ரத்தம் உறைதல் குறைபாடு! வயிற்றில் கசிந்த 2 லிட்டர் ரத்தம்.. கடைசியில் இறந்த உயிர்.. உஷார்
சென்னை: ரத்தம் உறைதல் குறைபாடு இருந்தால் அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளுங்கள் என டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ரத்த உறைதல் குறைபாடு நோயான ஹீமோஃபிலியா (HEMOPHILIA) விழிப்புணர்வு தினமான இன்று
கிளினிக்கில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு நினைவுக்கு வருகிறது.

இன்னும் நெஞ்சில் பசுமரத்தாணி போல நின்றுவிட்டது. தன் நோய் குறித்த அலட்சியம் எப்படி ? ஒருவர் உயிரைப் பறிக்கும் என்பது குறித்த விழிப்புணர்வை இந்த நிகழ்வு ஏற்படுத்தும் என்றே இதை மீண்டும் பகிர்கிறேன். இறந்த அந்த ஆன்மாவுக்கு இரங்கல் தெரிவித்தவனாய் அந்த நிகழ்வை பகிர்கிறேன்.
அந்த நபருக்கு வயது 30களின் இறுதியில் இருக்கும்.
தனது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சளி காய்ச்சல் என்று அடிக்கடி வருவார். அவரது தாயைக் கூட நீரிழிவு சிகிச்சைக்காக அழைத்து வருவார். அவருக்கு பிரச்சனையென ஒரே ஒரு முறை. முதலும் கடைசியுமாக அந்த ஒரு முறை மட்டுமே வந்தார்.
பிரச்சனை மிக சாதாரணமானது முதுகில் "தசைப்பிடிப்பு" இதற்காக என்னை சந்திக்க வந்தவர்.
அவர் ஏன் இத்தனை நாள் என்னை நோய் என சந்தித்ததில்லை என்பதற்கு விளக்கம் கூறினார். அவருக்கு "ஹீமோஃபிலியா" எனும் நோய் இருப்பதாகவும் அதற்கு மதுரையில் சிறப்பு மருத்துவரிடம் (HEMATOLOGIST) சிகிச்சை எடுத்து வருவதாகவும் அவரிடம் மட்டுமே காட்டுவதை பாதுகாப்பாக உணர்வதாகவும் கூறினார்.
நானும் அதை ஆமோதித்தேன். இது போன்ற நோய் இருப்பவர்கள் அதற்குரிய சிறப்பு மருத்துவரிடம் (Hematologist) சிகிச்சை எடுப்பதே நல்லது என்று கூறினேன். ஹீமோஃபிலியா எனும் நோய் பிறவியிலேயே வரும் ரத்த உறைதல் குறைபாட்டு நோயாகும். இந்த நோய் இருப்பவர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டால் கூட ரத்தம் அவ்வளவு எளிதில் உறையாமல் சென்று கொண்டே இருக்கும்.
பல நேரங்களில் கவனிக்காமல் விட்டால் மரணம் ஏற்படும் அபாயமும் உண்டு. இப்படிப்பட்ட ஹீமோஃபிலியா நோய் இருப்பவர் தசைப்பிடிப்பு என்று வந்ததும் நான் சுதாரித்து "உங்களுக்கு தசைப்பிடிப்புக்கு வலி நிவாரணி மாத்திரை கொடுத்தால் வயிற்றில் புண் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் அங்கிருந்து ரத்தம் கசியவும் வாய்ப்புண்டு" என்று கூறி அவருக்கு மேலே தேய்க்கும் ஒரு பெய்ன் க்ரீம் கொடுத்து வெந்நீர் ஒத்தடம் மட்டும் கொடுங்கள்.
மூன்று நாட்களில் சரியாகவில்லை என்றால் மதுரையில் உள்ள சிறப்பு மருத்துவரை சென்று காண்பியுங்கள் என்று கூறினேன். அவரும் சென்று விட்டார். அடுத்த நாள் வலி குணமாகாததால் மீண்டும் என்னிடம் வருவதற்காக எண்ணியுள்ளார். அப்போது அவரது வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு பெரிய மனுஷி.
தனக்கு தெரிந்த ஒரு இடம் இருப்பதாக கூறி அங்கு சென்றால் மருந்து இன்றி வைத்தியம் பார்ப்பார்கள் என்று அனுப்பி வைத்துள்ளார். அங்கு மாலை சென்றுள்ளனர். அந்த வைத்தியர் டம்ளர் போன்ற ஒரு குவளையை வைத்து அந்த தசைப்பிடிப்பு ஏற்பட்ட பகுதியில் நன்றாக அழுத்தி இழுத்து விட்டுள்ளார். வலி உடனே சரியாகி இருக்கிறது.
ஆனால் அந்த டம்ளர் வைத்த இடத்தில் அப்படியே அது பதிந்த தடம் இருந்திருக்கிறது. அந்த தடத்துடன் என்னை மறுநாள் மாலை குற்ற உணர்ச்சியுடன் சந்திக்கிறார் அந்த நபர். "சார்.. பக்கத்து வீட்டுல சொல்றாங்கனு போய்ட்டேன் சார். டம்ளர் வச்சு அழுத்தி என்னமோ பண்ணாங்க சார். இப்ப அந்த இடமே ஒரே தடமா இருக்கு.. " நான் அந்த இடத்தை அழுத்திப் பார்த்ததில் உள்ளே ரத்தம் உறையாமல் கசிந்திருப்பதை உணர முடிந்தது.
உடனே அவருக்கு ரெஃபரல் எழுதி . அந்த சிறப்பு மருத்துவர் இருக்கும் மருத்துவமனைக்கு உடனே செல்ல வேண்டும் என்று கூறி , இந்த வகை கசிவுக்கு உடனடியாக மாற்று சிகிச்சை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் ரத்தம் ஏற்ற வேண்டும். அதனால் இது எமர்ஜென்சி . கண்டிப்பாக உடனே புறப்படுங்கள் என்று அனுப்பி வைத்தேன். ஆனால் விதி வலியது.
வீட்டுக்கு சென்ற அவருக்கு மீண்டும் ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுத்தால் போதும். மருத்துவமனைக்கு செல்ல தேவையில்லை. அடுத்த நாள் வீட்டில் முக்கிய விசேஷம் இருப்பதால் ஒரு நாள் தள்ளிப் போடலாம் என்று முடிவு செய்து விட்டனர். அன்று இரவு படுக்கசென்ற அவருக்கு மூச்சுத்திணறல் இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
பின்னிரவு மூச்சுத்திணறல் அதிகம் ஆகவே உடனே மருத்துவ கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அங்கு சுமார் ரெண்டு லிட்டர் ரத்தம் வயிற்றுப் பகுதிக்குள் கசிந்து உள்ளேயே இருப்பதாக கூறியிருக்கின்றனர் நிலைய மருத்துவர்கள். ஆயினும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
அவரது தாய் என்னிடம் ஒரு மாதம் கழித்து வந்து புலம்புகிறார்.என்னாலும் இந்த நிகழ்வை நம்ப முடியவில்லை. நான் எனது வேலையை சரியாகவே செய்தும், அலட்சியத்தால் இறந்த உயிரை அதுவும் வயதில் மிகக் குறைந்த அந்த உயிரை எண்ணி இன்றும் என் கண்கள் கசிகின்றன. காரணம் அவரே அந்த வீட்டின் பொறுப்பான ஒரே பிள்ளை. அவர் சம்பாத்தியத்தில் அந்த வீடு நன்றாக இருந்தது.
அந்த தாய் புலம்பிய விசயம் இதுவே " இவன் கூட இன்னொருத்தனும் பொறந்தான் சார். ரெட்டைப் பிள்ளைங்க.. ரெண்டு பேருக்குமே ஹீமோஃபிலியா வந்துருக்குனு பொறந்த கொஞ்ச நாள்லயே கண்டுபிடிச்சி பக்குவமா வளர்த்தேன் சார்.. ( ஆம்.. ஹீமோஃபிலியா மரபணுவால் ஏற்படும் நோய்) இளையவன் மூனு வயசுல செத்து போனான். அதுல இருந்து இவன பொத்தி பொத்தி வளர்த்தேன். எப்பவுமே இவனுக்கு ஜூரம்னா கூட சிவகங்கைல எங்கயும் காட்ட மாட்டேன்.
மதுரைல இவனுக்கு ஹீமோஃபிலியாவுக்கு பாக்குற டாக்டர் கிட்ட தான் காட்டுவேன். கல்யாணம் ஆச்சு. பேரக் குழந்தைங்க வந்துட்டாங்க. நல்லா இருக்கோம். இந்த ஒரே விசயத்துல எம்புள்ளைய கோட்டை விட்டுட்டேனே சார்" என்று கதறி அழுத அந்த ஓசை இன்னும் என் செவிகளை விட்டு அகலவில்லை.
ஒரே ஒரு அலட்சியம் தான் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் சிதைத்து விடப்போதுமானதாக இருக்கிறது. அவர் போலி வைத்தியரிடம் சென்று இருக்கக்கூடாது, சென்றார் , அவர் எனது ரெஃபரலைப் பெற்று உடனே மதுரைக்கு சென்றிருக்க வேண்டும்
செல்ல வில்லை . இதில் நிச்சயம் பலருக்கும் படிப்பினை இருக்கும் என்பதால் பகிர்கிறேன்.
உங்களுக்கென ஒரு மருத்துவரை வைத்துக் கொள்ளுங்கள். அவரை நம்புங்கள். அவர் கூறும் வார்த்தைகளை நம்புங்கள், கூகுளை நம்பாதீர்கள், மருத்துவரின் அனுபவத்திற்கு முன் கூகுள் ஒன்றுமேயில்லை. பக்கத்து வீட்டார் கூற்றை நம்பாதீர்கள். இந்த வாழ்க்கையில் ரீசெட் பட்டன் கிடையாது. உங்களுக்கு ரத்த உறைதலில் குறைபாடு இருப்பதை உணர்ந்தால் உடனே அரசு மருத்துவக் கல்லூரிகள் அல்லது தனியாரில் குருதியியல் சிறப்பு நிபுணரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளவும். ஹீமோஃபிலியாவுக்கு எதிரான சிறப்பான சிகிச்சை அரசு மருத்துவக் கல்லூரிகளில் இலவசமாக கிடைக்கிறது. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications