தமிழ்நாட்டில் பார் ஒன்றில் பெண்கள் கூட்டமாக மது அருந்தினார்களா.. அரசு விளக்கம்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஒரு மதுபான பாரில் பெண்கள் கூட்டமாக அமர்ந்து மது அருந்துவது போல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மதுப்பழக்கத்திற்கு இளைஞர்கள் பலர் அடிமையாகி வரும் நிலையில், அவர்களை போதையின் பாதையில் இருந்து மீட்க மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இந்த வீடியோ பெரிய அளவில் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது இல்லை என அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளும், மனமகிழ் மன்றம் பெயரில் தனியார் மதுபான பார்களும் எல்லா ஊர்களிலும் அதிக அளவில் உள்ளன. டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரை பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்குகின்றன. அதேநேரம் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரிலும், கிளப்களிலும் காலை 11 முதல் இரவு 11 மணி வரை மதுபானங்கள் விற்கப்படுகின்றன. அதேநேரம் சில மதுபான பார்களில் 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அவ்வப்போது சில பார்கள் மதுபானங்கள் 24 மணி நேரமும் மதுவிற்பதாக சர்ச்சையில் சிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன.

தமிழ்நாட்டினை பொறுத்தவரை மதுவால் தினமும் 100கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைத்து வருகிறது. ஓராண்டில் சுமார் 45000 கோடி அளவிற்கு மதுபானங்கள் விற்பனையால் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் ஆண்டில் 50000 கோடி அளவிற்கு வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுவால் அரசுக்கு வருமானம் கிடைத்தாலும், சிறுவர்கள் கூட மதுபானத்திற்கு அடிமையாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. 16 வயது 21 வயது நிரம்பாத இளைஞர்கள் போதையின் பாதையில் விழுவது அதிகரித்துள்ளது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த சூழலில் பெண்களும் மதுபானம் அருந்துவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ஒரு மதுபான பாரில் பெண்கள் கூட்டாக அமர்ந்து மது குடிப்பது போன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த விவகாரம் பற்றி தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது முற்றிலும் பொய்யான தகவல். இந்த வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது அல்ல. கடந்த 4-ந் தேதியன்று தெலுங்கானாவை சேர்ந்த சமூக ஊடக பக்கங்களில் இந்த வீடியோ பதிவிடப்பட்டது. வீடியோவில் உள்ள தெலுங்கு எழுத்துகளை மறைத்து தமிழ்நாட்டில் நடந்தது என திரித்து பரப்பப்படுகிறது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
தமிழகத்தில் உள்ள ஒரு மதுபான பாரில் பெண்கள் கூட்டாக அமர்ந்து மது குடிப்பது போன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
முடிவு
கடந்த 4-ந் தேதியன்று தெலுங்கானாவை சேர்ந்த சமூக ஊடக பக்கங்களில் இந்த வீடியோ பதிவிடப்பட்டது. வீடியோவில் உள்ள தெலுங்கு எழுத்துகளை மறைத்து தமிழ்நாட்டில் நடந்தது என திரித்து பரப்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications