மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?
சென்னை: சமீப காலமாக தங்கம் விலை குறைந்துவிட்டதே என பலரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். முக்கியமாக கடந்த 2 வாரங்களாக தங்கம் விலை சரிவை சந்தித்தது. கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,500 அமெரிக்க டாலரைத் தாண்டி புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில், தற்போது சுமார் 20 சதவீதம் வரை சரிந்து 4,473 டாலருக்குப் பகிரங்க வர்த்தகமாகி வருகிறது.
சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 காரட் தங்கம் விலை ₹15,490 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 காரட் தங்கம் விலை ₹14,199 ஆகவும், 1 கிராம் 18 காரட் தங்கம் விலை ₹11,909 ஆகவும் உள்ளது.

இந்த விலை வீழ்ச்சியால் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் ஏமாற்றம் அடைய வேண்டுமா? அல்லது இது இயல்பான சந்தை சுழற்சியா? பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் விரிவாகப் பார்ப்போம்.
கடந்த 20 ஆண்டுகளின் தங்க விலை வரலாற்றை நோக்கினால் ஒரு தெளிவான பாடம் புலப்படும். தங்கம் விலை வேகமாக உயர்ந்த பிறகு பெரிய சரிவைச் சந்திப்பது வழக்கமான நிகழ்வு. 2022 செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை தங்க விலை 245 சதவீதம் உயர்ந்தது. ஜனவரி 29 அன்று ஒரு அவுன்ஸ் தங்கம் 5,594.82 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது. வேகமாக மேலேறும் எதுவும் கீழே இறங்க வேண்டும் என்பது சந்தை விதி. எனவே வரும் மாதங்களில் அல்லது அடுத்த சில ஆண்டுகளில் தங்க விலை மேலும் சற்று குறையும் வாய்ப்பு உள்ளது. அதன் பின்னரே அது மீண்டும் ஏறும் என எதிர்பார்க்கலாம்.
இந்த முறை தங்க விலை ஏன் இவ்வளவு உயர்ந்தது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். மத்திய வங்கிகளின் தீவிர கொள்முதல் முக்கியக் காரணம். உலக நாடுகளின் மத்திய வங்கிகள், குறிப்பாக இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்டவை தங்களது கையிருப்பில் அதிகளவு தங்கத்தை வாங்கிச் சேமித்தன. இந்தியா மற்றும் சீனா போன்ற தங்கத்தை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் மக்களின் கொள்முதல் ஆர்வமும் உச்சத்தில் இருந்தது.
மேலும் உலக அரசியல் பதற்றம், உக்ரைன்-ரஷ்யா போர், மிடில் ஈஸ்ட் மோதல்கள், பணவீக்க பயம் ஆகியவை முதலீட்டாளர்களை 'பாதுகாப்பான புகலிடம்' என அழைக்கப்படும் தங்கத்தை நோக்கி ஓடச் செய்தன. அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபரானதால் டாலர் மதிப்பு பலவீனமடையும் என்ற அச்சமும் தங்க விலையை உயர்த்த உதவியது.
ஆனால் தற்போது சூழல் மாறியுள்ளது. உலக தங்க கவுன்சில் அறிக்கைப்படி, உயர் விலையால் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மத்திய வங்கிகளின் கொள்முதல் ஒரு காலாண்டுக்கு 300 டன்னிலிருந்து 200 டன்னாகக் குறைந்துள்ளது. சீனாவில் நகை வாங்கல் 31 சதவீதமும், இந்தியாவில் 19 சதவீதமும் வீழ்ச்சியடைந்தது. இந்திய அரசும் தங்க இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது.
இதனால் உலகளாவிய தங்க தேவை முதல் மூன்று மாதங்களில் 9 சதவீதம் சரிந்து 1,195.9 டன்னாகக் குறைந்துள்ளது.
இத்தகைய தேவை வீழ்ச்சியிலும் தங்க விலை 20 சதவீத சரிவோடு நிலைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தங்க விலை அமெரிக்க வட்டி விகிதக் கொள்கை மற்றும் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்தே ஏற்ற இறக்கத்தைச் சந்திக்கிறது. அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றம் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தினால் வட்டி விகித உயர்வு எதிர்பார்ப்பு அதிகரிக்கும். இது தங்கத்தில் முதலீட்டை குறைத்து விலையை அழுத்தும். போர் முடிவுக்கு வந்து எண்ணெய் விலை குறைந்தால் வட்டி விகிதக் குறைவு எதிர்பார்ப்பில் தங்க விலை மீண்டும் உயரும்.
தங்க முதலீட்டாளர்கள் இப்போது அவசரப்படத் தேவையில்லை. சந்தை மாற்றக் கட்டத்தில் உள்ளது. உலகப் பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல் சீரடையும் வரை ஏற்ற இறக்கம் தொடரும். நீண்ட கால நோக்கில் தங்கம் எப்போதும் நம்பகமான முதலீடாகவே திகழ்கிறது. வரலாறு காட்டும் பாடத்தை நினைவில் கொண்டு, அவசர முடிவுகள் எடுக்காமல் பொறுமையுடன் காத்திருப்பது புத்திசாலித்தனம்.












Click it and Unblock the Notifications