காய்ச்சலின்போது சிறுநீர் இந்த கலரில் வந்தால் ஆபத்து! இன்புட்டும் அவுட்புட்டும் ரொம்ப முக்கியம்
சென்னை: காய்ச்சலின் போது கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறை குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடுமையான காய்ச்சல் அடிக்கும் போது உடலில் இருந்து நமது நீர்ச்சத்து வெளியேறிக் கொண்டிருக்கும் ஆகவே நீர்ச்சத்தை தக்க வைத்துக்கொள்ள தேவையான அளவு நீரை உட்கொள்ள வேண்டும். தேவையான அளவு நீர் என்றால் எவ்வளவு?

ஒரு நோயாளி தனது சிறுநீரின் தன்மையை கவனித்து வர வேண்டும்.
- ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறையேனும் சிறுநீர் கழித்தாக வேண்டும்
- சிறுநீரின் அளவை தோராயமாகவாவது அளக்க வேண்டும். குழந்தைகளாக இருப்பின் சிறுநீரை பேனில் பிடித்து அளக்கலாம்.
சராசரி சிறுநீர் வெளியேறும் அளவு என்பது 1-2 மில்லி லிட்டர் / கிலோ கிராம் உடல் எடை / மணிநேரம் .
அதாவது , 20 கிலோ எடை இருக்கும் ஒரு குழந்தை சராசரியாக ஒரு மணிநேரத்திற்கு 20 முதல் 40 மில்லி சிறுநீர் கழிக்க வேண்டும். ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறை 120 முதல் 240 மில்லி கழித்தாலும் சரியே. 24மணி நேரம் கணக்கிடுகையில் 480 முதல் 960 மில்லி கழித்திருக்க வேண்டும்.
எது அபாயகட்டம் ??? 0.5 மில்லி சிறுநீர் / கிலோகிராம் உடல் எடை/ மணி நேரம் மற்றும் அதற்கும் குறைவாக சிறுநீர் கழித்தால் ஆபத்தான கட்டம் என்று பொருள். உதாரணம் - ஒரு 20 கிலோ எடை உள்ள குழந்தை , ஆறு மணிநேரமாக சிறுநீரே கழிக்காமல் இருந்தாலோ , வெறும் 60 மில்லி அல்லது அதற்கும் குறைவாக கழித்தால் ஆபத்து என அறிக.
அடுத்து சிறுநீரின் நிறம் - இளமஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். அடற் மஞ்சள் நிறத்தில் சென்றாலோ சிவப்பு நிறத்தில் சென்றாலோ ஆபத்தென அறிக. ஒருவருக்கு காய்ச்சல் அடித்தால் அவரை பட்டினியாய் போடுவது தவறு. அவரது உடலுக்கு தேவையான சக்தியை நீர் மற்றும் நீராகாரங்கள் வழி வழங்க வேண்டும். ஓ.ஆர் எஸ் எனும் உயிர் காக்கும் அமுதத்தை ஒரு லிட்டர் நன்னீரில் கலந்து அதை குடிக்க கொடுக்க வேண்டும்.
இளநீர், மோர் போன்றவற்றை கொடுக்கலாம். சாதமாக இல்லாமல் கஞ்சியாக வடித்து மூன்று வேளையும் கொடுக்கலாம். வாய்வழியாக உணவு எடுக்க இயலா நிலைவரின், மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து நாளம் வழியே திரவங்கள் ஏற்றப்படும். குறிப்பு - நீர்ச்சத்து நம்மை காக்கும் . அதை சரியாக பராமரிக்க வேண்டியது நமது பொறுப்பு. டெங்கு போன்ற பருவ கால ஜுரங்கள் குறிவைப்பது நமது நீர்ச்சத்தை தான். ஆகவே கவனம் இருந்தால் பல உயிர்கள் காக்கப்படும். இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications