உடல் சூடு..பித்த மயக்கம் குணமாக ஏலக்காய் இருக்கே..சளி காய்ச்சல் எல்லாம் ஓடிப்போகுமாம்!
சென்னை: சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஜில்லென்று பானகம் குடித்தால் இதமாகத்தான் இருக்கும். ஏலக்காய், வெல்லம், எலுமிச்சை கலந்த பானகம் அற்புதமான பானம். வீட்டில் செய்வது சுலபம். வாசனை பொருளாக பயன்படுத்தப்படும் ஏலக்காய் மருத்துவ குணம் கொண்டது. ஏராளமான சத்துக்களை கொண்ட ஏலக்காய் பித்த நோய், தலைவலி, சளி காய்ச்சலை கட்டுப்படுத்தும்.
நம்முடைய வீட்டில் உள்ள அஞ்சறைப்பெட்டியில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்ற வாசனை பொருட்களுக்கு தனி இடம் உள்ளது. இனிப்பு பலகாரங்கள் செய்ய பயன்படுத்தப்படும் ஏலாக்காய் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது. ஏலக்காய் விதையில் புரதச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை அடங்கியுள்ளன. ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், பூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன.

சிறிது ஏலப்பொடியை, வெற்றிலையுடன் மென்று தின்றால், அஜீரணம் அகலும். பசி ருசி உண்டாகும்.ஏலப்பொடியுடன், சிறிது மிளகுப்பொடி சேர்த்து, சிறிதளவு துளசிச் சாறு சேர்த்து உட்கொண்டால், கடும் கபம் இளகி வெளிப்பட்டு, நலம் உண்டாகும். பக்க விளைவு இல்லாத இயற்கை மருந்து இது.
இது ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். கல்லீரலில் இருக்கும் தேவையற்ற யூரியா, கால்சியம் மற்றும் இதர நச்சுகளை நீக்கும். குழந்தை பெற்ற பிறகு இளம் தாய்மார்கள் ஏலக்காயை பயன்படுத்தலாம். ஏலக்காய் டீ சாப்பிடுவது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியை அளிக்கும். மன அழுத்தத்துக்கு நல்லது என ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. ஒரு ஏலக்காய் டீ குடித்தால் சளி, காய்ச்சல் குணமடையும்.
ஏலக்காய்த்தூள், டீ தூள் இரண்டையும் சேர்த்து டீ தயாரித்து அத்துடன் தேன் சேர்த்து, தினம் இருவேளை பருகி வர, நரம்புகள் வலுப்படும். தேனுடன், ஏலக்காய்த்தூள் கலந்து, சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கி, நரம்புகள் நன்கு வலிமை அடையும். நான்கு மிளகு, சிறிது ஏலக்காய், சுக்கு இவைகளுடன் பால் தெளித்து விழுதாக அரைத்து, நெற்றியில் பற்றிட தலைவலி சரியாகும்.
ஏலப்பொடி, சீரகப்பொடி, மல்லிப்பொடி இவைகளுடன், சிறிது கருப்பட்டி கலந்து, ஒரு நெல்லிக்காய் அளவு காலை, மாலை சாப்பிட்டு வர பித்த மயக்கம் சரியாகும். ஏலக்காய், மிளகு, சுக்கு, திப்பிலி, தனியா இந்த ஐந்தையும் சேர்த்து கஷாயம் செய்து குடித்து வர வறட்டு இருமல் குணமாகும்.
ஏலக்காய் விதைகளை வாயிலிட்டு அடக்கிக் கொண்டு, உமிழ்நீரை விழுங்கிவர, வாய்நாற்றம் மாறும். வாயில் புண் இருந்தாலும் குணமடையும். அன்னாசிப்பழச்சாறுடன், ஏலக்காய்த்தூள் சேர்த்து பருகிவர, சிறுநீரகக் கோளாறுகள் குணமாகும். நீர்க்கடுப்பு நீங்கும்.

அஜீரணக் கோளாறு, வயிற்றுப் பொருமல் ஆகியவற்றுக்கு இது சிறந்த தீர்வைத் தரும். உணவை எளிதில் செரிக்க உதவும். இது நடுக்கத்தைப் போக்கக்கூடியது. உடலில் ஏற்படும் தசைப்பிடிப்பு, குடல் மற்றும் வயிற்றுப் பிடிப்புகளிலிருந்து நிவாரணம் பெற்றுத் தரும். விக்கலில் இருந்து நம்மைக் காப்பாற்ற உதவும்.
இதில் இருக்கும் வைட்டமின் சி ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படக்கூடியது. இது உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். கால்களில் பித்த வெடிப்பு ஏற்பட்டு வலியால் சிரமப்படுபவர்களுக்கு ஏலக்காய் கண் கண்ட மருந்தாக திகழ்கிறது. சிறிதளவு ஏலக்காயுடன் வேப்பிலை மஞ்சள் வைத்து அரைத்து பித்த வெடிப்பு மீது பூசிவரலாம். இதன் மூலம் விரைவில் வெடிப்பு குணமாகும்.
அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் ஏலக்காய் சிறந்த மருந்து பொருளாகவும் செயல்படுவதால் நம்முடைய வீட்டில் அவசியம் வைத்திருக்க வேண்டிய பொருளாகும்.












Click it and Unblock the Notifications