FACT CHECK: முத்ரா திட்டத்தின் கீழ் 1 லட்சம் கடன் வழங்கப்படும்.. நிதி அமைச்சகம் கூறியதா? உண்மை என்ன?
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கடன் வழங்கப்படுவதாகவும் ஒப்புதல் கட்டணமாக ரூ.1,750 செலுத்த வேண்டும் எனவும் சமூக ஊடகங்களில் செய்தி பரவியது.
டெல்லி: பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கடன் வழங்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாகவும் ஒப்புதல் கட்டணமாக ரூ.1,750 செலுத்தினால் இந்த கடன் தொகையை பெற முடியும் என சமூக ஊடகங்களில் நிதி அமைச்சகத்தின் உத்தரவு என்ற பெயரில் ஒரு செய்தி பரவியது. ஆனால் இந்த செய்தி உண்மை கிடையாது.. பொய்யானது என்று பிஐபி பேக்ட் செக் விளக்கம் அளித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பம் அபரிமிதமாக வளர்ந்து விட்ட இந்தக் காலத்தில் மக்களுக்கு எந்த ஒரு தகவல்களும் நொடிப்பொழுதில் போய் சேர்ந்து விடுகிறது. அன்றாட செய்திகளாக இருக்கட்டும் அரசு தொடர்பான நலத்திட்டங்களாக இருக்கட்டும்.. வேலை வாய்ப்பு தகவலாக இருக்கட்டும் எந்த ஒரு தகவலும் அடுத்த சில நிமிடங்களில் பெரும்பாலும் அனைவரையும் எட்டி விடுகிறது.
இதனால், பல நன்மைகளும் உள்ளன. தகவல்கள் வேகமாக பரவும் அதே நேரத்தில் போலி தகவல்களும் இதற்கு சற்றும் தொய்வு இல்லாமல் வேகமாக பரவுகின்றன.
Fact Check - குடியரசு தினத்தில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதா? பீகார் வீட்டு மாடியில் பறந்தது என்ன?
அரசின் நலத்திட்டங்கள்
போலியான செய்திகள், வதந்திகள் உண்மை செய்திகளை விட அதிவேகமாக பரவிவிடுகிறது. அதே போல சமூகத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் போலி தகவல்களை பரப்பும் கும்பலும் இந்த வசதியை பயன்படுத்திக் கொண்டு அதிவேகத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி விடுகின்றனர். பொய்ச்செய்திகள், வதந்திகள், அரசின் நலத்திட்டங்கள் பற்றிய தவறான தகவல்கள் என பல்வேறு தகவல்களையும் சிலர் திட்டமிட்டு பரப்புவது உண்மை செய்தியை விட அதிவேகத்தில் பரவி விடுகின்றன.
பரவும் போலி செய்திகள்
இத்தகைய பொய் செய்திகள் தேவையற்ற குழப்பங்களுக்கும் வித்திடுவதாய் மாறி விடுகிறது. போலி செய்திகள் மற்றும் போலி தகவல்களை களைவது பெரும் சவாலான ஒன்றாகவே தற்போதைய இணைய உலகில் உள்ளது. இதற்காக மத்திய அரசின் பிஐபி (Press Information Bureau ) பேக்ட் செக் செய்வதற்காக தனது ட்விட்டர் பக்கமும் வைத்துள்ளது. இணையத்தில் பரவும் போலி செய்திகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்த பொய்யான தகவல்களை கண்டறிந்து இது உண்மையல்ல என்பதை பிஐபியின் பேக்ட் செக் ட்விட்டர் பக்கம் பகிர்ந்து மக்களுக்கு உண்மைத்தகவல்களை அளித்து வருகிறது.
1 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறதா?
இந்த நிலையில், பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தில் கீழ் மத்திய அரசு நிதி உதவி அளிக்க இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. சமூக ஊடகங்களில் பரவும் அந்த செய்தியில், முத்ரா திட்டத்தின் கீழ் 1 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட இருப்பதாகவும் கடனை பெறுவதற்கான ஒப்புதல் கட்டணமாக ரூ.1,750 செலுத்த வேண்டும் என்ற செய்தியுடன் ஒரு இமேஜ் பதிவு பரவியது. என்.ஆர்.ஐ நிதி திட்டத்தின் கீழ் 5 சதவீத வட்டி விகிதமாக இருக்கும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது. சமூக ஊடகங்களில் இது தொடர்பான தகவல் வேகமாக பரவிய நிலையில், மத்திய அரசின் பிஐபி பேக்ட் செக், முத்ரா திட்டத்தின் கீழ் 10 லட்சம் கடன் வழங்கப்படுவதாக வெளியாகிய தகவல் பொய்யானது என்று விளக்கம் அளித்துள்ளது. நிதி அமைச்சகம் இதுபோன்ற எந்த கடிதத்தையும் வெளியிடவில்லை எனவும் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
|
முத்ரா திட்டம் என்றால் என்ன?
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தை கடந்த 2015-ஆம் ஆண்டு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் அல்லாத மற்றும் வேளாண் தொழில் சாராத நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் தொகை வழங்குவதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதியுதவி நிறுவனங்கள், இதர நிதி இடைத்தரகு நிறுவனங்கள், ‘சிஷூ', ‘கிஷோர்' மற்றும் ‘தருண்' ஆகிய 3 பிரிவுகளில் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
* சிஷூ: ரூ.50,000/- வரையிலான கடன்கள் இதில் அடங்கும்.
* கிஷோர்: ரூ.50,000-க்கும் மேல் மற்றும் ரூ.5 லட்சம் வரையிலான கடன்கள் இதில் அடங்கும்.
* தருண்: ரூ. 5 லட்சத்திற்கும் மேல் மற்றும் ரூ.10 லட்சம் வரையிலான கடன்கள் இதில் அடங்கும்.
Fact Check
வெளியான செய்தி
பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 1 லட்சம் கடன் வழங்கப்படுவதாகவும் ஒப்புதல் கட்டணமாக ரூ.1,750 செலுத்தி கடன் பெறலாம் என தகவல் வெளியானது.
முடிவு
நிதி அமைச்சகத்தின் அறிவிப்பு என்று வெளியான செய்தி போலியானது. அதுபோல எந்த ஒரு அறிவிப்பையும் நிதி அமைச்சகம் வெளியிடவில்லை.