‛‛பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம்’’.. நாகர்கோவில் கிராம சபையில் தீர்மானமா? பரவும் தகவல் உண்மையா?
நாகர்கோவில்: தமிழகத்தில் பாஜகவை வளர்க்க அக்கட்சியின் மேலிடமும், மாநில தலைமையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் நாகர்கோவில் அருகே உள்ள கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் பாஜகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வாக்களிக்க மாட்டோம் என தேசியக்கொடி மீது உறுதியேற்று தீர்மானம் நிறைவேற்றியதாக ஒரு தகவல் பரவி வரும் நிலையில் உண்மை என்ன? என்பது பற்றி பார்ப்போம்.
வடமாநிலத்தை ஒப்பிடும்போது தெற்கில் கர்நாடகாவை தவிர பிற மாநிலங்களில் பாஜக செல்வாக்கு பெற்ற கட்சியாக இல்லை. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என அந்த கட்சி மேலிடம் திட்டம் வகுத்துள்ளது.

இதற்காக ‛ஆபரேஷன் சவுத்' என்ற பெயரில் பல்வேறு வியூகங்களை பாஜக வகுத்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் ‛என் மண் என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரையை தொடங்கி உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த பாதயாத்திரையை கடந்த மாதம் இறுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்தார். தற்போது இந்த யாத்திரை ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நிறைவு பெற்றுள்ளது. இன்று திருநெல்வேலியில் நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது. அதாவது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கல்குளம் கிராம மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என போர்க்கொடி தூக்கியதாகவும், இதுதொடர்பாக சுதந்திர தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றி உறுதிமொழி ஏற்றதாகவும் செய்திகள் பரவுகிறது.
மேலும் தனியார் செய்தி தொலைக்காட்சியின் பெயரில் இதுதொடர்பான நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் ‛‛பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் - கிராம மக்கள் என்ற தலைப்பில் ‛நாகர்கோயிலுள்ள கல்குளம் பகுதிய சேர்ந்த கிராம மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று தேசியக்கொடி மீது சத்தியம் செய்து உறுதிமொழி எடுத்துள்ளனர். பாஜகவுக்கும் அதன் கூட்டணி கட்சிக்கும் வாக்களிக்க மாட்டோம் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்''என பிழைகளுடன் எழுதப்பட்டுள்ளது.
இதனை பலரும் இணையதளங்களில் பரப்பி வருகின்றன. ஒருதரப்பு இதனை உண்மை என கூற மற்றொரு தரப்பு பொய்யான தகவல் என கூறுகிறது. மேலும் அந்த நியூஸ் கார்டில் எழுத்து பிழைகள் இருப்பதால் நிச்சயம் இது போலியான செய்தியாக இருக்க வாய்ப்புள்ளதாக சிலர் கூறினர். இதுபற்றி நாமும் ஆய்வு செய்தோம்.
அப்போது அந்த தனியார் செய்தி தொலைக்காட்சி சார்பில் இப்படி எந்த நியூஸ் கார்டும் வெளியிடவில்லை என்பது தெரியவந்தது. மேலும் அந்த நியூஸ் கார்டில் குறிப்பிட்டு இருக்கும் நேரத்தின் அடிப்படையில் செய்தி தொலைக்காட்சியின் இணையதளத்தில் பார்த்தபோது இப்படி எந்த கார்டும் பதிவேற்றம் செய்வில்லை என்பது உறுதியானது. இதன் மூலம் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என நாகர்கோவில் அருகே கல்குளம் மக்கள் தீர்மானம் நிறைவேற்றி உறுதிமொழி ஏற்றதாக பரவும் தகவல் பொய்யானது என்பது உறுதியாகி உள்ளது.

Fact Check
வெளியான செய்தி
நாகர்கோவில் அருகே குல்குளம் கிராம சபையில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டளிக்க மாட்டோம் என பொதுமக்கள் உறுதியேற்று தீர்மானம் நிறைவேற்றிய நியூஸ் கார்டு பரவுகிறது.
முடிவு
மேற்கூறிய தகவலுடன் வெளியான நியூஸ் கார்டை குறிப்பிட்ட அந்த செய்தி நிறுவனம் வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications