65 வருடங்களுக்கு பின் நடந்த அதிசயம்.. உலக அளவில் தங்கம் தந்த சர்ப்ரைஸ்.. ஒரே அடியாக மாறிடுச்சே
சென்னை: 2024-ஆம் ஆண்டில், தங்கத்தின் மீது மத்திய வங்கிகளின் ஆர்வம் அதிகரித்ததினால், உலகளாவிய அளவில் இருப்பு சொத்துகளில் தங்கம் இரண்டாவது இடத்தில் இருப்பதாக ஐரோப்பிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதாவது டாலர் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில யூரோ இருந்தது. அதை பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை தங்கம் பிடித்துள்ளது.
தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும் மத்திய வங்கிகள்
மத்திய வங்கிகள் தங்கத்தை கையிருப்பில் வைத்திருப்பது 1960-களின் அளவிற்கு மீண்டும் வந்துள்ளது. கிட்டத்தட்ட 65 வருடங்களுக்கு பின் இந்த மாற்றம் நடக்கிறது. தங்கத்தின் விலை உயர்ந்ததால், அமெரிக்க டாலருக்கு அடுத்தபடியாக தங்கம் மதிப்புமிக்க சொத்தாக உள்ளது என்று ஐரோப்பிய மத்திய வங்கி கூறியுள்ளது.
2023-ஆம் ஆண்டில், தங்கம் மற்றும் யூரோ இரண்டும் உலகளாவிய அதிகாரப்பூர்வ கையிருப்பில் சராசரியாக 16.5% ஆக இருந்தது. 2025-ஆம் ஆண்டில், இது யூரோவுக்கு 16% ஆகவும், தங்கத்துக்கு 19% ஆகவும் மாறியது. அமெரிக்க டாலர் 47% ஆக இருந்தது. பணவீக்கம் காரணமாக யூரோ மதிப்பு குறைவதால் மத்திய வங்கிகள் டாலர் மற்றும் தங்கம் போன்ற சொத்துகளை சேர்த்து வைத்திருக்கின்றன.
தங்கம் நீண்ட காலத்திற்கு மதிப்பு கொடுக்கும் மற்றும் நிலைத்தன்மையற்ற சூழ்நிலைகளிலும் தாக்குப்பிடிக்கும் தன்மை கொண்டது. தற்போது மத்திய வங்கிகள் உலகளவில் தேவைப்படும் தங்கத்தில் 20%-க்கும் அதிகமாக கையிருப்பில் வைத்திருக்கின்றன. இது 2010-களில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே இருந்தது.
தங்கம் வாங்கும் உலக நாடுகள்
உலகம் முழுக்க இருக்கும் மத்திய வங்கிகள் அடுத்தடுத்து தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகளவில் மத்திய வங்கிகள் வைத்திருக்கும் மொத்த தங்கம் 2009 ஆம் ஆண்டில் 26,000 டன்னாக இருந்தது, 2024 ஆம் ஆண்டில் 32,000 டன்னாக அதிகரித்துள்ளது. கடந்த 4 மாதங்களில் மட்டும் இவர்கள் இரண்டரை டன்னுக்கு மேல் தங்கம் வாங்கி உள்ளனர்.
இந்தியா உட்பட உலகின் டாப் 10 மத்திய வங்கிகள் இதில் பெரும்பகுதியை வைத்துள்ளன. அதாவது 76% தங்கத்தை 10 நாடுகள் வைத்திருக்கின்றன. உலக தங்க கவுன்சில் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் , 2009 முதல் 2024 வரை மத்திய வங்கிகளின் தங்க இருப்பு ஆண்டுதோறும் 4.1% வளர்ந்ததாகக் கூறுகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜப்பான், நெதர்லாந்து, சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகியவை முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.

ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தங்கம் வாங்குவதை நாளுக்கு நாள் உயர்த்த தொடங்கி உள்ளது. தாறுமாறாக தங்கம் வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது. 2024-25 நிதியாண்டில் மட்டும், அது 57.5 டன் தங்கத்தை இந்தியா வாங்கியது, இது 2017 க்குப் பிறகு இரண்டாவது அதிகபட்ச வருடாந்திர கொள்முதல் ஆகும்.
இந்தியா கடந்த சில மாதங்களாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது. உலக அளவில் பொருளாதாரம் மிகவும் மோசமாகி வருகிறது. சர்வதேச பொருளாதாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத மோசமான சூழல் நிலவி வருகிறது. பல நாடுகளும் தங்கத்தை இதனால் வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில், RBI-யின் தங்க இருப்பு 35% அதிகரித்து, FY20 இல் 653 டன்னிலிருந்து மார்ச் 2025 இல் 880 டன்னாக உயர்ந்துள்ளது.
உலக தங்க தரவரிசையில் இந்தியாவும் உயர்ந்துள்ளது - தங்க இருப்பு அடிப்படையில் உலகில் ஏழாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2015 இல் பத்தாவது இடத்தில் இருந்து. 10 வருடங்களில் 3 இடங்கள் மேலே வந்துள்ளது. உலக தங்க கவுன்சிலின் கூற்றுப்படி, இந்தியாவின் மொத்த அந்நிய செலாவணி இருப்பில் தங்கம் இப்போது 11.35% ஆகும், இது 2021 இல் 6.86% ஆக இருந்தது.
RBI ஏன் அதிக தங்கத்தை வாங்குகிறது?:
சமீபத்திய ஆண்டுகளில் டாலர் நிலையற்றதாக உள்ளது, மேலும் தங்கம் மிகவும் நிலையான பொருளாதாரத்தை வழங்குகிறது. அமெரிக்க டாலர் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் இருப்பு நாணயமாக இருந்தாலும், அதன் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக டாலரை நம்ப முடியாது. அமெரிக்க பங்கு சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக டாலர் இருப்புக்களை வைத்திருக்கும் மத்திய வங்கிகள் கடுமையான பாதிப்புகளை சந்திக்கின்றன.
ஏனென்றால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தால் பணத்தின் மதிப்புகள் மோசமாக சரியும். ஆனால் தங்கத்தின் மதிப்பு உயரும். பொருளாதார சரிவுகளில் போது தங்கத்தின் மதிப்பே ஒரு நாட்டை காக்கும்.இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியா கடந்த சில மாதங்களாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications