கில்லி மாதிரி.. சொல்லி அடிக்கும் வெள்ளி! சைலண்டாய் சவூதி பார்த்த வேலை! மலை மலையாய் கொட்டிக் கிடக்கு!
சென்னை: கடந்த சில மாதங்களாகவே தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்து வருகிறது. தங்கம் ஆபரணத்துக்காக முதலீடு செய்யப்படும் நிலையில் வெள்ளி விலை உயர என்ன காரணம் என பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கிறது. உண்மையில் வெள்ளியை வெறும் ஆபரணமாக மட்டுமே முதலீட்டாளர்கள் பார்ப்பதில்லை. மின்சார தயாரிப்பு, ரோபோ தயாரிப்பு, இ- ஸ்கூட்டர் ஆகியவற்றின் தயாரிப்புகளில் வெள்ளியின் பங்களிப்பு மிக அதிகம். அதனால் தான் அதனை ஒரு ஆபரணமாக மட்டும் கருதாமல் மிகச் சிறந்த முதலீட்டு உலோகமாக முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.
தங்கம் போலவே, தற்போது வெள்ளியும் சர்வதேச சந்தையில் வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்து வருகிறது. சில மாதங்களாக தொடர் உயர்வை பதிவு செய்து வரும் வெள்ளி விலை, உலக பொருளாதார வட்டாரங்களையும் முதலீட்டாளர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
தங்கம் போலவே "பாதுகாப்பான முதலீடு" எனக் கருதப்படும் வெள்ளி, இப்போது தொழில்துறைகளிலும் முக்கிய பங்கு வகிப்பதால், அதன் தேவை பல மடங்கு உயர்ந்துள்ளது. சீனா மற்றும் பல உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களின் தங்க கையிருப்புகளை அதிகரித்து வருகிறது.

வெள்ளி விலை
தங்கத்தின் விலையை உயர்த்தியது போலவே, சில நாடுகள் வெள்ளியையும் கையிருப்பாக சேர்த்துக் கொள்வது இந்த விலை உயர்வுக்குக் காரணமாக உள்ளது. குறிப்பாக சவூதி அரேபிய மத்திய வங்கி, தங்கத்துக்கு மாற்றாக வெள்ளியை வாங்கி கையிருப்பை அதிகரித்து வருகிறது. இதே போக்கை பின்பற்ற பல உலக நாடுகளும் முனைந்துள்ளன. ஆனால், வெள்ளி விலை உயர்வுக்கு இதுவே ஒரே காரணம் அல்ல. உலகளவில் வெள்ளி உற்பத்தி அளவு குறைந்து வருவதும், அதே நேரத்தில் தேவைகள் பெரிதாக உயர்ந்திருப்பதும் முக்கிய பங்காற்றுகிறது.
வெள்ளி உயர்வு
குறிப்பாக பசுமை எரிசக்தி வளர்ச்சி, சூரிய ஒளி மின்தகடுகள் (Solar Panels) உற்பத்தி, மின்சார வாகனங்கள், 5ஜி தொழில்நுட்பம், செமிகண்டக்டர் உற்பத்தி போன்ற துறைகள் அனைத்திலும் வெள்ளி அத்தியாவசியமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு சூரிய ஒளி தகடுக்கு சராசரியாக 15 முதல் 20 கிராம் வரை வெள்ளி தேவைப்படுகிறது. உலகம் முழுவதும் தினசரி லட்சக்கணக்கான சோலார் தகடுகள் தயாரிக்கப்படுவதால், வெள்ளியின் தேவை அதிகரித்தே வருகிறது. அதேபோல், ஒரு மின்சாரக் காரில் 25 முதல் 50 கிராம் வரை வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. இது சாதாரண பெட்ரோல் காரை விட மூன்று மடங்கு அதிகம்.
பசுமை ஆற்றல்
இதனால் மின்சார வாகன உற்பத்தி உயர்ந்தால், வெள்ளி தேவை தானாகவே ஏறுகிறது. மேலும், மின்சாரத்தை கடத்துவதில் மிகச் சிறந்த உலோகமாக வெள்ளி விளங்குகிறது. எனவே மொபைல் போன்கள், சிப் உற்பத்தி, 5ஜி டவர்கள் போன்ற தொழில்நுட்ப வசதிகளில் வெள்ளியின் பங்கு மாற்ற முடியாதது. மருத்துவத் துறையிலும் வெள்ளி முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. கிருமிநாசினி தன்மையால் வெள்ளி மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் மற்றும் சிகிச்சை கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பல்வேறு பயன்பாடுகள் காரணமாகவே, வெள்ளி விலை கடந்த பத்து வாரங்களாக இடைவிடாது உயர்ந்து வருகிறது.
முதலீட்டு உலோகம்
இருப்பினும் பொருளாதார நிபுணர்கள், இது குறுகிய காலத்தில் சில மாறுபாடுகளைக் காணக்கூடும் என எச்சரிக்கின்றனர். இருப்பினும், நீண்டகால முதலீட்டாளர்களுக்கு வெள்ளி இன்னும் ஒரு நம்பகமான முதலீட்டு வாய்ப்பாகவே உள்ளது. பல நூற்றாண்டுகளாக ஆபரணங்கள், நாணயங்கள், தொழில்துறை பொருட்கள் எனப் பல வடிவங்களில் வெள்ளி மனித வாழ்வின் அங்கமாக இருந்து வருகிறது. அதன் அரிதான தன்மை, பிரகாசமான நிறம், நீடித்த தன்மை மற்றும் பல்துறை பயன்பாடு ஆகிய காரணங்களால், வெள்ளி எப்போதும் தங்கத்துக்கு அடுத்த முக்கிய விலைமதிப்புள்ள உலோகமாகவே இருந்து வந்துள்ளது.
வெள்ளி சந்தை
எனவே, தங்கம் போலவே வெள்ளியும் உலக சந்தையின் கவனத்தை ஈர்த்து வருவது, எதிர்காலத்தில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் பசுமை எரிசக்தி மாற்றங்கள் எந்த திசையில் நகர்கின்றன என்பதன் அடிப்படையில் அதன் விலை இன்னும் உயரும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கணிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications