திங்கள்கிழமைகளில் வரும் மாரடைப்பு.. மிகவும் மோசமானது.. மக்களே உஷார்.. ஆய்வில் பகீர் தகவல்
சென்னை: மிகவும் மோசமான மாரடைப்புகள் திங்கள்கிழமைகளில்தான் வருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
மாரடைப்பு... இதை உயிர்க் கொல்லி என்றே சொல்லலாம். மாரடைப்பு காரணமாக பெரும்பாலானோர் இறந்துவிடுகிறார்கள். சிலர் முதலுதவி சிகிச்சை அளித்தவுடன் பிழைத்துக் கொள்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவரை அணுகி உயிர் பிழைத்துக் கொள்ளலாம் என்கிறார்கள். அதை பொன்னான நேரம் என அழைக்கிறார்கள். இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் நின்று விடுவதுதான் மாரடைப்பு என்கிறார்கள்.

ஹார்ட் அட்டாக்கும் கார்டியாக் அரெஸ்டும் வெவ்வேறானவை. ஹார்ட் அட்டாக் வந்தாலாவது பிழைக்க கொஞ்சம் சான்ஸ்கள் இருக்கின்றன. ஆனால் கார்டியாக் அரெஸ்ட் வந்தால் கொஞ்சம் சிரமம்தான் என்கிறார்கள். இந்த நிலையில் ஹார்ட் அட்டாக்குகள் திங்கள்கிழமைகளில் வருவதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன.
பெல் ஃபாஸ்ட் ஹெல்த் அண்ட் சோஷியல் கேர் டிரஸ்ட் மற்றும் அயர்லாந்தில் உள்ள ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்களின் மருத்துவர்களின் கூற்றுபடி, 10528 நோயாளிகளிடமிருந்து தரவை ஆய்வு செய்ததில் வேலை வாரத்தின் தொடக்கத்தில் மிக மோசமான மாரடைப்பு ஏற்பட்டது என தெரியவந்தது. ஜூன் 4ஆம் தேதி பிரிட்டிஷ் கார்டியோவாஸ்குலர் சொசைட்டியில் ஆய்வை வழங்கிய மருத்துவர்கள் ஒரு பெரிய கரோனரி தமனி முழுவதுமாக தடுக்கப்படும் போது ஏற்படும் மாரடைப்பு குறித்து ஆய்வு செய்தனர்.
அயர்லாந்தில் 2013 மற்றும் 2018 ஆம் ஆண்டுக்கு இடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் மேற்கண்ட விதமான மாரடைப்பு விகிதங்களில் அதிகரிப்பானது வாரத்தின் தொடக்கத்தில் அதாவது திங்கள்கிழமைகளில்தான் அதிகரித்தது.
அது போல் எதிர்பார்த்ததைவிட அதிகமான மாரடைப்பு விகிதங்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இருந்தன. எனினும் இந்த திங்கள்கிழமை நிகழ்வு ஏன் ஏற்படுகிறது என்பதை இதுவரை விஞ்ஞானிகளால் முழுமையாக விளக்க முடியவில்லை. முந்தைய ஆய்வுகள் திங்கள்கிழமை அன்று மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவை உடலின் தூக்கம் அல்லது விழித்திருக்கும் சுழற்சி ஆகியவற்றுடன் தொடர்புடையவை என்றும் கூறுகின்றன.
இங்கிலாந்தில் இது போன்ற மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 30,000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க அவர்களுக்கு அவசர மதிப்பீடு மற்றும் சிகிச்சை தேவைப்படுகிறது. இது தடுக்கப்பட்ட கரோனரி தமனியை மீண்டும் திறக்கும் செயல்முறையாகும். இந்த ஆய்வுகள் மூலம் இந்த கொடிய நோய் குறித்து மருத்துவர்களுக்கு நன்றாக புரிந்து கொள்ள முடியும் என்றும் எதிர்காலத்தில் இன்னும் அதிகமான உயிர்களைக் காப்பாற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications