தவெகவில் அதிமுக எம்எல்ஏக்கள்! போட்ட கண்டீஷன் என்னாச்சு? காங்கிரஸுக்கு ஸ்ரீநிதி கேள்வி
சென்னை: "பிரிவினைவாத சக்திகளுடன் கூட்டணி வைக்கக் கூடாது" என்று காங்கிரஸ் கட்சி கொள்கை ரீதியாக நிபந்தனை விதித்திருந்தும், என்.டி.ஏ (NDA) கூட்டணியின் ஆதரவோடு வெற்றி பெற்ற மூன்று எம்.எல்.ஏ.க்களை தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைத்தது ஏன் என்று காங்கிரஸ் கட்சியின் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் ஸ்ரீநிதி பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடந்து முடிந்த 2026 சட்டசபைத் தேர்தலில், கோவை சிங்காநல்லூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட கே.எஸ். ஸ்ரீ கிரி பிரசாத் 19,139 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ஸ்ரீநிதி, தற்போது தவெக மற்றும் காங்கிரஸ் தலைமைக்கு இடையே உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி ஒரு முக்கியமான கேள்வியை முன்வைத்துள்ளார்.
ஸ்ரீநிதியின் கேள்வி: "பிரிவினைவாத சக்திகளோடு எந்தக் காரணத்தைக் கொண்டும் கூட்டணி அமைக்கக் கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருந்தது. அப்படியிருக்க, என்.டி.ஏ (NDA) கூட்டணியின் ஆதரவோடு தேர்தலில் வென்ற மூன்று எம்.எல்.ஏ-க்கள், தகுதி நீக்கச் சட்டத்திலிருந்து தப்பிக்க 21 நாட்களுக்குள் தவெகவில் இணைந்தது எப்படி? இதற்கு காங்கிரஸ் தலைமை உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
2026 சட்டசபைத் தேர்தல் முடிவுகள், தமிழகத்தில் கடந்த 59 ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக - அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளன.
தவெக சாதனை: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனியாகப் போட்டியிட்டு 108 இடங்களைக் கைப்பற்றி, மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
திராவிடக் கட்சிகளின் பின்னடைவு: இத்தேர்தலில் திமுக 59 இடங்களையும், அதிமுக வெறும் 47 இடங்களையும் மட்டுமே பெற்று முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களுக்குத் தள்ளப்பட்டன.
வாக்கு வங்கி: தவெக சுமார் 35% வாக்குகளைப் பெற்று, விஜய் அவர்களின் தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது.
இந்த தேர்தலில் தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் அக்கட்சிக்கு காங்கிரஸ் நிபந்தனையுடன் கூடிய ஆதரவை கொடுத்தது. அதில் மதவாத சக்திகளுடன் கூட்டணி அமைக்கக் கூடாது, என்டிஏ கூட்டணியினரிடம் ஆதரவு கோரக் கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியின் ஆதரவோடு வென்ற மூன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள், தவெக அரசு அமைந்தவுடன் உடனடியாக தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. இந்த அதிரடி மாற்றத்திற்குப் பின்னால் இருக்கும் அரசியல் உத்திகளாகப் பார்க்கப்படுபவை என்ன என்பதை பார்க்கலாம்.
அதிகாரத்தை தக்கவைத்தல்: தவெக சில கட்சிகளின் துணையுடன் ஆட்சி அமைத்துள்ள சூழலில், ஆளுங்கட்சியுடன் இணைந்திருப்பது அதிகார வட்டத்தில் நீடிப்பதற்கும் உதவும் என்பது இவர்களது கணக்காக இருக்கலாம். மீண்டும் இடைத்தேர்தலில் அதே தொகுதியை கேட்டு பெற்று வெற்றி பெற்று தவெக எம்எல்ஏவாகிவிடலாம். பிறகு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்பதும் இவர்களது கணக்கு என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
எதிர்க்கட்சி பலவீனம்: என்.டி.ஏ கூட்டணி தோல்வியடைந்த நிலையில், எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதை விட ஆளுங்கட்சியில் இணைவதே சிறந்தது என்று எண்ணியிருக்கலாம்.
காங்கிரஸுக்கான சவால்: இந்த இணைவு காங்கிரஸ் கட்சியின் கொள்கை நிலைப்பாட்டிற்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகப் பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் தலைமையின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
தோல்வியடைந்த வேட்பாளர் ஸ்ரீநிதி எழுப்பியுள்ள இந்தக் கேள்வி, காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் புகைச்சலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. கட்சி வகுத்த கொள்கைகளுக்கு மாறாக களத்தில் அரங்கேறும் இந்த அதிரடி அரசியல் மாற்றங்கள் குறித்து, டெல்லி மற்றும் மாநில காங்கிரஸ் தலைமை மௌனம் காக்குமா அல்லது விளக்கம் அளிக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications