கொளுத்தும் கோடை.. சிறுநீர் பாதை தொற்று குறித்து எச்சரிக்கும் மருத்துவர்கள்! தற்காப்பது சுலபம்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிக அளவில் பதிவாகி வரும் நிலையில், அதீத வெப்பம் காரணமாக சிறுநீர் பாதை தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
நாடு முழுவதும் கோடை காலம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக தென் மாநிலங்களில் வெயிலின் உக்கிரம் முன்னெப்போதும் இல்லாத அளவில் இருக்கிறது. கேரளாவில் நேற்று வெயில் காரணமாக 2 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தின் ஊட்டியில் நேற்று பதிவான வெயில் கடந்த 73 ஆண்டுகளில் பதிவான வெயிலை விட அதிகம். மற்ற மாவட்டங்களை பொறுத்த அளவில், ஈரோட்டில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியிருக்கிறது.

இப்படியாக வெயில் அதிகமாக இருப்பதால் கோடைக்கால நோய்கள் அதிகம் பரவி வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்கது சிறுநீர் பாதை தொற்று. எனவே இது குறித்து மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து, அதில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் தலா பத்து லட்சம் நெஃப்ரான்கள் (ரத்த நுண் சுத்திகரிப்பான்கள்) உள்ளன. அங்கிருந்து உருவாகும் கழிவுகள் யூரிடர் எனப்படும் குழாய்கள் மூலம் சிறுநீர்ப் பையில் சேகரமாகின்றன.
அவை யூரித்ரா எனப்படும் குழாய் வழியே சிறுநீராக வெளியேறுகிறது. இந்த கட்டமைப்பைத்தான் சிறுநீர்ப்பாதை என அழைக்கிறோம். இதில் ஏதேனும் கிருமித் தொற்று ஏற்படும்போது சிறுநீர் கழிப்பதில் எரிச்சல், வலி, சிரமங்கள் காணப்படும். இதை அலட்சியப்படுத்தினால், கிருமிகள் சிறுநீரகங்களைத் தாக்கி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
கோடை காலத்தில் உடலில் போதிய நீர்ச்சத்து இல்லாவிடில் சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த தொற்று ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படும் என்றாலும், பெண்களில் பலர் புறச்சூழ்நிலை காரணமாக சிறுநீரை உரிய நேரத்தில் வெளியேற்ற இயலாமல் இருப்பதால் அவர்கள்தான் அதிக அளவில் இந்த தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதைத் தவிர்க்க நாளொன்றுக்கு குறைந்தது 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தவிர இளநீர், மோர், எலுமிச்சை சாறையும் அவ்வப்போது குடிக்க வேண்டும்.
இது பாலுறுப்பு சம்பந்தப்பட்ட தொற்று என்றாலும் கூட, பாலுறவு மூலமாக பரவாது. சர்க்கரை நோய், உடற்பருமன், குடும்பத்தில் யாருக்கேனும் இத்தொற்று பாதித்திருத்தலும் இந்த தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதற்கு மருந்தாக நைட்ரோஃப்யூரண்டைன், ட்ரைமெத்தோப்ரிம், சல்ஃபாமெத்தாசோல் ஆகியவை வழங்கப்படுகின்றன.
பொதுவாக இந்த பிரச்னை தானாகவே சரியாகிவிடும் என்று பலரும் சொல்வதுண்டு. ஆனால் எல்லோருக்கும் இப்படி சரியாகாது. எனவே பாதிப்புக்கான அறிகுறிகள் தெரிந்த உடனேயே மருத்துவரை அணுக வேண்டும்.












Click it and Unblock the Notifications