ஈரான் விவகாரம்
ஈரான் விவகாரம்: 1979ம் ஆண்டு புரட்சி நடந்து ஈரானில் ஆயத்துல்லா தலைமையிலான ஆட்சி வந்ததில் இருந்தே அந் நாட்டை அமெரிக்காவும் செளதி அரேபியாவும் இணைந்து தான் எதிர்த்து வருகின்றன. அணு ஆயுத விவகாரத்தை வைத்து ஈரான் மீது அமெரிக்கா கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செளதி எதிர்பார்க்க, அமெரிக்காவோ ஈரானுடன் பேச்சு நடத்தி பிரச்சனையைத் தீர்க்க முடிவு செய்துவிட்டது. காரணம், இராக், ஆப்கானிஸ்தான் மாதிரியான நாடல்ல ஈரான். அங்கு போரில் இறங்கினால் அமெரிக்காவுக்குத் தான் பெரும் நஷ்டம் விளையும்.

இராக்கில் பெருவாரியான ஷியாக்களை ஒடுக்கித் தான் ஆட்சியில் இருந்தார் சதாம். அவருக்கு எதிரான அமெரிக்க ராணுவத் தாக்குதல் தொடங்கியதுமே உள்நாட்டில் பெருவாரியாக உள்ள ஷியாக்களும் குர்த் இனத்தினரும் கை கோர்த்து அமெரிக்காவுக்கு ஆதரவு தந்தனர். பெரும்பான்மையான மக்கள் தன்னுடன் இல்லாத நிலையில் சதாமால் நாட்டைக் காக்க முடியவில்லை. ஆப்கானில்தானில் ஒவ்வொரு ஏரியாவும் ஒரு பழங்குடித் தலைவரின் கட்டுப்பாட்டில் இருக்க, போர் தொடங்கிய ஒரே வாரத்தில் அமெரிக்கா அங்கு கால் பதித்துவிட்டது.
ஆனால், ஈரானில் அமெரிக்கா காலை வைத்தால் மொத்த நாடும், மக்களும் எதிராகக் களம் இறங்குவர் என்பதால், இந்த விவகாரத்தில் அமெரிக்கா அடக்கி வாசித்து வருகிறது. இதைத் தான் செளதியால் ஏற்க முடியவில்லை. தன்னை வைத்து ஈரானுடன் இத்தனை காலம் பாலிடிக்ஸ் செய்த அமெரிக்கா இப்போது தன்னை ஒதுக்கிவிட்டு அந்நாட்டுடன் பிரச்சனையைப் பேசித் தீர்க்க முயல்வதை செளதி ரசிக்கவில்லை.












Click it and Unblock the Notifications