ரூ.3 லட்சம் கோடியை தாண்டிவிட்டது.. தங்க, வெள்ளி மார்க்கெட்டில்.. அடுத்தடுத்து நடந்த மாற்றம்.. போச்சு
மும்பை: இந்திய முதலீட்டுச் சந்தையில் ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி மீதான எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் (ETF) எனப்படும் முதலீட்டுத் திட்டங்களின் மொத்த சொத்து மதிப்பு (AUM), 2026 ஜனவரி மாதத்தில் 3 லட்சம் கோடி ரூபாயைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் இந்த முதலீடுகள் கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய பரஸ்பர நிதி சங்கத்தின் (AMFI) தரவுகளின்படி, ஆகஸ்ட் 2025-ல் வெறும் 1 லட்சம் கோடி ரூபாயாக இருந்த இந்தச் சொத்து மதிப்பு, உலகளாவிய பொருளாதார சூழலில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால் தற்போது அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது.
முதலீட்டாளர்களின் அபரிமிதமான ஆர்வம்
கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் வெள்ளி இடிஎஃப் கணக்குகளின் (Folios) எண்ணிக்கை 323 சதவீதம் அதிகரித்து, 11.31 லட்சத்திலிருந்து 47.85 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோல், தங்கம் இடிஎஃப் கணக்குகளும் 43 சதவீதம் வளர்ச்சியடைந்து 1.14 கோடியாக அதிகரித்துள்ளது. இது சாதாரண மக்களிடையே கூட டிஜிட்டல் முறையில் தங்கம் மற்றும் வெள்ளியைச் சேமிக்கும் ஆர்வம் பெருகியிருப்பதை உணர்த்துகிறது.
பங்குச்சந்தையை விஞ்சிய முதலீடுகள்
பொதுவாக இந்திய முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் (Equity) அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், கடந்த ஜனவரி மாதம் ஒரு சுவாரஸ்யமான திருப்பம் ஏற்பட்டது. ஜனவரியில் ஈக்விட்டி ஃபண்டுகளில் வந்த முதலீடுகளை விட (ரூ. 24,029 கோடி), தங்கம் இடிஎஃப்-களில் வந்த முதலீடுகள் (ரூ. 24,039 கோடி) அதிகமாக இருந்தன. அதேபோல் வெள்ளி இடிஎஃப்-களும் ரூ. 9,463 கோடியை ஈர்த்துள்ளன.
அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகிதக் கொள்கைகள், இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகச் சூழலில் நிலவும் குழப்பங்கள் மற்றும் பங்குச் சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்கள் போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தைப் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளியை நோக்கித் திருப்பியுள்ளனர். இதனால் ETF எனப்படும் முதலீட்டுத் திட்டங்களின் மொத்த சொத்து மதிப்பு (AUM), 2026 ஜனவரி மாதத்தில் 3 லட்சம் கோடி ரூபாயைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
நிபுணர்களின் கருத்து
இது குறித்து பல்வேறு தங்க நிபுணர்கள், பங்கு சந்தை வல்லுனர்கள் கூறுகையில், முதலீட்டாளர்கள் தற்காலிகமாகப் பங்குச் சந்தையில் நிலவும் அபாயத்தைக் குறைக்கப் பாதுகாப்பு கருதித் தங்கத்திற்கு மாறியுள்ளதாகத் தெரிவித்தார். ஒரு முதலீட்டுத் தொகுப்பில் (Portfolio) 10 முதல் 15 சதவீதம் வரை தங்கம் மற்றும் வெள்ளி இருப்பது அவசியமானது என்றாலும், ஒரே நேரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் படிப்படியாக முதலீடு செய்வதே சிறந்தது.
கடந்த ஓராண்டில் தங்கம் மற்றும் வெள்ளி கொடுத்த நல்ல லாபத்தைப் பார்த்துவிட்டுப் பல முதலீட்டாளர்கள் இதில் இணைந்துள்ளனர் என்று குறிப்பிட்டார். இது ஒரு நீண்ட கால மாற்றமாக இருப்பதை விட, சந்தையின் தற்போதைய போக்கைப் பார்த்து முதலீடு செய்யும் ஒரு தற்காலிகச் செயல்பாடாகவே தெரிவதாகவும் தெரிவித்து உள்ளனர்.
தற்போது தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சில மாற்றங்கள் காணப்பட்டாலும், நீண்ட கால அடிப்படையில் இவை போர்ட்ஃபோலியோவை நிலைப்படுத்தும் ஒரு கருவியாகவே நிபுணர்களால் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications