Karunjeegaram ஆஸ்துமா முதல் கேன்சர் வரை அண்டவிடாது! கருஞ்சீரகத்தை எப்படி சாப்பிடலாம் தெரியுமா?
சென்னை: தினமும் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தை சாப்பிடுங்கள், அதில் இத்தனை மருத்துவ குணங்களா என நீங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு இருக்கும். கருஞ்சீரகம் ஆஸ்துமாவை குணப்படுத்தும், ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இந்த கருஞ்சீரகம் எண்ணற்ற நன்மைகளை செய்து வருகிறது.
இது குறித்து கவுசியின் களம் என்பவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கருஞ்சீரகத்தை, ஆங்கிலத்தில் ஃபென்னல் பிளவர் என்று அழைக்கிறோம். பிளாக் காரவே நட்மக் பிளவர், ரோமன் கொரியாண்டர் என அவற்றின் சுவைகளை வைத்து பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. கருஞ்சீரகம், பல்லாயிரம் ஆண்டுகளாக மருத்துவத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. கருஞ்சீரகத்தை, வறுத்தோ அல்லது வறுக்காமலேயோ நாம் நம் உணவுகளில் பயன்படுத்தி வருகிறோம்.

கருஞ்சீரகத்தில், நார்ச்சத்துக்கள், அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகளவில் இருப்பதால், அது ஆற்றல் மையமாக விளங்கி வருகிறது.
இதுமட்டுமல்லாது கருஞ்சீரகத்தில், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, நியாசின், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் உள்ளன. கருஞ்சீரக எண்ணெயில், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், மினரல்கள் உள்ளன. கருஞ்சீரக எண்ணெயில், 17 சதவீத புரதமும், 26 சதவீதம் கார்போஹைட்ரேட்டும் மற்றும் 57 சதவீதம் தாவர எண்ணெய்களும் உள்ளன.
கருஞ்சீரகத்தை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், அது நம் நினைவுத்திறனை அதிகரிக்க உதவுகிறது. வெறும் வயிற்றில் இதனை தினசரி உண்டுவந்தால், மூளையின் செயல்பாடு சிறந்த விதத்தில் இருக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவுத்திறன் குறைவுக்கு இது சரியான தீர்வாக அமையும். கருஞ்சீரகத்தை, புதினா இலைகள் சேர்த்து பயன்படுத்தி வந்தால், அது அல்சைமர் போன்ற நரம்பு மண்டல பாதிப்புகளுக்கான சிறந்த தீர்வாக அமையும் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டைப் 2 நீரிழிவு நோயாளிகள், கருஞ்சீரகத்தை சாப்பிட்டு வந்தால், அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் நல்ல பலனைப்பெற, பிளாக் டீ உடன் கருஞ்சீரகத்தை சேர்த்து உண்பதால் நல்ல பலனை பெறலாம்.
கருஞ்சீரக விதைகள், இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. இரத்தத்தில், கெட்ட கொழுப்புகளின் அளவை கட்டுப்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. கருஞ்சீரகத்தை, பாலில் கலந்து குடித்தால், நல்ல பலனை பெறலாம்.
கருஞ்சீரக விதைகளில், ஆன்டி - இன்பிளமேட்டரி பண்புகள் உள்ளதால், உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க உதவுகிறது. கருஞ்சீரக எண்ணெயை, கை, கால் மூட்டுகளில் தடவுவதன் மூலம், நல்ல பலனை பெறலாம். உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க, கருஞ்சீரக எண்ணெயை பயன்படுத்துமாறு, ஆயுர்வேத மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.
கருஞ்சீரக எண்ணெய், நமது உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு மட்டுமல்லாது, ரத்த அழுத்த மாறுபாடு ஏற்படாவண்ணம் பாதுகாக்கிறது. உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள், வெதுவெதுப்பான நீரில், கருஞ்சீரக எண்ணெயை கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கருஞ்சீரகம், பற்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த வாய் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் ஈறுகளில் ரத்தப்போக்கு உள்ளிட்டவைகளுக்கும் சிறந்த தீர்வாக அமைகிறது. பல் வலிக்கு உடனடி தீர்வாக கருஞ்சீரகம் விளங்குகிறது. வாய் சம்பந்தமான பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு, அரை தேக்கரண்டி கருஞ்சீரக எண்ணெயை, ஒரு கப் தயிரில் கலந்து அதை தினமும் இரண்டு முறை, ஈறுகளில் தேய்த்து வர பற்கள் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும்.
ஆஸ்துமாவை குணப்படுத்துகிறது
நவநாகரீக உலகில் ஏற்பட்டுள்ள அதீத மாசுவின் காரணமாக, ஆஸ்துமா என்பது தற்போது சாதாரணமாக எல்லாருக்கும் வரும் குறைபாடாக மாறிவிட்டது. ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, கருஞ்சீரக மருத்துவம், இனிய வரப்பிரசாதமாக உள்ளது. வெதுவெதுப்பான நீரில், கருஞ்சீரக எண்ணெய் மற்றும் தேன் கலந்து குடித்துவர நல்ல பலன்கள் கிடைக்கும்.
உடல் எடையை குறைக்க உதவுகிறது
கருஞ்சீரகம், நமது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து, நாம் சிக் ஆகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது. வெதுவெதுப்பான நீரில், கருஞ்சீரகத்தை கலந்து தினமும் குடித்து வர, உடல் எடை குறைப்பில் நல்ல மாற்றத்தை காணலாம்.
தோல் மற்றும் முடி பிரச்சினைகளுக்கு தீர்வு
சருமம் மற்றும் முடிகளின் பராமரிப்பிற்கு, கருஞ்சீரகம் முக்கிய பங்காற்றுகிறது. நல்ல பளபளப்பான சருமத்திற்கு, கருஞ்சீரக எண்ணெயை, எலுமிச்சை சாற்றில் கலந்து முகத்தில் தடவி வர வேண்டும்.
கருஞ்சீரகத்தில் உள்ள சத்துக்கள், முடியின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதோடு மட்டுமல்லாது, முடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது.
சிறுநீரகத்தை பராமரிக்கிறது
நீரிழிவு காரணமாக, சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகளை களைய, கருஞ்சீரகம் பெரிதும் துணைபுரிகிறது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாது, கிரியாட்டினின் சீரம் அளவை அதிகப்படுத்துகிறது. ரத்தத்தில், யூரியாவின் அளவை கட்டுப்படுத்துகிறது. சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் மற்றும் சீறுநீரக பாதிப்புகளுக்கு தீர்வு அளிக்கிறது.
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்
கருஞ்சீரகத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள், உடலில் உள்ள புற்றுநோயை உருவாக்கும் ப்ரீ ரேடிகல்ஸ்களை எதிர்த்து போராடுகிறது. மார்பக புற்றுநோய், செர்விகல் கேன்சர், நுரையீரல் புற்றுநோய், பான்கிரியாட்டிக் புற்றுநோய் உள்ளிட்டவைகளுக்கு சிறந்த தீர்வு அளிக்கிறது.
தலைவலிகளுக்கு தீர்வு அளிக்கிறது
இன்றைய இளைய தலைமுறையினர், தலைவலி உள்ளிட்டவைகளால் அவதிப்படும் நிலையில், அவர்களுக்கு நவீன மருத்துவ முறைகளை காட்டிலும், இயற்கை மருத்துவம், அவர்களுக்கு சிறந்த பயனை அளித்து வருகிறது. தலைவலியால் அவதிப்படுபவர்கள், கருஞ்சீரக எண்ணெயை, முன்தலையில் சிறிது தடவிவர, கடுமையான தலைவலி உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
கருஞ்சீரகத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் பிற நன்மைகள்
மலச்சிக்கலுக்கு குணம் அளிக்கிறது
மூல நோய்க்கு தீர்வு அளிக்கிறது
உடலில் படிந்துள்ள கொழுப்பை குறைக்கிறது
வயிற்றுப் புண்ணை குணப்படுத்துகிறது.
இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மரணத்தை தவிர அனைத்து நோய்களை சரி செய்யக் கூடிய அருமருந்து என சொல்லப்படுகிறது. கர்ப்பிணிகள் கருஞ்சீரகத்தை சாப்பிட்டால் கருவில் உள்ள சிசுவிற்கும் கருப்பைக்கும் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. அது போல் தாய்ப்பால் புகட்டும் தாய்மார்களும் இதை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்கிறார்கள். உடல் எடை குறைய கருஞ்சீரகம், ஓமம், வெந்தயத்தை வறுத்து அரைத்து பொடி செய்து கொண்டு அதை வெந்நீரில் கலந்து இரவு தூங்கப் போகும் முன் குடிக்கலாம் என்கிறார்கள். கருஞ்சீரகமும் வெந்தயமும் சம அளவு- அதில் பாதி ஓமம் எடுத்துக் கொண்டால் போதுமானது.
பொறுப்பு துறப்பு: இயற்கையோடு ஒன்றி இருத்தல் நல்லதுதான். ஆனால் நம் உடல் இந்த உணவு பொருளை ஏற்குமா என்பதை மருத்துவரிடம் கேட்டு அவரது ஆலோசனையின் பேரில் பயன்படுத்தலாம்.












Click it and Unblock the Notifications