FACT CHECK: நெல்லையில் குழந்தைகள் கடத்தல்.. காவல்துறை பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர் - உண்மை என்ன?
சென்னை: நெல்லையில் குழந்தைகள் கடத்தப்படுவதாக எச்சரிக்கை போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்த நிலையில் இது குறித்த உண்மை தன்மையை தமிழ்நாட்டு உண்மை சரிபார்ப்பு குழு வெளியிட்டு இருக்கிறது.
கடந்த சில வாரங்களாகவே தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் அதிகளவிலான பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. இதில் வட மாநிலத்தவர்கள் அதிகளவில் ஈடுபடுவதாகவும் அந்த பதிவுகளில் குறிப்பிடப்பட்டு வீடியோக்கள், ஆடியோக்கள், புகைப்படங்களில் பகிரப்பட்டு வந்தன. இந்த நிலையில் நெல்லை மாவட்டம் சிவங்கிப்பட்டியில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது.

அதில், "ஊர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை! நெல்லையில் சிறு பிள்ளைகளை கடத்துவதால் தெருக்களில் விளையாடும் பிள்ளைகளை பெற்றோர்கள் கவனமாக பார்த்துக் கொள்ளவும். பள்ளி சென்று வரும் பிள்ளைகள் தெரியாத நபர்களிடம் தின்பண்டம் வாங்கி சாப்பிடவோ வண்டியில் ஏறவோ வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது. ஊரில் புதிதாக நபர்கள் நடமாடினால் ஊர் மக்கள் எச்சரிக்கை செய்ய வேண்டும். இப்படிக்கு காவல்துறை மற்றும் ஊர் தலைவர்கள்." என்று அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இந்த போஸ்டர் தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில், "குழந்தை கடத்தல் எச்சரிக்கை போஸ்டர்': நெல்லையில் பரவிய வதந்தி
வதந்தி: நெல்லையில் சிறுபிள்ளைகளைக் கடத்துவதால் பெற்றோர்கள் கவனமாக இருக்கக்கோரி காவல்துறையின் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
‘குழந்தை கடத்தல் எச்சரிக்கை போஸ்டர்’ : நெல்லையில் பரவிய வதந்தி
— TN Fact Check (@tn_factcheck) March 13, 2024
Fact checked by FCU | @CMOTamilnadu @TNDIPRNEWS pic.twitter.com/UHeghxU7mh
உண்மை என்ன? இந்த சுவரொட்டியை காவல்துறை வெளியிடவில்லை. திருநெல்வேலி காவல்துறையின் பெயரில் ஊர் மக்களில் சிலரே இந்த சுவரொட்டியை அச்சிட்டுள்ளனர். தற்போது அவர்களை சிவங்கிபட்டி காவல்துறையினர் கைது செய்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதேபோன்று பல பகுதிகளில் குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்களை காவல் துறை கைது செய்து வருகிறது. இது குறித்து காவல் துறை கடந்த மாதம் காவல்துறை விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில், "சமீப காலமாக சில நபர்கள், குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகள் சமூக வலைதளங்களில் வேமாக பரவி வருவதை காண முடிகிறது.
இதுபோன்ற காணொலிகள் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டுமென்ற பிரதான எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் பரப்பப்பட்டு வருகின்றன என்பதினை சென்னை பெருநகர காவல் துறை உறுதிபட தெரிவித்து கொள்கிறது. இதுபோன்ற போலியான செய்திகளை கேட்டோ, காணொலிகளை பார்த்தோ பொதுமக்கள் துளியும் அச்சப்படவோ, பதற்றமடையவோ தேவையில்லை என்று சென்னை பெருநகர காவல் துறை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
பொதுமக்களுக்கு இது சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால் சென்னை பெருநகர காவல் துறை உதவி எண் 100 அல்லது 112 கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்புவோர் உடனடியாக இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மீறினால் அத்தகையோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை பெருநகர காவல் துறை எச்சரிக்கிறது." என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

Fact Check
வெளியான செய்தி
நெல்லையில் குழந்தைகள் கடத்தப்படுவதாக காவல்துறை பெயரில் ஒட்டப்பட்டு உள்ள விழிப்புணர்வு போஸ்டர்.
முடிவு
காவல்துறை இப்படி ஒரு போஸ்டரை ஒட்டவில்லை என தமிழ்நாடு உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கம்.












Click it and Unblock the Notifications