Fact Check: “பழைய பஸ்ஸுக்கு பெயிண்ட் அடிச்சு புதுசுனு சொல்றாங்க...” சோஷியல் மீடியாவில் பரவும் வதந்தி
சென்னை: தமிழ்நாட்டில் புதிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால், சிலர் சோஷியல் மீடியாக்களில், பழைய பேருந்துக்கு பெயிண்ட் அடித்து அப்படியே இயக்கப்படுவதாகவும் விமர்சித்துள்ளனர். ஆனால் இந்த விமர்சனம் பொய்யானது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் நகர, மாநகரப் பேருந்துகள் பெரும்பாலும் சிவப்பு நிறத்திலும் இயக்கப்படுகின்றன. பெண்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்கும் பேருந்துகளை அடையாளம் காணும் வகையில் முன், பின் பக்கங்களில் இளஞ்சிவப்பு (பிங்க்) வண்ணம் பூசப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 1000 புதிய பேருந்துகளை வாங்கவும், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்படி நல்ல நிலையில் இயக்கத்தில் உள்ள பேருந்துகளை புதுப்பித்து, அவற்றுக்கு மஞ்சள் வர்ணம் பூசப்பட்டு தரச்சான்றிதழுடன் இயக்கப்பட்டு வருகின்றன.

அதாவது இந்த பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு 52 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் செல்போன் சார்ஜ் பாயிண்ட் அத்தியாவசியமாகியுள்ள நிலையில், செல்போன் சார்ஜ் போடும் வசதியும் உள்ளது. வயதானவர்கள் ஏறும் வகையில் படிக்கட்டுகள் உள்ளன. மேலும் தானியங்கி கதவு, டிஜிட்டல் பெயர் பலகை உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற விழாவில் முதல் கட்டமாக 100 பேருந்துகள் இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இப்படி மறு சீரமைக்கப்பட்ட பேருந்துகள் மாநிலம் முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், சோஷியல் மீடியாவில் பழைய பேருந்துக்கு பெயிண்ட் அடிக்கப்பட்டு அப்படியே இயக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. வெங்கட்ராமன் ஆர் எனும் x தள பயனாளர் ஒருவர் இது குறித்து வீடியோவை பதவிட்டு மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இதற்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் அதிகாரப்பூர்வ x கணக்கிலிருந்து பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.

அதில், "'TN45/N-4214 எண் கொண்ட பேருந்து 16.07.2019 முதல் இயக்கப்படுகிறது. புதிய பேருந்து அல்ல. தமிழக அரசின் ஆலோசனைப்படி, 5 முதல் 8 ஆண்டுகள் வரை ஓடியுள்ள பேருந்துகள் மட்டுமே Full Body Renovation செய்யப்படுகிறது. ஆகையால், இப்பேருந்து பழுது பார்க்கும் பிரிவில் வேலை செய்து மஞ்சள் வர்ணம் பூசப்பட்டு, தகுதிச்சான்று பெற்று இயக்கப்படுகிறது' என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது இதற்கான ஆதாரங்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன.


Fact Check
வெளியான செய்தி
பழைய பேருந்துகளுக்கு பெயிண்ட் அடிக்கப்பட்டு புதிய பேருந்துகளாக தற்போது மஞ்சள் நிற பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
முடிவு
மஞ்சள் பேருந்துகள் புதியவை அல்ல. ஆனால், Full Body Renovation செய்யப்படுகிறது பல்வேறு பரிசோதனைகள்/மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு தரச்சான்றிதழுடன் இயக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications