ஒரே இடத்தில்.. 4000 டன் தங்கத்தை குவித்து வைத்த அமெரிக்கா.. மிகப்பெரிய மூவ்.. என்னங்க நடக்குது?
நியூயார்க்: அமெரிக்க கருவூலத்தின் தங்க இருப்பு மதிப்பு 1 டிரில்லியன் டாலரைத் தாண்டிவிட்டது. ஃபோர்ட் நாக்ஸ் கருவூலத்தில் மட்டும் 4000 டன் தங்கத்தை அமெரிக்கா சேமித்து வைத்து உள்ளது.
இந்த ஆண்டு தங்கத்தின் விலை 45 சதவீதம் உயர்ந்து, ஒரு அவுன்ஸ் 3,825 டாலராக எட்டியுள்ளது. இதன் விளைவாக, அமெரிக்க அரசாங்கத்தின் தங்க இருப்பு மதிப்பு இதுவரை இல்லாத சாதனை அளவை எட்டியுள்ளது.

அமெரிக்க கருவூலத்தின் தங்க இருப்பு
அமெரிக்கா உலகின் மிகப்பெரிய அதிகாரப்பூர்வ தங்க இருப்பைக் கொண்டுள்ளது. 8,133 டன்களுக்கும் அதிகமான தங்கம் இங்கு இருப்பில் உள்ளது. இது உலகளாவிய புல்லியன் சந்தைகளில் அமெரிக்காவை ஒரு முக்கிய சக்தியாக ஆக்குகிறது.
அமெரிக்க கருவூலத்தின் தங்க இருப்பு மதிப்பு 1 டிரில்லியன் டாலரை தாண்டியுள்ளது. இது அரசாங்கத்தின் இருப்புநிலைக் குறிப்பில் காட்டப்பட்டுள்ள மதிப்பை விட 90 மடங்கு அதிகம். அமெரிக்கா 8,133 டன் தங்க இருப்புடன் உலகின் மிகப்பெரிய தங்க இருப்பு நாடாக விளங்குகிறது. கருவூலத் தரவுகளின்படி, அமெரிக்காவின் மொத்த தங்க இருப்பு சுமார் 261.5 மில்லியன் அவுன்ஸாக உள்ளது.
ஒரே கருவூலத்தில் 4000 டன் தங்கம்
ஃபோர்ட் நாக்ஸ் 147,341,858.382 ட்ராய் அவுன்ஸ் தங்கத்தை, அதாவது சுமார் 4,000 டன்கள், வைத்திருப்பதாகக் கூறுகிறது. அதே சமயம் உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் 2024 ஆம் ஆண்டில் 84 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை வாங்கியுள்ளன. அமெரிக்க கருவூலப் பத்திரங்கள் மற்றும் டாலரின் நிலையற்ற தன்மை காரணமாக தங்கம் மத்திய வங்கிகளுக்கு முக்கியமான முதலீடாக மாறியுள்ளது.
டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட் ஜூலை 2025 அறிக்கையின்படி, உலக தங்கச் சந்தையில் இந்தியாவின் பங்கு 15 சதவீதமாக உள்ளது, இதன் மதிப்பு சுமார் 23 டிரில்லியன் டாலர்கள் ஆகும். தற்போதுள்ள உலக அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் 12.5 டிரில்லியன் டாலர்கள் என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதுவரை வெட்டி எடுக்கப்பட்ட தங்கத்தில் 65 சதவீதம் நகைகள் வடிவில் உள்ளது. இந்தியா கடந்த சில மாதங்களாக தங்கத்தை வாங்கி குவிக்கத் தொடங்கி உள்ளது. உலக அளவில் பொருளாதாரம் மோசமாகி வருவதால், சர்வதேச பொருளாதாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத சூழல் நிலவி வருகிறது. பல நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கத் தொடங்கி உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில், ரிசர்வ் வங்கியின் தங்க இருப்பு 35% அதிகரித்து, 2020 நிதியாண்டில் 653 டன்னிலிருந்து மார்ச் 2025 இல் 880 டன்னாக உயர்ந்துள்ளது.
தங்க இருப்பு: இந்தியாவின் நிலை
உலக தங்க தரவரிசையில் இந்தியாவும் உயர்ந்துள்ளது. தங்க இருப்பு அடிப்படையில் உலகில் ஏழாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2015 இல் பத்தாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. உலக தங்க கவுன்சிலின் கூற்றுப்படி, இந்தியாவின் மொத்த அந்நிய செலாவணி இருப்பில் தங்கம் இப்போது 11.35% ஆகும், இது 2021 இல் 6.86% ஆக இருந்தது. இந்தியாவின் வேகமான வளர்ச்சி சீனாவிற்கு சிக்கலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன .
ரிசர்வ் வங்கி தங்கம் வாங்குவது ஏன்?
சமீபத்திய ஆண்டுகளில் டாலர் நிலையற்றதாக உள்ளது, மேலும் தங்கம் மிகவும் நிலையான பொருளாதாரத்தை வழங்குகிறது. அமெரிக்க டாலர் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் இருப்பு நாணயமாக இருந்தாலும், அதன் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக டாலரை நம்ப முடியாத நிலை உள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக டாலர் இருப்புக்களை வைத்திருக்கும் மத்திய வங்கிகள் கடுமையான பாதிப்புகளை சந்திக்கின்றன.
பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தால் பணத்தின் மதிப்புகள் சரியும். ஆனால் தங்கத்தின் மதிப்பு உயரும். பொருளாதார சரிவின்போது தங்கத்தின் மதிப்பே ஒரு நாட்டைக் காக்கும். இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியா கடந்த சில மாதங்களாக தங்கத்தை வாங்கி குவிக்கத் தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications