FACT CHECK: வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஓவர்டியூ ரூ.41,000 திருப்பி அளிக்கப்படுகிறதா? உண்மை என்ன?
வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஓவர்டியூ தொகை ரூ.41 ஆயிரம் திருப்பி அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் சிலருக்கு அனுப்பப்படுகிறது.
டெல்லி: வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஓவர்டியூ தொகை ரூ.41 ஆயிரம் திருப்பி அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் சிலருக்கு அனுப்பப்படுகிறது. இந்த மின்னஞ்சல் போலியானது என்றும் இதை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ள மத்திய அரசு இதுபோன்ற மின்னஞ்சல்கள் வந்தால் வருமான வரித்துறைக்கு புகாரளிக்கவும் என்று தெரிவித்துள்ளது. பிஐபி-யின் பேக்ட் செக் ட்விட்டரில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய டிஜிட்டல் உலகில் பண பரிவர்த்தனை பெருமளவும் ஆன்லைன் மூலம் நடக்கிறது.
கையில் ரொக்க பரிமாற்றத்தின் போது கவனத்தை திசை திருப்பி கொள்ளையர்கள் ஏமாற்றுவது போலவே டிஜிட்டல் பரிமாற்றத்திலும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணத்தை திருடும் சம்பவங்கள் அதிகரிக்கின்றன.

ஆதார் கார்டு அப்டேட் என்ற பெயரில்
செல்போனுக்கு லிங்க் ஒன்றை அனுப்பி அதை கிளிக் செய்தால் போனை ஹேக் செய்வது அல்லது வங்கி கணக்கு விவரங்களை கேட்டு அதன் மூலம் மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எளிதில் இந்த சைபைர் கிரைம் கொள்ளையர்கள் திருடி விடுகின்றனர். குறிப்பாக பரிசு விழுந்து இருப்பதாக கூறி லிங்க் அனுப்புவது..வங்கி கணக்கில் பான் கார்டு அப்டேட், ஆதார் கார்டு அப்டேட் என்ற பெயரில் லிங்க் அனுப்பி நமது தரவுகளை பெற்று பணத்தை திருடுவது என புதுப்புது வழிகளில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிரித்து வருகின்றன.

ரூ.41,107 திருப்பி அளிக்கப்படுவதாக மின்னஞ்சல்
சமீபகாலமாக அரசு நலத்திட்டங்களை பெற வேண்டும் என்றால் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் என வரும் மெசேஜ்கள் மற்றும் மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிவித்து இருப்பதாகவும் அதன்படி பயனாளிகளுக்கு நிதி உதவிகள் வழங்கப்படுவதாகவும் ஆசை வலையை விரித்து மக்களை சைபர் கொள்ளையர்கள் ஏமாற்ற முயற்சிக்கின்றனர். அந்த வகையில் தான் தற்போது சிலருக்கு ஒரு இமெயில் வந்து கொண்டிருக்கிறது. அதாவது வருமான வரி அதிகபடியான ரீஃபண்ட் தொகை ரூ.41,107- வழங்கப்படுவதாக மின்னஞ்சல் வருகிறது.

லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும் என..
இந்த தொகையை பெறுவதற்காக இமெயிலில் கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்க் ஒன்றையும் கிளிக் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. உங்களைப் பற்றிய ஒரு விவரம் தவறாக இருப்பதாகவும் அதை சரிபார்த்து இந்த பணத்தை பெற சரியான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பிக்குமாறும் கூறி லிங்கை கிளிக் செய்ய சொல்லி மெசேஜில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் இப்படி இமெயில் வந்திருப்பதாக பலரும் பதிவிட்டு இருந்தனர்.

மத்திய அரசு விளக்கம்
இந்த நிலையில், மத்திய அரசின் பிஐபி பேக்ட் செக் ட்விட்டர் பக்கத்தில், வருமான வரித்துறை பெயரில் வரும் இந்த மின்னஞ்சல் முற்றிலும் போலியானது என்று விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக பிஐபி ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- 41,407 ரூபாய் திரும்ப கொடுக்கப்படுவதாக வருமான வரித்துறை பெயரில் மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது. மேலும், மின்னஞ்சலை பெறுபவர்களின் தனிப்பட்ட விவரங்களும் கோரப்பட்டுள்ளன. இது முற்றிலும் போலியானது ஆகும். இது போன்ற மின்னஞ்சல்கள் வந்தால் வருமான வரித்துறையின் '[email protected]' இல் புகார் அளியுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஓவர்டியூ தொகை ரூபாய் 41,107 வழங்கப்படுவதாக சிலருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டு வருகிறது.
முடிவு
வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஓவர்டியூ தொகை ரூபாய் 41,107 வழங்கப்படுவதாக வரும் மின்னஞ்சல்கள் முற்றிலும் போலியானவை ஆகும்.












Click it and Unblock the Notifications