தங்கம் விலையில் இன்று பூகம்பம்.. அமெரிக்கா பகீர்.. ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால்.. எல்லாம் மாறுது
சென்னை: மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா என்று உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ள செய்தி உலக சந்தையை உலுக்கியிருக்கிறது. இதன் எதிரொலியாக, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
பெரிய எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட 'இஸ்லாமாபாத் பஞ்சாயத்து' இப்போது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் போல முடிவின்றி நிற்கிறது.

15 மணி நேர மாரத்தான் பேச்சுவார்த்தை, ட்ரம்ப்பின் அதிரடி ட்வீட்கள், ஈரானின் பிடிவாதம் என களைகட்டிய அமைதிப் பேச்சுவார்த்தையின் முதல் அத்தியாயம், ஒரு 'சாலிட்' முடிவை எட்டாமலேயே முடிந்திருக்கிறது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தனது குழுவுடன் வாஷிங்டன் திரும்பியிருப்பது, 'அமைதி வருமா அல்லது போர் தொடருமா?' என்ற மில்லியன் டாலர் கேள்வியை அப்படியே விட்டுச் சென்றிருக்கிறது.
தங்கம் விலை வீழ்ச்சி: என்ன நடக்கிறது?
இதற்கு இடையே கடந்த வாரம் ஓரளவு ஏற்றம் கண்டிருந்த தங்கம், திங்களன்று வர்த்தகத் தொடக்கத்திலேயே சுமார் 2.2% வரை சரிந்தது. ஒரு அவுன்ஸ் தங்கம் $4,650-க்கும் கீழே சென்றதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பொதுவாக போர்ச் சூழல் நிலவும்போது தங்கம் விலை உயரும் (Safe Haven), ஆனால் இந்த முறை நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. இதற்குப் பின்னால் இருக்கும் 'பொருளாதார லாஜிக்' இதுதான்:
பணவீக்க அச்சம்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்தம் எட்டப்படாத நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) முற்றுகையிடப் போவதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.
எரிசக்தி அதிர்ச்சி: உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு செல்லும் இந்தப் பாதையில் தடை ஏற்பட்டால், எரிபொருட்களின் விலை விண்ணைத் தொடும். இது உலகளாவிய பணவீக்கத்தை (Inflation) மீண்டும் தூண்டிவிடும்.
ஹார்முஸ் ஜலசந்தி: முடங்கும் கடல் வழி!
"ஈரானுக்கு சுங்கம் (Toll) செலுத்திவிட்டு வரும் எந்தக் கப்பலையும் அமெரிக்கா இடைமறிக்கும்" என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். திங்கள் காலை 10 மணி முதல் இந்த முற்றுகை அமலுக்கு வருகிறது. உலக நாடுகளின் எரிசக்தி தேவையைத் தீர்மானிக்கும் இந்த முக்கிய வழித்தடம் முடங்குவது, சர்வதேசப் பங்குச்சந்தைகளைப் படுபாதாளத்திற்குத் தள்ளியுள்ளது.
தங்கம் வீழக் காரணம் என்ன?
வலுவாகும் டாலர்: போர் பதற்றத்தால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக டாலரைத் தேர்வு செய்கின்றனர். இதனால் டாலரின் மதிப்பு 0.5% உயர்ந்துள்ளது. டாலர் மதிப்பு உயர்ந்தால், டாலரில் விலை நிர்ணயிக்கப்படும் தங்கத்தின் மதிப்பு குறையும்.
வட்டி விகித கணக்கு: எரிபொருள் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும் என்பதால், அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்காது; மாறாக, உயர்த்தவும் வாய்ப்புள்ளது. வட்டி உயரும் சூழலில், வட்டி தராத தங்கம் போன்ற முதலீடுகளில் இருந்து பணத்தை எடுத்துவிட்டு, மற்ற முதலீடுகளை நோக்கிப் பெரிய நிறுவனங்கள் நகர்வது வழக்கம்.
நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
ஆறு வாரங்களாகத் தொடரும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான போர், தற்போது ஓர் உலகளாவிய பொருளாதாரப் போராக உருவெடுத்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு ஒருபுறம் சாமானியர்களைப் பாதிக்கும் என்றால், மறுபுறம் வட்டி விகித மாற்றங்கள் தங்கம் மற்றும் பங்குச்சந்தையில் பெரும் ஏற்ற இறக்கங்களை உருவாக்கும்.
தற்போதைய சூழலில், அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கினால் ஒழிய, சந்தையில் இந்த 'பதற்ற மேகங்கள்' கலைய வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.














Click it and Unblock the Notifications