Fact check: ராகுல் காந்தியுடன் "பாக். ஜிந்தாபாத்" என கோஷமிட்ட மாணவி? தீயாக பரவும் போட்டோ! உண்மை என்ன
டெல்லி: ராகுல் காந்தி பாத யாத்திரையில் எடுக்கப்பட்ட படம் ஒன்று இணையத்தில் தீயாகப் பரவி வரும் நிலையில், அதன் உண்மை தானா எனப் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
காங்கிரஸ் கட்சி கடந்த சில ஆண்டுகளாகவே எந்தவொரு தேர்தலிலும் பெரியளவில் வெற்றியைப் பெறாத நிலையில், கட்சிக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் பணிகளை டெல்லி தலைமை தொடங்கி உள்ளது.
அதன் ஒரு பகுதியாக ராகுல் காந்தி நாடு முழுவதும் ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் பாத யாத்திரை சென்று வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பேரணி காஷ்மீரில் நிறைவடைகிறது.

பாத யாத்திரை
கடந்த மாதம் 31ஆம் தேதி கன்னியாகுமரியில் இந்த பேரணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் பாத யாத்திரை முடிந்த நிலையில், இப்போது அவர் கேரளாவில் பாத யாத்திரை சென்று வருகிறார். கேரளாவில் அவர் மொத்தம் 19 நாட்கள் பாத யாத்திரை செல்ல உள்ளார். மொத்தம் 12 மாநிலங்கள் வழியாக 3500 கிமீ தூரம் ராகுல் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

ஃபோட்டோ
காங்கிரஸ் தொண்டர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கவும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டவும் ராகுல் காந்தி இந்த நடைப்பயணத்தை மேற்கொள்கிறார். ராகுல் காந்தி நடைப்பயணம் தொடங்கியது முதலே இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. இப்போது கேரளாவில் இருக்கும் ராகுல் காந்தி, இளம் பெண் ஒருவருடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து பலரும் கடுமையாக அவரை விமர்சித்து வருகின்றனர்.

அமுல்யா லியோனா
அதாவது அந்த ஃபோட்டோவில் உள்ள பெண் அமுல்யா லியோனா நோரோன்ஹா என்றும் கடந்த 2020 பிப்ரவரியில் சிஏஏவுக்கு எதிராக எம்பி அசாதுதீன் ஓவைசி பேசிக் கொண்டிருந்த போது மேடை ஏறி "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என்று கோஷமிட்ட மாணவி என்றும் தெரிவித்தனர். "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என்று சொன்ன மாணவிக்கு ராகுல் காந்தி பேரணியில் என்ன வேலை என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தீயாக பரவும் தகவல்
ஒற்றுமை யாத்திரை என்ற சொல்லிவிட்டு இந்தியாவுக்கு எதிராக உள்ளவர்களுடன் ராகுல் காந்தி ஃபோட்டோ எடுத்தது ஏன் என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இணையத்தில் இப்படி பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில், இது உண்மை தானா என்று செக் செய்து பார்த்த போது. இது பொய் என்பது தெரிய வந்துள்ளது. ராகுல் உடன் படத்தில் இருக்கும் அந்த மாணவி அமுல்யா லியோனா நோரோன்ஹா இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

அவர் இல்லை
அந்த ஃபோட்டோவில் இருக்கும் பெண் மிவா ஆண்ட்ரேலியோ என்பது தெரிய வந்துள்ளது. மிவா ஆண்ட்ரேலியோ அவரே தனது இன்ஸ்டாகிராமில், ராகுல் காந்தியுடன் இருக்கும் அதே புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரு பெண்களும் ஒரே நபர் இல்லை என்பது நமக்குத் தெளிவாகத் தெரிந்து விடும்.

யார் அந்த பெண்
ஆண்ட்ரேலியோ கேரள மாணவர் சங்கத்தின் (KSU) உறுப்பினர் ஆவார். இவர் காங்கிரஸ் கட்சியிலும் உள்ளார். கேரளாவில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது காந்தியைச் சந்தித்த வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் ராகுல் உடன் படத்தில் இருக்கும் அந்த மாணவி அமுல்யா லியோனா நோரோன்ஹா இல்லை என்றும் அவர் கேரளாவைச் சேர்ந்த மாணவ சங்கத் தலைவர் மிவா ஆண்ட்ரேலியோ என்பதும் உறுதியாகி உள்ளது.

Fact Check
வெளியான செய்தி
ராகுல் காந்தி பேரணியில் "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என்று கோஷமிட்ட அமுல்யா லியோனா பங்கேற்றதாகத் தகவல் பரவியது.
முடிவு
படத்தில் இருக்கும் மாணவி அமுல்யா லியோனா இல்லை. அவர் கேரளாவைச் சேர்ந்த மிவா ஆண்ட்ரேலியோ.












Click it and Unblock the Notifications