Fact check: இந்து சமய அறநிலையத்துறை கோயில் வளாகத்தில் பிரியாணி கடை இயங்குகிறதா? உண்மை என்ன?
சென்னை: இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயிலில் "அல் பிஸ்மி பிரியாணி கடை" செயல்பட்டு வருவதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இது வதந்தி என தமிழக அரசின் உண்மைச் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. இதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவிலில் அல் பிஸ்மி பிரியாணி கடை செயல்படுகிறது என ஒரு புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்தப் பதிவுகளில் ஏராளமானோர், திமுக அரசையும், அறநிலையத்துறையையும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பரவிய வதந்தி: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயிலில் பிரியாணி கடை செயல்பட்டு வருவதாகப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?: இது முற்றிலும் பொய்யான தகவல் என தமிழக அரசின் உண்மைச் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தப் புகைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது சென்னை மாதவரத்தில் அமைந்துள்ள தனியார் கோயிலாகும். இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமானது அல்ல.
இந்தக் கோயிலைச் சுற்றி கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதில் ஒரு கடையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரியாணி கடை இருந்துள்ளது. படத்தில் இடம்பெற்ற அந்த பிரியாணி கடையும் தற்போது அங்குச் செயல்படவில்லை. வதந்தியைப் பரப்பாதீர்! என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
மேலும், மாதவரத்தில் அந்தக் கோவில் வளாகத்தின் தற்போதைய புகைப்படத்தையும் இதற்கு ஆதாரமாக வெளியிட்டுள்ளது உண்மை சரிபார்ப்பகம். அந்த இடத்தில் தற்போது டீ மற்றும் ஜூஸ் கடை உள்ளது.

Fact Check
வெளியான செய்தி
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவிலில் அல் பிஸ்மி பிரியாணி கடை செயல்படுகிறது என ஒரு புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
முடிவு
இந்தக் கோவில் இந்து சமய அறநிலையத்துக்கு சொந்தமானது அல்ல. தனியாருக்கு சொந்தமான அந்தக் கோவிலின் முன்பு பிரியாணி கடை இருந்த நிலையில், தற்போது அங்கு பிரியாணி கடை இல்லை.












Click it and Unblock the Notifications