உலகில் முதல் முறையாக! தாயின் கருவறையில் இருக்கும் சிசுவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை! ஏன் என்னாச்சு?
வாஷிங்டன்: அமெரிக்காவில் தாயின் கருவில் இருந்த சிசுவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
மருத்துவம், அறிவியல், விஞ்ஞானத்தில் நாள்தோறும் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு சாதனைகளும் படைக்கப்படுகின்றன. மருத்துவத் துறையில் நடக்கும் நவீன புரட்சியால் அன்றாடம் பல உயிர்கள் காக்கப்படுகின்றன.
அந்த வகையில் அமெரிக்காவிலும் சிக்கலான ஒரு அறுவை சிகிச்சையை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பாஸ்டனில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார்.

இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் அவர் இரு முறை கருத்தரித்தும் அந்த கரு மூன்று மாதங்களிலேயே கலைந்தது. இந்த நிலையில் அந்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்தரித்து அந்த கரு 3 மாதங்களை கடந்து வளர்ந்ததால் அந்த பெண்ணும் கணவரும் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்த நிலையில்தான் அந்த பெண் 34 ஆவது வார கர்ப்ப காலத்தில் இருப்பதால் அனமாலி ஸ்கேன் செய்திருக்கிறார்.
அப்போது அவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. குழந்தைக்கு மூளையிலிருந்து இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்கள் வளர்ச்சி அடையாமல் இருந்தது தெரியவந்தது. இதனால் அங்கிருந்து இதயத்திற்கு அதிக ரத்தம் செல்வதை கண்டறிந்தனர். இது போன்ற பாதிப்புகள் என்பது Vein of Galen malinformation என கூறப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் கருவில் இருக்கும் சிசுவுக்கு உயிருக்கே ஆபத்து. ஒரு வேளை குழந்தை பிறந்தாலும் அது சில காலம் மட்டுமே உயிர்வாழும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து தம்பதியினர் உடைந்து கதறினர். இந்த நிலையில் இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் இந்த பாதிப்புடைய குழந்தைகள் 50 முதல் 60 சதவீதம் வரை உடனடியாக நோய் வாய்ப்படுவர். மேலும் அவர்களுக்கு 40 சதவீத இறப்பு விகிதமும் இருக்கிறது. அப்படியே உயிர் பிழைத்தாலும் குழந்தைகளில் பாதி பேர் கடுமையான நரம்பு பிரச்சினை மற்றும் புத்தி கூர்மையின்மை பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் அந்த குழந்தைக்கு தாயின் வயிற்றிலேயே அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர் குழு முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து பாஸ்டனில் டேரன் ஆர்பாக் தலைமையிலான மருத்துவர்கள் இந்த சிக்கலான அறுவை சிகிச்சை தாயின் கருவில் உள்ள சிசுவுக்கு வெற்றிகரமாக செய்தனர். இந்த அறுவைச் சிகிச்சை முடிந்ததும் இரு நாட்கள் கழித்து அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. டென்வர் என பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தை தற்போது நலமாக உள்ளது.
தாயின் வயிற்றில் சிறிய துளையிட்டு ஊசி போன்ற சிறிய கருவியின் மூலம் தலையில் துளையிட்டு பின்னர் எலக்ட்ரிக் காயில் போன்று இருக்கும் ஒரு கருவி மூலம் குழந்தையின் ரத்த நாளங்களை சரி செய்துள்ளனர். இதனால் மூளையிலிருந்து இதயத்திற்கு செல்லும் அதிகபடியான ரத்தம் குறைந்தது. இனி குழந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் கூறியதால் தாயும் தந்தையும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த அறுவை சிகிச்சையை செய்ததால் அந்த குழந்தைக்கு மூளை மற்றும் இதய நோய் பாதிப்பு இல்லாமல் இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். தாயின் கருவில் உள்ள 34 வார சிசுவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பது இதுதான் முதல் முறையாகும். பாஸ்டன் மருத்துவர்கள் குழுவிற்கு பாராட்டுகள் குவிகின்றன.












Click it and Unblock the Notifications