கொர் கொர் கொர்... பக்கவாதத்தை தரும் குறட்டையை விரட்டும் கருவிகள்.. சிகிச்சை என்ன.. டாக்டர் பரூக்
சென்னை: குறட்டையினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்தும் அதற்கான சிகிச்சை முறைகள் குறித்தும் சிவகங்கை அரசு மருத்துவமனை டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: உறக்கத்தின் போது மூக்கின் வழியாக வாய் வழியாக வெளியேறும் காற்று - நார்மலான மனிதர்களுக்கு பெரிய சத்தமின்றி வரும். எனினும் குறட்டையின் சத்தம் அதிகமாவது உடலுக்கு நல்லதல்ல.

எனவே குறட்டை குறித்த இந்த கேள்விகளுக்கு பதில் கூறுங்கள்
1.தாங்கள் விடும் குறட்டை தங்களின் பேசும் ஒலியை விட அதிகமாக இருக்கிறதா?
ஆம் / இல்லை
2.பகல் நேரத்தில் எப்போதும் ஒருவித சோர்வு / மந்தம் - பகல் நேரத்தில் தூங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறதா?
ஆம்/இல்லை
3.தாங்கள் உறங்கும் போது யாரேனும் உங்களது குறட்டையும் மூச்சு விடுதலும் அவ்வப்போது நிற்பதை கண்டிருக்கிறார்களா?
ஆம்/இல்லை
4.ரத்த கொதிப்பு ( அதிக ரத்த அழுத்தம்) நோய் இருக்கிறதா?
ஆம்/ இல்லை
5.தங்களது வயது 50க்கு மேலா?
ஆம்/இல்லை
6.தங்களது கழுத்து சுற்றளவு
40 செண்ட்டிமீட்டருக்கு மேல் உள்ளதா?
ஆம்/இல்லை
7.தங்களது பி.எம்.ஐ ( Body Mass Index)
35 kg/m2 க்கு மேல் உள்ளதா?
ஆம் / இல்லை
8.தங்களது பாலினம் ஆணா?
ஆம்/இல்லை
மேற்கூறிய கேள்விகளில் மூன்று மற்றும் அதற்கு மேல் "ஆம்" என்று பதில் வந்தால்
உடனே குறட்டைக்கு சிகிச்சை எடுப்பது சிறந்தது. இதற்கான காரணம் "குறட்டை" என்பது நாசியில் தொடங்கி நுரையீரல் வரை இருக்கும் சுவாசப்பாதையில் காற்று நுழைந்து வெளியேறும் பாதையில் ஏற்படும் முழுமையான அல்லது பகுதி அடைப்பைக் குறிக்கிறது.
இதன் விளைவாக மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் பற்றாக்குறை நிலையும் / முழுமையான தடைபடுதலும் ஏற்படுகிறது. இதை "சுவாசப் பாதை அடைபட்டு உறக்கத்தின் போது ஆக்சிஜன் தடைபடும் நிலை" ( OBSTRUCTIVE SLEEP APNOEA) என்கிறோம்.
இந்த நோய் நிலை இருப்பவர்கள்
- நுரையீரல் மற்றும் சுவாசப்பாதை நோய் சிறப்பு நிபுணர் ( Pulmonologist)/ காது மூக்கு தொண்டை நோய் நிபுணரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். இரவு உறக்கத்தின் போது மூச்சு விடுதல் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுதல் அதனால் மூளை/ இதயத்தில் ஏற்படும் இயங்குவியல் மாற்றங்கள் போன்றவற்றை அளவீடு செய்யும் பாலிசோம்னோகிராஃபி (Polysomnography) செய்து பார்க்க வேண்டும்.

இந்த நோய்க்கு சிகிச்சையாக பரிந்துரைக்கப்படுபவை
- உடல் எடையை குறைத்தல் - நோய் நிலையில் நல்ல முன்னேற்றத்தைத் தரும்
- மது , புகைப்பழக்கம் போன்றவற்றை கைவிடுதல் நல்ல முன்னேற்றத்தை தரும்.
- குறட்டை என்பது உறங்கும் போது சில நிலைகளில் தோன்றும் என்பதால் குறட்டை இல்லாத சரியான பொசிசனில் நிலை நிறுத்தும் உபகரணங்கள் உள்ளன.
- தொடர் அழுத்தத்தில் சுவாசம் தரும் கருவியைப் பொருத்திக் கொண்டு உறங்குதல் ( Continuous Positive Airway pressure device)
- வாயில் பொருத்திக் கொள்ளும் தாடை எலும்பை முன்நிறுத்தும் கருவிகள் ( Mandibular Advancement Devices)
- சுவாசப்பாதை அடைப்பை ஏற்படுத்தும் உள்நாக்கு / டான்சில் / அடினாய்டு போன்றவற்றை நீக்கும் அறுவை சிகிச்சை போன்றவை பரிந்துரைக்கப்படும்
சரிசெய்யப்படாத சுவாசப்பாதை அடைப்பு நோயினால்
நாளடைவில்
- ரத்தக் கொதிப்பு
- இதய ரத்த நாள அடைப்பு
- ஸ்ட்ரோக் ( பக்க வாதம்)
- மனத்தாழ்வு நிலை
- உறக்கமின்மை
- உறக்கமின்றி ஓட்டுவதால் வாகன விபத்துகள்
- தொழிலில்/ வேலை இடங்களில் கவனக்குறைவு
போன்றவை ஏற்படும். இந்த குறட்டை நோய் குறித்து அறிந்து அதற்கு முறையான சிகிச்சை எடுப்பது அவசியமாகும். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications