ரூ.21000 முதலீட்டில் ரூ.15 லட்சம் சம்பாதிக்கலாமா? பிரதமர் மோடி பெயரில் பரவும் வீடியோ.. உண்மை என்ன?
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, இன்போசிஸ் என்.ஆர்.நாராயணமூர்த்தி ஆகியோர் ரூ.21 ஆயிரத்தை முதலீடு செய்து மாதம் ரூ.15 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்று கூறுவதாக உள்ள ஒரு வீடியோ சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஒரே மாதத்தில் இவ்வளவு பணம் சம்பாதிக்கலாமா? என்று குறிப்பிட்டு பலரும் இதனை பகிர்ந்து வருகிறார்கள். இந்த வீடியோ குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இன்றைக்கு ஆன்லைன் மோசடிகள் பல்வேறு வகையில் வந்த வண்ணம் உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உள்பட பலரது பெயரில் போலி வீடியோக்கள் உலா வருகின்றன. ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பிரபலங்கள் பேசி முதலீடு செய்ய அறிவுறுத்துவது போல் வீடியோக்கள் பரவி வருகின்றன.

அதேபோல் இந்தியாவில் நடிகர், நடிகைகள், கிரிக்கெட் நட்சத்திரங்கள், பிரபல பங்கு சந்தை நிபுணர்கள், இன்ஸ்டா பிரபலங்கள் பெயரில் போலி வீடியாக்கள் பரவி வருகின்றன. அவர்கள் மக்கள் முன்னால் தோன்றி பேசி, குறிப்பிட்ட நிறுவனத்தின் பொருட்களை வாங்குமாறு அறிவுறுத்துவது போல் வீடியோக்கள் இணைய தளங்களில் பரவுகின்றன. இதேபோல் குறிப்பிட்ட சில நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் பணம் கொட்டும் என்றும் சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் அதிக அளவில் பரவி வருகின்றன.
அண்மையில் இந்தியாவில் மிகவும் பிரபலமான எஸ்பிஐ வங்கி குறித்து நிதி நிபுணர்கள் பேசுவது போல் போலியான வீடியோக்கள் வெளியாகி இருந்தது. முதலீடுகள் குறித்து வீடியோக்களில் வரும் தகல்களை நம்ப வேண்டாம் என்று எஸ்பிஐ விளக்கமும் அளித்தது. இவர் வீடியோவில் பேசுகிறார்.. அவர் வீடியோவில் பேசுகிறார் என்று நம்பி முதலீடு செய்துவிடக்கூடாது. ஏனெனில் இன்றைய சூழலில் யாரை வேண்டுமானாலும் ஏஐ தொழில் நுட்பம் மூலம் தத்ரூபமாக வேண்டிய விஷயங்களை பேச வைக்க முடியும். அதை நம்பிவிடக்கூடாது..
போலியான புகைப்படம் மட்டுமல்ல, போலியான வீடியோக்களையும் ஏஐ மூலம் தத்ரூபமாக உருவாக்கவிட முடியும். எனவே நிதி தொடர்பான முதலீடு விவாகரத்தில் யார் சொன்னாலும் நம்ப வேண்டாம். இதுதான் தற்போதைய எதார்த்தமான நிலையாக உள்ளது.
இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி, இன்போசிஸ் முன்னாள் தலைமை செயல் அதிகாரி என்.ஆர்.நாராயணமூர்த்தி ஆகியோர் ரூ.21 ஆயிரத்தை முதலீடு செய்து மாதம் ரூ.15 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்று கூறுவதாக உள்ள ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஒரே மாதத்தில் இவ்வளவு பணம் சம்பாதிக்கலாமா? என்று குறிப்பிட்டு பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர். இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "பிரதமர் நரேந்திர மோடி ரூ.21 ஆயிரம் முதலீடு செய்து மாதம் ரூ.15 லட்சம் வரை சம்பாதிக்க மக்களை வலியுறுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் முறையில் மாற்றியமைக்கப்பட்ட போலியான வீடியோ. இதுபோன்ற மோசடிகளில் யாரும் ஏமாற வேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
பிரதமர் நரேந்திர மோடி, இன்போசிஸ் என்.ஆர்.நாராயணமூர்த்தி ஆகியோர் ரூ.21 ஆயிரத்தை முதலீடு செய்து மாதம் ரூ.15 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்று வீடியோ பரவுகிறது
முடிவு
மத்திய அரசு கொடுத்துள்ள விளக்கத்தில் இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் முறையில் மாற்றியமைக்கப்பட்ட போலியான வீடியோ. இதுபோன்ற மோசடிகளில் யாரும் ஏமாற வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications