சிக்கன், மட்டனில் இருக்கும் பூரா சத்தும் தம்மாத்துண்டு தானியத்தில் இருக்கே! அப்பறம் ஏன் விட்றீங்க?
சென்னை: சிறு தானியத்தில் ஒன்றுதான் கம்பு. இந்த கம்பை பலர் இன்று மறந்துவிட்டனர். இதனால் அதில் இருக்கும் சத்துக்களும் நமக்கு கிடைக்கவில்லை.
சிறுதானியங்களை உட்கொண்டால் உடல் நலம் பெருகும் என்பது முன்னோர் வாக்கு. அந்த வகையில் கம்பு, வரகு, கேழ்வரகு, திணை, குதிரைவாலி, சோளம் உள்ளிட்ட உணவு பொருட்களை உணவில் கலந்து பயன்படுத்த வேண்டும்.

இவற்றை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். ஆனால் அவை காலப்போக்கில் மறந்து போனது. தற்போது மீண்டும் இவை துளிர்க்க தொடங்கியுள்ளன. அது போல் மண் பானை சமையலும் தற்போது மீண்டும் புழக்கத்திற்கு வந்துவிட்டது.
இந்த சிறுதானியங்களில் அதிக அளவு நார்சத்து இருப்பதால் இவற்றை அரிசிக்கு பதிலாக பயன்படுத்திக் கொள்ளலாம். அரிசியை கொண்டு என்னவெல்லாம் செய்கிறோமோ அதையெல்லாம் செய்யலாம். பொங்கல், உப்புமா, சாதம், பிரியாணி, உள்ளிட்டவைகளை செய்யலாம். அந்த வகையில் கம்பு உடல் சூட்டை தணிக்கும்.
அசைவ உணவுகளுக்கு இணையான சத்தை இந்த கம்பு பெற்றுள்ளதாக கூறுகிறார்கள். இதில் புரத சத்து அதிக அளவில் உள்ளது. அது போல் கொழுப்பு சத்து குறைந்த அளவில் உள்ளது. இதில் அதிக அளவு வைட்டமின் பி, இரும்பு சத்து, மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம், குரோமியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
இரும்பு சத்து குறைபாடு காரணமாக உடல் சோர்வு ஏற்பட்டு மன வளர்ச்சியும் பாதிக்கிறது. பெரும்பாலும் இப்படி குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். வளரும் குழந்தைகளுக்கு கம்பு தானியத்தில் செய்த உணவுகளை சாப்பிட கொடுக்கலாம். பெண்களுக்கு கம்பு மிக சிறந்த மருந்து.
மாதவிடாய் காலங்களிலும் பிரசவ காலங்களில் அதிக ரத்த இழப்பு ஏற்படுவதால் இவர்களுக்கு ரத்த சோகை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே இவர்கள் கட்டயாம் தங்கள் உணவில் கம்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். கம்பங்கூழ், கம்பங்களி சாப்பிட்டு வந்தால் உடலில் கொழுப்புகள் சேராது. உடலுக்கு நல்ல வலிமையை கொடுக்கும்.
கம்பில் உள்ள பிடிக் அமிலம், உடலில் கொழுப்பின் அளவை குறைக்கிறது. இந்த கம்பில் மற்ற தானியங்களை போல் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது நீண்ட நேரம் பசியை தாங்கக் கூடியது. இதில் குறைவான கலோரிகளே உள்ளது. இந்த கம்பில் பீட்டா கரோட்டின் காணப்படுகிறது. இது கண் பார்வைக்கும் நன்மை கொடுக்கும். எல்லாவற்றுக்கு மேல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ரத்தத்தில் ஆக்ஸிஜன் பயன்பாட்டை அதிகரித்து முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கும். இதனால் முதுமையான தோற்றம் ஏற்படாமல் தோல் பளபளவென மின்னும். இந்த கம்பு முடி உதிர்தல் பிரச்சினைக்கும் தீர்வை கொடுக்கும். சர்க்கரை நோயாளிகள் கம்பு சேர்த்த உணவை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். கல்லீரலின் ஆரோக்கியத்தை பராமரிப்பது முதல் புற்றுநோயை தடுப்பது வரை கம்பு சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகளை பெற முடியும். இரைப்பை, குடல் சம்பந்தமான நோய்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கம்புவுக்கு உண்டு.












Click it and Unblock the Notifications