பாம்பு கடித்தவரை இரவில் உறங்க வைக்கக் கூடாது ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாம்பு கடித்தவரை இரவில் ஏன் உறங்க வைக்கக் கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக பாம்புகள் இரவு நேரத்தில்தான் தீண்டும். அது போன்ற நேரங்களில் அந்த பாம்பு தீண்டிய நபரை இரவில் தூங்க வைக்கக் கூடாது. அது போல் நச்சுப்பல் பிடுங்கப்பட்ட பாம்பை கையாள்வது எளிதானதா என்பதையும் பார்க்கலாம்.

இதுகுறித்து தமிழ் குவோராவில் நமசிவாய மூர்த்தி சதாசிவம் என்பவர் கூறியிருப்பதாவது: பாம்பு தீண்டலுக்கு உட்பட்ட ஒருவருக்கு உரிய சிகிச்சை அளிக்க பாம்பு தீண்டிய அடையாளங்களை கண்டறிதல் முக்கியமானது.

health snake tamil nadu

நஞ்சுள்ள பாம்பு தீண்டலுக்கு ஆளானவரை கண்காணித்து நஞ்சு பரவலின் அடையாளங்களை கண்டறிதல் மருத்துவரின் முதன்மையான பணி.

நஞ்சுள்ள பாம்பு தீண்டியதன் முக்கிய அடையாளங்களான கண் இமைகள் தொங்கிப்போதல் (Dropping of Eyelids), தெளிவற்ற பார்வை, வீக்கமடைந்த உள் நாக்கு காரணமாக பேச்சுக்குக் குழரல், கால்கள் பலமிழத்தல், மூச்சு விட சிரமம், லேசான வலிப்பு, வாந்தி, வயிற்றுவலி, போன்ற பல முக்கிய அறிகுறிகள் நோயாளி சுயநினைவில் விழித்திருக்கும் சமயத்தில்தான் கேட்டறிந்து சரிவர அடையாளம் காண முடியும். அதற்கேற்ப சிகிச்சை அளிக்கவும் இயலும்.

தூங்கும் ஒருவரிடம் மேற்கண்ட அடையாளங்களை சரிவர காண இயலாது. எனவேதான் சிகிச்சை துவங்கும் சமயம் நோயாளி தூங்காமல் விழித்திருக்க வேண்டும் என பொதுவாக கூறப்படுகிறது.

ஏனெனில் ஒருவர் தூங்கும் சமயம் அவர் தன் உணர்வுடன் உள்ளாரா அல்லது பாதிப்பு தீவிரமடைந்து மயக்க நிலைக்கு சென்று விட்டாரா என சரிவர கணிக்க இயலாது!

அலோபதி மருத்துவ சிகிச்சையில் பாம்பு தீண்டலுக்கு சிகிச்சை துவங்கும் முன் நோயாளியின் இரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதில் காணப்படும் நஞ்சு பரவலின் அடையாளங்களை கண்டறிந்து பின்னர் அதற்கேற்ப சிகிச்சை துவங்கப்படுகிறது.

நச்சுப்பல் பிடுங்கிய பாம்பு: நச்சுப் பல் பிடுங்கப்பட்ட ஒரு விஷப்பாம்பு கையாள பாதுகாப்பானதல்ல ! ஏனெனில், நல்லபாம்பு , கண்ணாடி விரியன், போன்றஅனைத்து வகையான விஷப்பாம்புகளுக்கும் மேல்தாடையில் முன்பக்கம், பக்கத்துக்கு ஒன்றாக மொத்தம் இரண்டு நச்சுப்பற்கள் உள்ளதாக மட்டுமே பெரும்பாலோர் நினைக்கின்றனர். இது மட்டுமே உண்மை அல்ல!

விஷப்பாம்புகளின் மேல் தாடையில் இருபுறமும் உள்ள முன் இரு விஷப் பற்களுக்கும் அடுத்து அரிசி அளவுள்ள மிகவும் சிறிய விஷப் பற்கள் உண்டு. பொதுவாக முன்விஷப் பற்கள் 6 முதல் 8 வாரத்திற்குள் தானே கீழே விழுந்துவிடும். இவ்வாறு விழுந்தபின் பின்புறம் அடுத்துள்ள மிகச்சிறிய விஷப் பற்கள் ஒருசில வாரங்களுக்குள்ளாகவே வளர்ந்து பெரியதாகி பழைய முன் பல் இருந்த இடத்திற்கு நகர்ந்து அமையும். இதேபோல தொடர்ந்து அடுத்தடுத்து ஆயுள் முழுவதும் விஷப் பற்கள் விழுந்து முளைக்கின்றன.

சிறு வயதில் நமக்கு பால் பற்கள் விழுந்து அடியிலிருந்து புதிய பற்கள் ஒருமுறை முளைக்கின்றன. அதிசய நிகழ்வாக வயதான காலத்தில் எங்கோ ஒருவருக்கு மீண்டும் பல் முளைத்த நிகழ்வுகளும் உண்டு. ஆனால், நச்சுப் பாம்புகளுக்கு மேல் தாடையின் ஏற்கனவே விழுந்த முன் விஷப்பல்லுக்கு அடுத்து பின்பக்கமிருந்து புதிய பற்கள் தொடர்ந்து ஆயுள் முழுவதுமே உருவாகின்றன !.

நமது சமையலறையில் பயன்படுத்தும் புது கத்தி பயன்பாட்டில் எவ்வாறு கூர்மழுங்குகிறதோ அவ்வாறு பாம்புகளின் பற்களும் கூர் மழுங்குகின்றன. கூர்மைக்காக நாம் கத்தியை சாணை வைக்கின்றோம்; ஆனால், பாம்புகளில் பற்கள் புதிதாக பரிணமிக்கின்றன. அவ்வளவே!

நச்சுப்பற்களுடன் நஞ்சுக்குழாய்கள் மற்றும் நஞசுப்பை ஆகிய மூன்றும் உரிய மருத்துவரால் அகற்றப்பட்டால் மட்டுமே ஒருவேளை பாதுகாப்பாக இருக்கக்கூடும்- சில காலம் வரை. அதுவும் நாளடைவில் புதிதாக அமைந்துவிடும் என்றே கூறப்படுகிறது.

எனவே, நச்சுப்பற்கள் அகற்றப்பட்ட ஒரு விஷப்பாம்பு நீங்கள் நினைப்பது போல் கையாள என்றுமே பாதுகாப்பானதல்ல ! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+