சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தை தானமாக கொடுக்கலாமா? இந்த 7 பாயிண்ட்டுகள் முக்கியம்!
சென்னை: சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தை தானமாக கொடுக்கலாமா? யாரெல்லாம் ரத்த தானம் செய்யக் கூடாது என்பது குறித்து சிவகங்கை அரசு பொது மருத்துவமனை மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார். ரத்த தானம் என்பது சிறப்பானது என்றாலும் சிலர் ரத்தத்தை தானமாக கொடுத்தால் அது தானமாக பெறுவோருக்கு பிரச்சினை ஏற்படும்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நீரிழிவு/ டயாபடிஸ் நோயாளிகள் ரத்தம் கொடையாக வழங்கலாமா??? இது நீரிழிவு நோயர்களுக்கு வரும் சந்தேகமாக இருக்கிறது ... தாராளமாக டயாபடிக்குகள் ரத்தம் தரலாம்.

"ரத்தத்திற்கான தேவை" என்பதே அவசர கால நிலை. உங்களது ரத்த சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்கிறீர்களா என்பதே முக்கியம்? கட்டுக்குள் என்றால் அதற்கு என்ன வரையறை? உங்களது மூன்று மாத சராசரி சர்க்கரை அளவுகள் Hba1c 7 %க்குள் இருக்கிறதா? உங்களது காலை வெறும் வயிற்று சர்க்கரை அளவுகள் 140 mg/dl என்ற அளவுக்குள்ளும் உணவு உண்ட பின் பார்க்கும் post prandial blood sugar 200mg/dl என்ற அளவுக்குள் மேற்கூறியவாறு நல்ல கண்ட்ரோலில் இருந்தால் தாராளமாக ரத்தம் கொடையாக வழங்கலாம்.
நீங்கள் ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க மாத்திரைகள் எடுப்பது உங்களை ரத்தம் கொடையாக தருவதில் இருந்து தடுக்காது. இருப்பினும் கடந்த ஒரு மாத காலமாக ஒரே அளவு ஒரே வகையான மாத்திரைகளில் மாற்றம் இல்லாமல் இருந்திருக்க வேண்டும். கடந்த ஒரு மாதத்திற்குள் உங்கள் மருத்துவர் நீங்கள் எடுக்கும் மாத்திரையை மாற்றியிருந்தாலோ/ டோஸ் அளவைக் கூட்டியிருந்தாலோ இந்த மாற்றப்பட்ட அளவில் மருந்துகளை உட்கொள்ள ஆரம்பித்து ஒரு மாதம் சென்ற பின்னரே ரத்தம் கொடுக்க வேண்டும்.
இன்சுலின் உபயோகித்து வந்தால் ரத்தம் தருவது தடை செய்யப்பட்டது. காரணம் - இன்சுலின் போட்டு ரத்தம் கொடுப்பவருக்கு "தாழ் ரத்த சர்க்கரை நிலை" (Hypoglycemia) ஏற்படும் வாய்ப்பு இருப்பதே காரணம். இன்சுலின் கட்டாயம் தேவைப்படும் டைப் ஒன்று மற்றும் இன்சுலின் மூலம் ரத்த சர்க்கரையை குறைக்கும் டைப் டூ டயாபடிஸ் இருப்பவர்களும் ரத்தம் கொடுப்பது கூடாது. இது கொடுப்பவருக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்பதாலேயே தவிர்க்கப்பட வேண்டும்.
நீரிழிவு உள்ளவர்களில் வேறு யாரெல்லாம் ரத்தம் கொடையாக வழங்கக்கூடாது???
நீரிழிவுடன் சேர்த்து
1. இன்சுலின் உபயோகிப்பவர்கள்
2. இதய நோய் இருப்பவர்கள்
3. கடந்த ஆறு மாதத்திற்குள் இதய நோய்க்கு ஸ்டெண்ட்/ பைபாஸ் செய்யப்பட்டவர்கள்
4. கல்லீரல் நோய் இருப்பவர்கள்
5. சிறுநீரக நோய் இருப்பவர்கள்
6. கை கால் மதமதப்பு போன்ற நியூரோபதி அறிகுறிகள் கொண்டவர்கள்.
7.Hba1c 7க்கு மேல் இருப்பவர்கள்
ரத்த சர்க்கரை அளவுகள் கட்டுக்குள் இல்லாமல் இருப்பவர்கள்
மேற்சொன்ன அனைவரும் ரத்தம் கொடையாக கொடுக்காமல் இருப்பது கொடையாளர்களுக்கு நல்லது என்ற காரணத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் டைப் டூ டயாபடிக் என்பதோ டயாபடிஸ்க்கு மாத்திரைகள் எடுப்பதோ ரத்தம் கொடையாக கொடுப்பதற்கு தடை அல்ல. இன்சுலின் போடாமல் கடந்த ஒரு மாத காலமாக மாத்திரைகளின் அளவு மற்றும் வெரைட்டி மாறாமல் எடுத்து உங்கள் சர்க்கரை அளவுகள் கட்டுக்குள் இருக்குமானால் நீங்களும் ரத்த கொடையாளர் தான்.. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications