Fact Check: குஷியில் துள்ளிய பாஜக! சென்னை மெட்ரோவுக்கு மத்திய அரசு ரூ.63246 கோடி நிதியா? உண்மை என்ன?
சென்னை: சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு ரூபாய் 63,246 கோடி நிதி அளித்துள்ளதாக பாஜக தலைவர்கள் பதிவிட்டு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்திருந்த நிலையில், மத்திய அரசு ரூ. 63,246 கோடி நிதி வழங்கியதாக பரவும் செய்தி தவறானது என்று தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் விம்கோ நகர் - விமான நிலையம் வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் - பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் தற்போது 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மெட்ரோ ரயில்களில் தினசரி 3 லட்சம் பேர் தற்போது பயணம் செய்து வருகின்றனர். விரைவான, பாதுகாப்பான, வசதியான பயணம் என்பதால் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டம்: இதையடுத்து மாதவரம் - சிறுசேரி, பூந்தமல்லி - கலங்கரை விளக்கம், மாதவரம் - சோழிங்கநல்லூர் என 3 வழித்தடகளில் 116 கி.மீ தூரத்திற்கு இப்போது சென்னை மெட்ரோ 2ம் கட்ட கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து கூறி வந்தது. தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் நேரடியாக டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியிடம், மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்க கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், சென்னை மெட்ரோ 2 ஆம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ. 63,246 கோடி மதிப்பிலான மெட்ரோ 2ம் கட்டத்திற்கு நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷனவ் தெரிவித்தார்.
பரவிய தகவல்: இந்த நிலையில், மத்திய அரசு சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு ரூ.63,246 கோடி நிதி வழங்கியுள்ளதாக தகவல் பரவியது. பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட பலரும் இந்த தகவலை பகிர்ந்து பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்திருந்தனர்.
உண்மை என்ன?: இந்நிலையில், சென்னை மெட்ரோ 2 ஆம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு ரூபாய் 63,246 கோடி நிதி அளித்துள்ளதாக பொய்யான தகவல் பரப்பப்படுவதாக தமிழ் நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு வெளியிட்டுள்ள பதிவில், "சென்னை மெட்ரோ திட்டம் 2 ஆம் கட்டத்திற்கு ரூபாய் 63,246 கோடி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இது தவறான தகவல்.
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளுக்காக மத்திய அரசு தரப்பில் ரூ.7,425 கோடி, தமிழ்நாடு அரசு தரப்பில் ரூ.22,228 கோடியும், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மூலம் மாநில அரசின் உத்தரவாதத்தில் கடனாக ரூ.33,593 கோடியும் பெறப்படும். தவறான தகவலை பரப்பாதீர்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
மத்திய அரசு சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு ரூ.63,246 கோடி நிதி வழங்கியுள்ளதாக தகவல் பரவியது.
முடிவு
மத்திய அரசு தரப்பில் ரூ.7,425 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு 22,228 கோடி நிதி ஒதுக்கும். மாநில அரசின் உத்தரவாதத்தில் கடனாக ரூ.33,593 கோடியும் பெறப்படும்.












Click it and Unblock the Notifications