ஆணுறை, கருத் தடை மாத்திரை தேவையில்லை.. பைசா செலவில்லாத "அந்த டெக்னிக்" பலன் தருதா? டாக்டர் விளக்கம்
சென்னை: உடலுறவின் போது விந்து வரும் போது ஆணுறுப்பை எடுத்துவிட்டால் குழந்தை பிறக்காதா என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: திருமணம் ஆக இருப்பவர்களுக்கு தெரிய வேண்டிய முக்கிய விஷயம். எப்போது குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்யும் முழு உரிமையும் இணையருக்கு மட்டுமே உண்டு. திருமணம் என்பது இருவர் செய்து கொள்ளும் உடன்படிக்கை/ ஒப்பந்தமாகும். பரஸ்பரம் நம்பிக்கை / விட்டுக்கொடுத்தல் / கூட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்த / குடும்பத்தின் நலனுக்காக உழைத்தல் போன்ற பல சரத்துக்கள் அந்த உடன்படிக்கையில் வரும்.

இணையருக்கு இடையே மன ரீதியான ஒட்டுதல் புரிந்துணர்வு ஏற்பட்ட பின்னர் அல்லது திருமணத்திற்கு பின்பான தேனிலவு காலத்தை மகிழ்ந்திருந்துவிட்டு அல்லது குழந்தை பெற்றுக் கொள்ளத் தேவையான உடல் ரீதியான / பொருளாதார ரீதியான நிலையை எட்டி விட்டு என்று பல விசயங்களை முன்னரே யோசித்து குழந்தை பிறப்பை உடனே வைத்துக் கொள்ளவும் / தள்ளிப் போடவும் இணையருக்கு உரிமை இருக்க வேண்டும்.
திருமணமான ஒரே மாதத்தில் இந்த மாதம் பீரியட் தள்ளிப் போயிருக்கிறதா? இந்த மாசமும் தலைக்கு குளிக்கிறியா? ரெண்டு நாள் தள்ளிப் போயிருந்தாலும் யூரின் ஸ்ட்ரிப் பாத்துரலாமா? எப்போ எங்கள தாத்தா பாட்டி ஆக்க போறீங்க? என்று பல அழுத்தங்களை பெற்றோர்கள் / உற்றார்கள் உறவினர்கள் சமூகம் தரும் அழுத்தமாக இணையர் மீது குறிப்பாக பெண் பால் இணையர் மீது வலிந்து திணிப்பது நன்மையன்று என்பதை நாம் உணர வேண்டும். குழந்தை பிறப்பு என்பதற்கு உடலளவில், மனதளவில், பொருளாதார அளவில் ஒரு குடும்பம் தயாராக வேண்டியிருக்கிறது.
உடலளவில் தயாரா என்பதை மருத்துவரிடம் ஒப்பினியன் கேட்கலாம். மனதளவிலும் பொருளாதார அளவிலும் தயார் என்பதை அந்த இணையர் தான் முடிவு செய்ய முடியும். குழந்தை பிறப்பை ப்ளான் செய்வது பெரிய தப்பு இல்லை குற்றமும் இல்லை. இதைக் கூறுவதால் நான் குழந்தை பிறப்பை அனைவரும் தள்ளிப்போடுங்கள் என்று கூறுகிறேன் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். மாறாக குழந்தை பிறப்பை உடனே பெற்றுக் கொள்வதும் / சற்று தள்ளிப் போடுவதும் அவரவர் உரிமை என்கிறேன்.
இதில் சமூக அழுத்தம் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. குழந்தை பிறப்பை இணையரின் வயது, குறிப்பாக தாயின் வயது, தாயின் உடல் நிலை, இணையருக்குள் இருக்கும் மன ரீதியான ஒட்டுதல் போன்றவை முடிவு செய்வது பிறக்கும் குழந்தைக்கு நல்லது என்ற ரீதியில் கூறுகிறேன். தற்காலத்தில் இணையருக்குள் ஒட்டுதல் ஏற்படும் முன்னரே பிறக்கும் குழந்தை - இணையருக்குள் விவாகரத்து நேரும் போது தவித்துப் போவதையும் காண முடிகிறது. மாமியார் மருமகளை குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து அழுத்தம் தரும் போது உடையும் உறவுகளையும் காண முடிகிறது.
இவை குறித்து சமூகமாக நாம் அதிகம் சிந்தித்து இணக்கம் பிணக்கு இரண்டையும் தம்பதிகளே அவர்களுக்குள் டீல் செய்து கொள்ளுமாறு விடுவது விவாகரத்துகளை குறைக்கும் என்று நம்புகிறேன். திருமணமான சகோதர சகோதரிகள் குழந்தை பிறப்பை ப்ளான் செய்வதற்கு / தள்ளிப் போடுவதற்கு சில மருத்துவ டிப்ஸ்
- பாதுகாப்பின்றி உடலுறவில் ஈடுபட்டால் கரு உண்டாகும்
- ஆணுறை அணிந்து உடலுறவில் ஈடுபடுவது சிறந்தது
- விந்து வெளிப்படும் வேளையில் ஆணுறுப்பை வெளியே எடுக்கும் மகாத்மா காந்தியடிகள் பரிந்துரைத்த காய்ட்டஸ் இண்டரப்டஸ் முறை அத்தனை நம்பகத்தன்மையானதன்று. ஆணுறை அணிவதே சிறந்தது.

முதல் குழந்தை பெற்றுக் கொண்ட தம்பதியர் இரண்டாவது கர்ப்பத்தை குறைந்த பட்சம் இரண்டு வருடம் தள்ளிப் போடுவது குழந்தைக்கும் தாய்க்கும் பெற்றோர் குழந்தையை நல்ல முறையில் வளர்ப்பதற்கும் அவசியமாகிறது. இதற்கு
- ஆணுறை
- காப்பர் டி ( கர்ப்பபை கருத்தடை சாதனம்)
- தினம் உட்கொள்ளத்தக்க கருத்தடை மாத்திரை ( மாலா டி)
- வாரம் ஒரு முறை உட்கொள்ளத்தக்க ஹார்மோன் அல்லாத மாத்திரை ( சாயா)
- எமர்ஜென்சி பில் ( ஈசி பில்) ( பாதுகாப்பற்ற உடலுறவுக்கு 72 மணிநேரங்களுக்குள் உட்கொள்ள வேண்டும்.) போன்றவை அரசு / தனியாரில் கிடைக்கின்றன.
இவற்றை பயன்படுத்தி குழந்தை பிறப்பை ப்ளான் செய்ய முடியும்
மீண்டும் கூறுகிறேன் . குழந்தை பிறப்பு குறித்து இணையருக்குள் ஒட்டுதல் ஏற்பட்ட பின்பு முடிவு செய்வது சாலச் சிறந்தது. இதை முடிவு செய்யும் உரிமையை அந்த இணையருக்கு மட்டுமே கொடுத்து விடுவது நல்லது. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications