Fact Check: மோடி சொல்லும் வாக்குறுதிகள் அர்த்தமற்றது என்றாரா அமித் ஷா?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவாதங்கள் எல்லாம் அர்த்தமற்றவை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுவது போன்ற வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வீடியோ உண்மைதானா இல்லை என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நாடு முழுக்க இப்போது லோக்சபா தேர்தல் நடந்து வரும் நிலையில், பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகிறது. அதேநேரம் தேர்தல் குறித்துப் பல வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகிறது.

இருப்பினும், அதில் எது உண்மையான ஒன்று.. எவை போலியானது என்பது நமக்குத் தெரிவதில்லை. அப்படிதான் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவாதங்கள் குறித்து உள் துறை அமைச்சர் அமித் ஷா பேசுவது போன்ற வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அமித் ஷா: அதில் மோடியின் எல்லாம் அர்த்தமற்றவை என்றும் தேர்தல் முடிந்ததும் அவை அவ்வளவு தான் மறந்துவிடுவார் என்றும் அமித் ஷா கூறுவது போல இருக்கிறது. இதை இணையத்தில் பலரும், குறிப்பாக எதிர்க்கட்சிகள் வேகமாகப் பரப்பி வருகின்றனர். இதனால் பலரும் உண்மையிலேயே அமித்ஷா இதுபோல கூறியதாக நினைக்கிறார்கள். இந்த வீடியோ உண்மை தானா.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சமூக வலைத்தளங்களில் டிரெண்டான அந்த வீடியோவில் அமித் ஷா இந்தியில் பேசியிருக்கிறார். அதில் அவர், "இந்த உத்தரவாதங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை. அவர்கள் தேர்தல் வரை உத்தரவாதங்கள் குறித்துப் பேசுகிறார்கள், பின்னர் அதை மறந்துவிடுகிறார்கள்" என்று கூறுவது போல இருக்கிறது.. நெட்டிசன்கள் பலரும் அமித் ஷா பிரதமர் பதவியைக் கைப்பற்றப் பார்ப்பதாகவும் இதன் காரணமாகவே அவர் இப்படிப் பேசி வருவதாகவும் பதிவிட்டு வருகிறார்கள்.
உண்மை என்ன: இருப்பினும் இந்த வீடியோவை நாம் பேக்ட் செக் செய்து பார்க்கும் போது இது போலியானது என்பது தெரிய வருகிறது. அதாவது அமித் ஷா காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளையே நம்ப முடியாது என்று கூறியிருக்கிறார். இருப்பினும், அதைக் கட் செய்து ஏதோ மோடியின் உத்தரவாதங்கள் நம்ப முடியாது என அவர் கூறுவது போல வீடியோ எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
பின்னணி என்ன: சமூக வலைத்தளங்களில் பரவும் அந்த வீடியோவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அதை நாம் கூகுளில் reverse image search செய்து பார்த்தோம். அப்போது தான் அது கடந்த மே 15ஆம் தேதி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு மோடி அளித்த நேர்காணல் என்பதைக் கண்டறிந்தோம். இந்த முழு நேர்காணல்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளன. இந்த நேர்காணலில் அமித் ஷா லோக்சபா தேர்தல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்டிஏ கூட்டணி, ஆம் ஆத்மி என்று பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசியுள்ளார்.
என்ன சொன்னார்: அதில் 25:14 நிமிடத்தில் தான் காங்கிரஸின் உத்தரவாதங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இந்தியில் பதிலளித்த அமித் ஷா, "நான் தெலுங்கானா சென்றேன். அங்குள்ள பெண்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய ரூ.12 ஆயிரம் தொகைக்காகக் காத்திருக்கின்றனர். அங்குள்ள விவசாயிகள் ரூ.2 லட்சம் கடன் தள்ளுபடிக்காகக் காத்திருக்கின்றனர். அங்குள்ள பெண்கள் ஸ்கூட்டருக்காக கூட காத்திருக்கின்றனர். இவை எல்லாம் தெலுங்கானா சட்டசபைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வாக்குறுதிகள். ராகுல் காந்தி தான் இந்த உத்தரவாதங்களை அளித்திருந்தார். ஆனால், இப்போது ராகுல் காந்தியையே மக்கள் தேடி வருகிறார்கள்.
தென்மாநிலத்தில் தேர்தல் வரும்போது மட்டும் ராகுல் காந்தி அங்குச் செல்வார்.. அதன் பிறகு கண்டு கொள்ள மாட்டார்.. இதன் காரணமாகவே இந்த உத்தரவாதங்கள் எல்லாம் அர்த்தமற்றது என்கிறேன்.. தேர்தல் வரை அது குறித்துப் பேசுவார்கள்.. அதன் பிறகு அப்படியே மறந்துவிடுவார்கள்" என்றார். அமித் ஷாவின் பேச்சில் இந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் கட் செய்து அவர் மோடிக்கு எதிராகப் பேசுவது போல இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.

Fact Check
வெளியான செய்தி
மோடியின் உத்தரவாதங்கள் அர்த்தமற்றது.. தேர்தல் முடிந்தவுடன் அதை மறந்துவிடுவார்கள் என்று அமித் ஷா கூறியதாக வீடியோ பரவியது.
முடிவு
காங்கிரஸ் உத்தரவாதங்களே அர்த்தமற்றது என அமித் ஷா கூறியிருந்தார். அதை வெட்டி மோடி குறித்துக் கூறுவது போல வீடியோவை திரித்துப் பரப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications