குட்டி நாயோ குட்டி பூனையோ கடித்தால் ரேபிஸ் தடுப்பூசி கட்டாயமா? டாக்டர் விளக்கம்
சென்னை: குட்டி நாயோ அல்லது குட்டி பூனையோ கடித்துவிட்டாலோ பிராண்டி விட்டாலோ ரேபிஸ் வருமா என்பது குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனையின் பொது மருத்துவர் பரூர் அப்துல்லா விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா கூறியிருப்பதாவது: நாய்க்கடி பூனைக்கடி & ரேபிஸ் குறித்து எழும் பல கேள்விகளும்,
அதற்குரிய பதில்களும்!
செல்ல நாய்க்கு / வீட்டுப் பூனைக்கும் ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டுமா? ஆம்.. குட்டி பிறந்த மூன்றாவது மாதம் முதல் ஊசியும் பிறகு வருடம் ஒருமுறையும் ஊசி போட வேண்டும்.
ஊசி போடப்பட்ட செல்ல நாய் / பூனை கடித்தாலோ நகங்களால் பிராண்டி விட்டால் ரேபிஸ் வருமா? பொதுவாக ஒழுங்காக சரியான இடைவெளியில் தடுப்பூசி போடப்படும் செல்ல நாய்/ பூனையிடம் ரேபிஸ் தொற்று இருப்பதற்கான வாய்ப்பு குறைவு.
எனினும் ஆய்வுகளில் ரேபிஸ் தடுப்பூசி முறையாக செலுத்தப்பட்ட நாய் / இதர விலங்குகளிலும் 4.9% ரேபிஸ் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே செல்ல நாய் / செல்ல பூனை கடித்தாலும் பிராண்டி விட்டாலும் ரேபிஸ் தொற்று மனிதர்களுக்கு ஏற்படாமல் இருக்க ரேபிஸ் தடுப்பூசி பெற்றுக் கொள்வது பாதுகாப்பானது.
ரேபிஸ் தடுப்பூசி நாய் கடித்த நாள் ( 0 நாள்), மூன்றாவது நாள் , ஏழாவது நாள், 28வது நாள் போடப்பட வேண்டும். ஒருமுறை இது போன்று நான்கு நாட்களில் தடுப்பூசிகளை பெற்றவர்களை நாய்/ பூனை இதர விலங்குகள் மீண்டும் கடிக்கும் தருணத்தில் என்ன செய்ய வேண்டும்??
மேற்சொன்ன நான்கு தவணை நான்கு நாட்கள் தடுப்பூசி பெற்றவர்களுக்கு மீண்டும் விலங்குக் கடி ஏற்பட்டால்
நாய்கடித்த நாள் (0 நாள்) மற்றும் மூன்றாவது நாள் தடுப்பூசி மட்டும் போட வேண்டும்.
இவர்களன்றி ரேபிஸ் தடுப்பூசி உற்பத்தி செய்யும் ஆய்வகங்களில் பணிபுரிவோர்,விலங்குகள் நல மருத்துவர்கள், விலங்குகளை கையாள்பவர்கள், நாய்களுக்கு உணவு அளிப்பவர்கள், நாய்களைப் பிடிப்பவர்கள், நாய் வளர்ப்புத் தொழிலில் ஈடுபடுபவர்கள், வன அதிகாரிகள் போன்றோர்
முன்கூட்டியே ரேபிஸ்க்கு எதிரான தடுப்பூசிகளை முன்கூட்டிய பெற்றுக் கொள்ள வேண்டும்.
இதை PRE EXPOSURE PROPHYLAXIS என்கிறோம். நாய் கடித்த நாள் (0 நாள்), மூன்றாவது நாள், 21-வது நாள் அல்லது 28-வது நாள் பெற்றுக் கொள்ள வேண்டும். இவர்கள் தங்களின் ரத்தத்தில் ரேபிஸ்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி (ANTIBODY TITRE) ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சோதித்து வர வேண்டும்.
எப்போது இந்த எதிர்ப்பு சக்தி 0.5 IU/ml க்கு கீழ் குறைகிறதோ அப்போது மட்டும் ஒரு பூஸ்டர் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஆண்ட்டிபாடி பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு ரேபிஸ் முன்கூட்டிய தடுப்பூசிகளை போட்டுக் கொண்டாலும் நாய்க்கடி / விலங்குகளிடம் கடிபட்டால்
0 நாள் மற்றும் மூன்றாவது நாள் ரேபிஸ் தடுப்பூசி மட்டும் கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும். ரேபிஸ் தடுப்பூசி போடும் நாட்களில் உணவுப் பத்தியம் ஏதுமில்லை.

மாமிசம் உள்ளிட்ட அசைவ உணவுகள் சாப்பிடக்கூடாது போன்ற மூட நம்பிக்கைகள் உள்ளன. உண்ணும் உணவுக்கும் நாய்க்கடிக்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தமில்லை. ரத்த தானம் வழங்குபவர்கள் கடைசி நாய்க்கடி ரேபிஸ் தடுப்பூசி பெற்றதில் இருந்து ஒரு வருட காலம் வரை ரத்த தானம் வழங்குதல் கூடாது.
ஒரு வருடம் முடிந்த பின் ரத்த தானம் வழங்கலாம்.
நாய், பூனை போன்ற விலங்குகள் கடித்தாலும் சரி பிராண்டி வைத்தாலும் சரி ரத்த காயம் ஏற்பட்டு விட்டால் அல்லது ஆறாத புண்ணில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ள இடத்தில் விலங்கு நக்கி வைத்து விட்டாலும் இது மூன்றாம் வகை - காயம் என்று கருதப்பட்டு கட்டாயம் ரேபிஸ் தடுப்பூசி மற்றும் ரேபிஸ் இம்யூனோகுளோபுளின் வழங்கப்பட வேண்டும்.
பலரும் குட்டி நாய், குட்டி பூனை கடித்தால் ரேபிஸ் வராது என்று நினைக்கிறார்கள். கடியைப் பொருத்தவரை குட்டி நாய், பெரிய நாய், குட்டி பூனை , பெரிய பூனை என்றெல்லாம் பாகுபாடு கிடையாது.
நாய்க்கடி பூனைக்கடி நாய் பிராண்டி வைத்தாலும் பூனை பிராண்டி வைத்தாலும் காயம் பட்ட இடத்தை பதினைந்து நிமிடங்கள் ஓடும் குழாய் நீரில் சோப் கொண்டு நன்றாக கழுவி விட்டு அரசு மருத்துவமனைக்குச் சென்று கட்டாயம் ரேபிஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications