Gold Silver Price: உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை.. கொஞ்சமாவது குறைய சான்ஸ் இருக்கா? தங்க நகை வியாபாரிகள் சொல்வது என்ன?
சென்னை: தங்கம், வெள்ளி விலை (Gold Silver Price) தினம் தினம் புது உச்சம் தொட்டு நாளுக்கு நாள் பேரதிர்ச்சி கொடுத்து வரும் சூழலில், எப்போதாவது குறைவதற்கு சான்ஸ் இருக்கிறதா என சாமானிய மக்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். ஆனால் இப்போதைக்கு குறைய வாய்ப்பு இல்லை என்றும், மேலும் அதிகரிக்கவே சான்ஸ் இருப்பதாக தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார்.
தங்கம், வெள்ளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு ஒரே அடியாக உயர்ந்துகொண்டே போகின்றது. தினம் தினம் புது உச்சம் தொடும் வகையிலேயே உயர்வானது இருந்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் தங்கம் வெள்ளி ஆபரணங்களை வாங்க முடியா நிலை ஏற்படுமோ என அச்சப்படுகின்றனர்.

பேரதிர்ச்சி தந்த தங்கம் விலை
அதிலும் குறிப்பாக தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவு தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு சவரன் தங்கம் ரூ.57 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. அடுத்த ஒரு ஆண்டில் அதாவது கடந்த 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்தை கடந்துவிட்டது. கிட்டத்தட்ட ஒரே ஆண்டில் 40 ஆயிரம் உயர்ந்ததே வரலாற்று உயர்வாக பார்க்கப்பட்டது.
ஆனால் இதெல்லாம் ஒரு விஷயமா என நடப்பு ஜனவரி மாதம் தங்க நகை பிரியர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மிகப்பெரிய அளவில் விலை உயர்வானது இந்த மாதத்தில் இருந்து வருகிறது. அதாவது ஜனவரி 1 ஆம் தேதி ரூ. 96 ஆயிரம் இருந்த நிலையில் இன்றைய தினம் ஒரு சவரன் ரூ.1,34,440 ஐ தொட்டுள்ளது.
ஒரு கிராம் 400ஐ தாண்டியது
ஒரு வருஷத்திற்கு 40 ஆயிரம் உயர்ந்ததே வரலாற்று உயர்வாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மாதத்திற்கே 38 ஆயிரம் கிட்டத்தட்ட 40 ஆயிரம் உயர்ந்துவிட்டது. இதனால் நகை பிரியர்கள் பேரதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தங்கம் விலை தான் இப்படி என்றால் வெள்ளி விலையும் நாளுக்கு நாள் பேரதிர்ச்சியை தந்து வருகிறது. வெள்ளி விலை நேற்று கிராம் 400 ஐ தொட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 25 அதிகரித்தது.
இன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.25 அதிகரித்து 425-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு கிராம் 100 என்ற அளவில் இருந்த நிலையில் 4 மடங்கு அதிகரித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வெள்ளி விலை குறைய வாய்ப்பு இல்லை என தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-
வெள்ளி விலை குறையாது
வெள்ளி விலை இப்போ ஒரு கிராம் 400 என்று நீங்க நினைக்கலாம். ஆனால் அது 500 ரூபாயை தாண்டும். இதோடு நின்றுவிடும் எனவும் சொல்ல முடியாது. தொடர்ந்து அதிகரிக்க தான் வாய்ப்பு இருக்கிறது.. தங்கம் என்பது ஆபரணப் பொருள்.. முதலீடு அவ்வளவு தான். ஆனால் வெள்ளி என்பது ஆபரணம், முதலீடு, மூலப்பொருளாக இருக்கிறது. பல பொருட்களுக்கு வெள்ளி என்பது மூலப்பொருளாக இருந்து வருவதால் இதன் தேவையானது நாளுக்கு நாள் அதிகரிக்கும்.
வெள்ளியில் முதலீடு செய்வது தான்
மின்சார வாகனங்கள், சோலார் பேனல்களில் வெள்ளியின் பயன்பாடு அதிக அளவி தேவைப்படுகிறது. 80 சதவீத தொழிற்சாலைகளுகும் வெள்ளிகள் பயன்பாடு இருந்துகொண்டு இருக்கிறது. முன்னாடி எல்லாம் 200 கிராமுக்கு கொலுசுகள் போடுவாங்க.. ஆனால் இப்போ 30 கிராம், 40 கிராம்களுக்கே வெள்ளி கொலுசுகள் வந்துவிட்டன.
மெட்டியும் அப்படித்தான்.. இப்போ 5 கிராமுக்கு கூட கிடைக்கும். மக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ப வெள்ளி பொருட்கள் இருந்துகொண்டே இருக்கும். வெள்ளியில் முதலீடு செய்வதே சிறந்தது என நான் சொல்வேன்.. வெள்ளி, தங்கம் இரண்டிலும் நீங்கள் ஒரு லட்சம் முதலீடு செய்தால், வெள்ளியில் தான் லாபம் அதிகம் கிடைக்கும்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications