ஓமவள்ளி.. சளி, இருமலை விரட்டும் மூலிகை.. முசுமுசுக்கை கீரையின் வேர் போதுமே.. நுரையீரலின் பாதுகாவலன்
சென்னை: சுவாச தொந்தரவுகளை தீர்ப்பதில் மூலிகைகளைவிட சிறந்த மருந்து வேறு இருக்க முடியாது.. அந்தவகையில், 2 வகையான மூலிகைகளை பார்ப்போம். இயற்கையான முறையில் மூலிகை இலைகளை பயன்படுத்துவதால், பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை.
முதலாவதாக கற்பூரவல்லி என்று சொல்லப்படும் ஓமவள்ளி இலைகளை சொல்லலாம்.. வைட்டமின் C, A, B6 சத்துக்கள் நிறைந்துள்ள இந்த இலையில், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், கால்சியம் போன்றவையும் அடங்கி உள்ளன.

நுரையீரல்: நோய் எதிர்ப்பு சக்தி இந்த இலையில் அதிகம் உள்ளன.. எனவே, நுரையீரல் சம்பந்தமான தொற்றுகளுக்கு, இந்த இலைகள் தீர்வு தருகின்றன.. இந்த இலையின் சாற்றில், சர்க்கரை சிறிது கலந்து நெற்றியில் பற்று போட்டால், ஜலதோஷம், தலைவலி, நீர்க்கோவை, தலைபாரம், அனைத்தும் நீங்கும்... இந்த ஓமவள்ளி சாற்றினை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கும் தரலாம். இதனால், சளி, இருமல் பிரச்சனை தீரும்.. மார்பு சளி கட்டுப்படும்.
நெஞ்சில் அதிகமாக சளி, கபம் கோர்த்து அவதிப்படுபவர்கள், இந்த ஓமவள்ளி இலையை விழுதாக அரைத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில், தண்ணீர் சேர்த்து அதில் இந்த விழுதையும் கொட்டி கொதிக்க விட வேண்டும். இந்த தண்ணீரிலேயே ஏலக்காய், கிராம்பு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து 3 நாள் தினமும் 2 வேளை குடித்தால், கட்டாயம் நிவாரணம் கிடைக்கும்.
ஓமவள்ளி: அதேபோல, ஓமவள்ளி இலையில் ஆவி பிடித்தாலும் தலையில் உள்ள நீர் அத்தனையும் வடிந்துவிடும்.. இந்த ஓமவள்ளியில் மிளகு சேர்த்து ரசம் போல வைத்து சாப்பிடலாம். சூப் வைத்தும் சாப்பிடலாம். இதனால் இருமல், சளி குறையும்..
தொண்டையில் வலி இருப்பவர்கள், இந்த இலைகளை, எண்ணெய்யில் பொரித்து, அந்த எண்ணெய்யை மட்டும் தொண்டையில் தடவி வந்தாலும், வலி குறையும். இந்த ஓமவள்ளியில் டீ தயாரித்து குடிக்கலாம். ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததுமே, டீ தூள், சிறிது இஞ்சி துருவல், ஓமவள்ளி இலைகள் 4 சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பிறகு வடிகட்டி தேவையான அளவு தேன் விட்டு குடித்தால், சுவாச கோளாறுகள் ஆரம்ப கட்டத்திலேயே சரியாகிவிடும்.
முசுமுசுக்கை கீரை: அடுத்ததாக, முசுமுசுக்கை இலைகளும் சளி தொல்லையை சரி செய்கிறது.. கப நோய்களிலிருந்து விடுபடுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த முசுமுசுக்கை கை கொடுக்கிறது..
புரோட்டீன், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் C போன்ற சத்துக்களை இதில் உள்ளன.. நெஞ்சில் சளி கட்டியிருந்தால் அதனை இளகச் செய்து வெளியேற்றிவிடும் சக்தி இந்த முசுமுசுக்கைக்கு உண்டு. இந்த முசுமுசுக்கை கீரையின் வேர்களும் மருத்துவ குணம் நிறைந்தவை.. எனவே, இதில், கஷாயம் போல தயாரித்து குடிக்கலாம்.
சமையல்: முசுமுசுக்கை இலையுடன், சிறிது தூதுவளை இலையையும் சரிசமமாக சேர்த்து அரைத்து பவுடர் போல செய்து கொள்ள வேண்டும். தினமும் அரை டீஸ்பூன் அளவு வெண்ணெய்யில் கலந்து 2 மண்டலங்கள் சாப்பிட்டு வந்தாலே, ஆஸ்துமாவால் வரும் தொந்தரவுகள் நீங்கு..
அதேபோல, முசுமுசுக்கை இலையை, பொடிப்பொடியாக நறுக்கி, வெங்காயம் சேர்த்து வதக்கி நெய் கலந்தும் சாப்பிடலாம்.. இப்படி சமையலில் சேர்த்து சாப்பிடும்போது, சளி, கோழை, தும்மல், குறட்டை, காசநோய், நீர்க்கோவை என அத்தனை கோளாறுகளும் சரியாகும்.. அதாவது, ஆஸ்துமா நோயின் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள், இந்த கீரையை உணவில் சேர்த்துவந்தாலே, ஆஸ்துமாவை விரட்டிவிடலாம் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, சைனஸ் பாதிப்பு இருப்பவர்களுக்கு, நோயின் தீவிரத்தையும் இந்த முசுமுசுக்கை கட்டுப்படுத்துகிறது.
பூண்டு ரசம்: ஓமவள்ளி மிகச்சிறந்த கிருமி நாசினியாகும்.. தசைச் சுருக்கம், வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவி வந்தால், நிவாரணம் பெறலாம். ஓமவள்ளி சாறுடன் சீனி சேர்த்து குழந்தைகளுக்கு தரும்போது சளியுடன், அஜீரணத்தையும் போக்கிவிடும். சளி, இருமல் இல்லாவிட்டாலும்கூட, ஓமவள்ளி இலைகளில் பஜ்ஜி தயார் செய்யலாம்... அல்லது மழைக்காலங்களில் மிளகு, பூண்டு சேர்த்து ரசம் வைக்கலாம்.












Click it and Unblock the Notifications