Fact Check: பாம்புகள் தேடி வந்து கடிக்குமா? உ.பியில் 7 முறை இளைஞரை கடித்த பாம்பு? உண்மை இதுதான்
சென்னை: உத்தரப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை பாம்பு 7 முறை தேடி வந்து கடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், பாம்புகளுக்கு மனிதர்களை அடையாளம் காணும் அளவுக்கு நினைவுத் திறன் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பத்தேபூர் மாவட்டம் சவுரா கிராமத்தை சேர்ந்தவர் விகாஸ் துபே. 24 வயதான இவர் சமீபத்தில் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டார். அதாவது கடந்த 40 நாட்களுக்கு முன்பு பாம்பு ஒன்று இவரை கடித்திருக்கிறது. உடனே தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றிருக்கிறார். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறார். பொதுவாக பாம்பு மனிதர்களை கடிப்பது அரிதான நிகழ்வு.

வேறு வழியே இல்லை என்றால்தான் மனிதர்களை பாம்புகள் கடிக்கும். அப்படி இருக்கும் போது மீண்டும் இரண்டாவது முறை அதே பாம்பு கடிப்பது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. ஆனால், விகாஸ் துபே இரண்டாவது முறையாகவும் கடித்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், ஊருக்குள் அவருக்கு நாக தோஷம் இருப்பதாக தகவல்கள் பரவின. ஒருவழியாக மருத்துவமனையிலிருந்து துபே வீடு திரும்பியிருக்கிறார்.
ஆனால், மூன்றாவது முறையாகவும் அவரை பாம்பு கடித்திருக்கிறது. இப்படியாக தொடர்ச்சியாக குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் 7 முறை பாம்பு அவரை கடித்திருக்கிறது என சிகிச்சை பெற்றிருக்கிறார். இதற்கு பின்னரும் தன்னிடம் சிகிச்சை பெற பணம் இல்லாததால் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உதவி கோரியிருக்கிறார். இவர் தொடர்பான செய்திகள் கடந்த சில நாட்களாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
ஆனால் 7 முறை பாம்பு ஒருவரை கடிப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பாம்புகள் குளிர் ரத்தம் கொண்ட உயிரினங்களாகும். உலகம் முழுவதும் மனிதர்கள் பரிணாமம் அடைவதற்கு முன்னரே பாம்புகள் தோன்றிவிட்டன. பாம்புகள் எல்லா காலநிலைக்கும், எல்லா இடத்திலும் வாழும் தன்மையை பெற்றிருப்பதால் விவசாய நிலங்கள் தொடங்கி வீடுகள் வரை இதனை மிக சாதாரணமாக பார்க்க முடிகிறது.
இந்தியாவில் இருக்கும் பாம்புகளில் 70 சதவிகிதம் விஷமற்றவை, 30 சதவிகிதம்தான் விஷமானவை. அதிலும் 4 வகை பாம்புகள்தான் அதிகமாக மனிதர்களை கடிக்கிறது. நல்ல பாம்பு, சுருட்டை விரியன், கட்டுவிரியன் மற்றும் கண்ணாடி விரியன் ஆகியவைதான் விஷம் கொண்டவை. இந்த பாம்புகள் எல்லா நேரங்களிலும் விஷத்தை பயன்படுத்துவதில்லை. சில நேரங்களில் Drybite எனப்படும் விஷமற்ற கடியைதான் கடிக்கின்றன.
ஆனால் இந்த பாம்புகளில் எதுவுக்கும் மனிதர்களை நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு நியாபக திறன் கிடையாது. அதாவது சினிமாக்களில் வருவதை போல, அதனுடைய ஜோடியை கொன்றுவிட்டால், யார் கொன்றார்களோ அவர்களை தேடி சென்று பழிவாங்கும் அளவுக்கு பாம்புகளுக்கு மனிதனை நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு திறன் கிடையாது.
அப்படி இருக்கையில் உத்தரப் பிரதேசத்தில் ஒரே நபரை 7 முறை பாம்பு தேடி வந்த கடித்தது எப்படி என்று கேட்கிறீர்களா? இதற்கான பதில் அம்மாவட்ட ஆட்சியர் மூலம் கிடைத்திருக்கிறது. அதாவது விகாஸ் துபே சிகிச்சைக்காக மாவட்ட ஆட்சியர் இந்துமதியிடம் மனு கொடுத்திருக்கிறார். ஆட்சியருக்கும் ஒரு நபரை எப்படி 7 முறை பாம்பு தேடி வந்து கடிக்கும்? என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.
இது குறித்து விசாரிக்க மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டார். விசாரணையில் "விகாஸை ஒரே ஒருமுறை பாம்பு கடித்துள்ளது. இதில் ஏற்பட்ட அச்சத்தால் அவருக்கு பாம்பு பீதி உருவாகி விட்டது. இதனால், அவர் அடிக்கடி தன்னை பாம்பு கடித்து விட்டதாக எண்ணி அச்சப்படுகிறார். இதனால் அவர் 6 முறை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்" என்பது தெரிய வந்திருக்கிறது.
இதன் மூலம் விகாஸ் பயத்தில் தன்னை பாம்பு கடித்ததாக நினைத்துக்கொண்டார் என்பது தெரிய வந்திருக்கிறது. அதே நேரம் பாம்பு மனிதர்களை தேடி சென்று பழிவாங்காது என்பதும் தெரிய வந்திருக்கிறது.

Fact Check
வெளியான செய்தி
உத்தரப் பிரதேசத்தில் விகாஸ் துபே எனும் இளைஞரை 7 முறை பாம்பு தேடி வந்து கடித்திருக்கிறது.
முடிவு
மனிதர்களை தேடி வந்து கடிக்கும் அளவுக்கு பாம்புகளுக்கு நினைவுத்திறன் கிடையாது. பாம்பு 7 முறை கடித்ததாக விகாஸ் துபே எனும் இளைஞர் பீதியடைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications