு திருப்புமுனையை எட்டி இருக்கிறோம்" என்றார் ஒபாமா.

பேச்செல்லாம் நல்லாத்தான் இருக்கு.. அது அவ்வளவு ஈசியா?. அது என்ன 2 விவகாரங்கள்?..

இந்திய- அமெரிக்க அணு ஒப்பந்தம் கையெழுத்தானது பிரதமர் மன்மோகன் சிங்கின் முதலாம் ஆட்சியின் கடைசி காலகட்டத்தில், அதாவது 7 வருடங்களுக்கு முன்பு. ஆனால், கையெழுத்துப் போட்ட பைல்களில் தூசி அப்பி அப்படியே கிடக்கிறது.

காரணம், அதில் உள்ள ஏகப்பட்ட சட்ட, தொழில்நுட்ப சிக்கல்கள். அதில்,

முதல் பிரச்சனை: Nuclear Liability

முதல் பிரச்சனை: Nuclear Liability

அணு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்ட இந்தியா அதை நடைமுறைக்குக் கொண்டு வர சில சட்டத் திருத்தங்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை மன்மோகன் சிங் தனது இரண்டாவது ஆட்சி காலத்தில் செய்தார். அதில், எதிர்க் கட்சிகளின் நெருக்கடியால் சில முக்கிய பிரிவுகள் சேர்க்கப்பட்டன. அதில் முக்கியமானது தான் Nuclear Liability. அதாவது, இந்தியாவில் அணு உலையில் ஏதாவது விபத்து ஏற்பட்டால், அந்த உலைக்கு தொழில்நுட்பம், எரிபொருள் சப்ளை செய்த நிறுவனங்கள் மீதும் வழக்குத் தொடர்ந்து நஷ்டஈடு கேட்க வகை செய்கிறது இந்த சட்டம்.

போபால் விஷ வாயு விபத்தையடுத்து யூனியன் கார்பைட் பெருந்தலைகளை இந்தியாவால் இன்று வரை தண்டிக்க முடியாத நிலையை மனதில் வைத்து இந்த ஷரத்து கொண்டு வரப்பட்டது. இதில் போபால் விபத்து நடந்தபோது யூனியன் கார்பைட் தலைவராக இருந்தவர் அமெரிக்காவில் தலைமறைவாக இருந்தபடியே இறந்தும் போய்விட்டார். அதைக் கூட அவரது குடும்பத்தினர் இன்சூரன்ஸ் காரணங்களுக்காக ஒரு சிறிய லோக்க பத்திரிக்கையில் வரி விளம்பரம் தந்தபோது தான் அவர் செத்ததே நமக்குத் தெரியவந்தது.

அணு உலைக்கு எரிபொருள் தருவதோடு, தொழில்நுட்பத்தைத் தந்ததோடு, அதை வைத்து லாபம் பார்ப்பதோடு எங்க வேலை முடிஞ்சு போச்சு என்பது அமெரிக்க தரப்பின் வாதம்.

இரண்டாவது பிரச்சனை: U.S. insistence on monitoring fuel supplied to India

இரண்டாவது பிரச்சனை: U.S. insistence on monitoring fuel supplied to India

அதாவது இந்திய அணு உலைகளுக்குத் தரப்படும்ம் கதிர்வீச்சு கொண்ட யுரேனியத்தை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம் என்கிறது அமெரிக்கா. இந்த யுரேனியத்தை இந்தியா அணு ஆயுதம் தயாரிக்க பயன்படுத்தக் கூடாது, வேறு நாடுகளுக்குத் தரக் கூடாது. இதனால் இந்தியாவிடம் தரப்படும் யுரேனியத்தை நாங்கள் கண்காணித்துக் கொண்டே இருப்போம் என்கிறது.

இதை அவர்களால் எப்படிச் செய்ய முடியும்?. நமது அணு உலைகள், அணு ஆராய்ச்சி மையங்களுக்குள் அவர்கள் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே இது சாத்தியம். இந்திய அணு ஆராய்ச்சி மையத்துக்குள் அமெரிக்க விஞ்ஞானிகளை அனுமதிக்க முடியுமா?. விஞ்ஞானிகள் என்ற போர்வையில் அமெரிக்க உளவாளிகளும் உள்ளே ஊடுருவலாமே.. இதனால் இதை இந்தியா ஏற்க மறுத்து வந்தது.

இந் நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியும் சேர்ந்து இது தொடர்பான பிரச்சனைகளை எல்லாம் கலைந்துவிட்டோம், மிக விரைவிலேயே அணு ஒப்பந்தத்தை அமலாக்கப் போறோம் என்று கூறிவிட்டு செளதிக்குப் போய்விட்டார் ஒபாமா.

122 மில்லியன் டாலர் இன்சூரன்ஸ் திட்டம்:

122 மில்லியன் டாலர் இன்சூரன்ஸ் திட்டம்:

முதல் பிரச்சனைக்குத் தீர்வாக 122 மில்லியன் டாலர் அளவுக்கு அணு சக்தி இன்சூரன்ஸ் நிதியை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் அணு உலையை இயக்கும் நிறுவனத்துக்கும், எரிபொருள், தொழில்நுட்பம், கருவிகள் தந்த நிறுவனங்களுக்கும் நஷ்டஈடு 'கேடயம்' தரப்படவுள்ளது. ஏதாவது விபத்து ஏற்பட்டால் இந்த 122 மில்லியன் டாலரில் இருந்து இழப்பீடு தரப்படும். அணு உலையை இயக்கும் நிறுவனம், எரிபொருள், தொழில்நுட்பம், கருவிகள் தந்த நிறுவனங்கள் இழப்பீடு தர வேண்டியதில்லை.

சரி, 122 மில்லியன் டாலருக்கு மேல் சேதம் ஏற்பட்டால் யார் அந்த இழப்பீட்டைத் தருவது?. இந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லை. Tapering basis-ல் இதற்கான நிதியை இந்தியா ஒதுக்கும் என்று மட்டும் சொல்கிறார்கள். அதாவது 122 மில்லியன் டாலரில் பெரும்பாலான பணத்தை இன்சூரன்சுக்காக முதலிலேயே ஒதுக்கிவிட்டு, மிச்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக அடுத்தடுத்த வருடங்களில் ஒதுக்குவார்கள்.

ஆக, இழப்பீடு விஷயத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா விட்டுக் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

யுரேனியத்தை கண்காணிக்க மாட்டோம்- அமெரிக்கா:

யுரேனியத்தை கண்காணிக்க மாட்டோம்- அமெரிக்கா:

அதே போல இந்தியாவுக்குத் தரப்பட்ட யுரேனியத்தை கண்காணிக்க அமெரிக்க விஞ்ஞானிகளை நமது அணு ஆராய்ச்சி மையங்களுக்குள் அனுமதிக்கப் போகிறோமா?, இவர்கள் யுரேனியத்தை பார்க்கனும் என்று எந்த நேரத்திலும் நமது ஆய்வு மையங்களுக்குள் நுழைவார்களா?, நமது விஞ்ஞானிகளிடம் கேள்வி கேட்பார்களா?, இவர்களது செயல்பாடுகளை இந்திய உளவாளிகள் கண்காணிக்கப் போகிறார்களா?

இந்தக் கேள்விகளுக்கும் இரு நாடுகளும் இன்னும் விடை சொல்லவில்லை. ஆனால், இந்த விஷயத்தில் அமெரிக்கா விட்டுக் கொடுத்துவிட்டதாக சொல்கிறார்கள். உங்களை முழுமையாக நம்புகிறோம், இந்தியாவுக்கு யுரேனியத்தை தந்ததோடு ஒதுங்கிக் கொள்வோம், அதை நீங்கள் எதற்காக பயன்படுத்துகிறீர்கள் என்பதையெல்லாம் கண்காணிக்க மாட்டோம் என்று பிரதமர் மோடியிடம் ஒபாமா கூறியுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

ஆக, யுரேனியத்தை கண்காணிக்கும் விஷயத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா விட்டுக் கொடுத்துள்ளது. மொத்தத்தில் ஏதோ சில ரகசிய புரிதல்கள் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கலாம் என்பது மட்டும் தெளிவாகவே தெரிகிறது.

40 புதிய அணு உலைகள், 63,000 மெகாவாட் மின்சாரம்:

40 புதிய அணு உலைகள், 63,000 மெகாவாட் மின்சாரம்:

உண்மையிலேயே ஏதாவது விட்டுக் கொடுத்தல்கள் நடந்திருந்தால் அடுத்த சில மாதங்களில் அணு உலைகள் அமைப்பதில் முன்னணி நிறுவனங்களான அமெரிக்காவின் ஜெனரல் எலெக்ட்ரிக், Westinghouse Electric Co, ஜப்பானின் தோஷிபா நிறுவனத்துக்குச் சொந்தமான Cranberry ஆகியவை இந்தியாவை நோக்கி படையெடுக்கலாம்.

2032ம் ஆண்டில் இந்தியா தனக்குத் தேவையான மின்சாரத்தில் 4ல் 1 பங்கை, அதாவது 63,000 மெகாவாட் மின்சாரத்தை, அணு சக்தி மூலமாக உற்பத்தி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. 63,000 என்பது இப்போது நாடு உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மாதிரி 14 மடங்கு. இதற்காக புதிதாக 40 அணு உலைகள் கட்டப்பட வேண்டும். இதற்கு 182 பில்லியன் டாலர்கள் வரை முதலீடுகள் தேவைப்படும்.

இந்த முதலீட்டை அணு உலை கட்டும் நிறுவனங்களே கொண்டு வரப் போகின்றன.

இதிலும் கடும் போட்டி. இந்தியாவில் ஏற்கனவே ரஷ்யா 20 அணு உலைகளைக் கட்டிக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிரத்தில் பிரான்ஸ் 6 உலைகளை கட்டிக் கொண்டிருக்கிறது. இவர்களுடன் அமெரிக்காவும் போட்டி போட வேண்டும்.

ஜப்பான், ஜெர்மனி இப்பிடி, சீனா அப்படி:

ஜப்பான், ஜெர்மனி இப்பிடி, சீனா அப்படி:

இதில் தான் ஒபாமா- மோடி இடையிலான நட்பு வேலை செய்யும் என்று அமெரிக்க நிறுவனங்கள் நம்புகின்றன. தங்களுக்கு ஆதரவான முடிவுகளை இந்தியா எடுக்கும் என்று நம்புகின்றன அமெரிக்க நிறுவனங்கள்.

உலகம் முழுவதும் இப்போது 30 நாடுகளில் 430 அணு உலைகள் உள்ளன. இதில் பெரும்பாலானவை மின்சாரம் தயாரிக்கவும், மற்றவை மின்சார உற்பத்தி என்ற பெயரில் அணு ஆயுதத்துக்கான எரிபொருள் தயாரிக்கும் வேலையிலும் ஈடுபட்டுள்ளன.

இந்த 420 அணு உலைகளும் உற்பத்தி செய்யும் மின்சாரம் உலகின் மின் தேவையில் 11 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்கின்றன. சுனாமியால் புகுஷிமா அணு உலையில் அடி வாங்கிய ஜப்பான், புதிய அணு உலைகள் கட்டுவதை நிறுத்திவிட்டது. 2022ம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிடும் திட்டத்தில் இருக்கிறது ஜெர்மனி.

ஜப்பான், ஜெர்மனியை பார்த்து நாமும் சும்மா இருக்கலாம் தான்..

ஆனால், 2020ம் ஆண்டுக்குள் தனது அணு உலை மூலமான மின் உற்பத்தை 3 மடங்காக்க திட்டமிட்டுள்ளது சீனா.

நாம் சும்மா இருக்க முடியுமா?

நாம் சும்மா இருக்க முடியுமா?

'ஐ' விக்ரம் மாதிரி ''அதுக்கும் மேல'' ஏதாவது செய்தாக வேண்டுமே...

அதற்கான வேலையைத் தான் ஒபாமாவும் மோடியும் செய்ய ஆரம்பித்துள்ளனர்!

(அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான தொடரை படிக்க இங்கே க்ளிக் செய்க)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+