Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யூடியூப் பிரசவங்கள் Vs மருத்துவமனை பிரசவங்கள்! போச்சம்பள்ளியில் நடந்தது என்ன? டாக்டர் பரூக் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்த போது கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம் குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: யூட்யூப் பார்த்து உணவுப் பதார்த்தம் செய்வதாக இருந்தால் கூட உணவு செய்வதின் அடிப்படை விஷயங்கள் ஏற்கனவே தெரிந்திருந்தால் தான் உணவு கைகூடும். அப்படியே உணவை செய்திருந்தாலும் அது முதல் தடவையே எதிர்ப்பார்த்த தரத்திலும் ருசியிலும் வருமா? என்பது கேள்விக்குறியே...

Dr Farook Abdulla says about Youtube delivery Vs Hospital delivery

சரியான சுவையில் தரத்தில் நேரத்தியில் உணவு செய்வதற்கு முறையான பயிற்சியும் தொடர் முயற்சியும் அவசியம். வெறும் யூட்யூப் வீடியோக்களைப் பார்த்து அதில் விற்பன்னர் ஆவது ஆகாத காரியம் என்று நாம் ஒப்புக் கொள்கிறோம் அல்லவா? இவ்வாறு இருக்கும் போது சமீப காலங்களில் யூட்யூப் வீடியோக்களைப் பார்த்து விட்டு , மகப்பேறு நிபுணர் அல்லாதோர் எழுதிய புத்தகங்களைப் படித்து விட்டு பிரசவங்கள் பார்ப்பது எளிதான காரியமென்று தவறான நம்பிக்கையில் "மகப்பேறு துறையில் நிபுணர் அல்லாதோர்" கண்காணிப்பில் வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொள்ள மகளிர் துணிகிறார்கள்.

அந்த காலத்துல வீட்டுல தான எங்க அப்பத்தா ஆச்சிக்குலாம் பிரசவம் பாத்தாக? அவுகலாம் பெத்தெடுக்கலயா? என்று நீங்கள் நினைப்பது எனக்கும் கேட்கிறது.. சுதந்திரத்திற்கு பின்பான இந்தியாவில் ஒரு லட்சம் பிறப்புக்கு சுமார் 1000 தாய்மார்கள் மரணமடைந்து வந்தனர். நாடு முன்னேற முன்னேற கிராமங்களில் "மருத்துவச்சிகள்" என்று அழைக்கப்பட்ட பிரசவம் பார்ப்பவர்களுக்கு முறையான பிரசவம் பார்க்கும் வழிமுறைகளும் வழங்கப்பட்டன.

எனினும் 1970-1980 களில் அந்த மரண விகிதம் 500 என்ற அளவிலேயே குறைக்க முடிந்தது. அப்போது இந்திய சுகாதாரத் துறை சிறப்பு மிகுந்த முடிவை எடுத்தது. அதன்படி வீடுகளில் நடந்து வந்த பிரசவங்களை "மருத்துவமனைகளில்" பிரசவம் பார்ப்பதற்கு முறையான நேரடி பயிற்சி பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் , கிராம சுகாதார செவிலியர்கள் கண்காணிப்பில் நடக்க வேண்டும் என்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. அதன் விளைவாக மாநிலம் முழுவதும் உள்ள கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டன. அங்கு மருத்துவர்களும் செவிலியர்களும் நியமிக்கப்பட்டனர்.

குக்கிராமங்களில் துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டன. அவற்றை கிராம சுகாதார செவிலியர் நிர்வகிக்கத் தொடங்கினர். ஒரு பெண் கர்ப்பமடைந்த நாளில் இருந்து அவள் குழந்தை பெற்று அந்த குழந்தைக்கு முறையாக தடுப்பூசி பெறச் செய்வது வரை "ஒரு தாய்" போல உடனிருந்து சேவையாற்றுமாறு பொது சுகாதாரத்துறை செயலாற்றுகிறது. தற்போது தமிழ்நாட்டில் நிகழும் 99.9% பிரசவங்கள் மருத்துவமனைகளில் மட்டுமே நிகழ்கின்றன.

இதன் விளைவாக 1970 களில் 500 தாய்மார்கள் இறந்து வந்த நிலையில் தற்போது இறப்பு விகிதத்தை பத்து மடங்கு குறைத்து 50 என்ற எண்ணிக்கைக்குள் கொண்டு வந்து விட்டோம். ஒரு வயதுக்குள் குழந்தைகள் இறப்பு ஆயிரம் பிறப்பிற்கு 15 என்ற அளவுக்கு குறைத்து இருக்கிறோம். இது அனைத்திற்கும் முக்கிய காரணம் மக்கள் மருத்துவ அறிவியலின் பக்கம் நிற்பதும் அதற்கேற்றாற்போல தனது சேவைக் கரங்களை எளியோர்க்கும் கொண்டு சேர்க்கும் வகையில் செயல்படும் பொது சுகாதாரத்துறையின் கட்டமைப்புமாகும்.

தற்போது கிராமங்கள் தோறும் பிரசவம் பார்ப்பதில் சிறப்பான பயிற்சி பெற்ற தாய் சேய் நல செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் கண்காணிப்பில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் இயங்குகின்றன. மாவட்டம் தோறும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் 24X7 செயல்படும் ஒருங்கிணைந்த தாய் சேய் அவசர சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன ( சீமான்க் மையங்கள்).

கர்ப்பிணிகளின் துரித சேவைக்கெனவே பிரத்யேகமாக 108 ஆம்புலன்ஸ் வசதி ஆரம்பிக்கப்பட்டு இலவசமாக கர்ப்பிணிகளின் குரலுக்கு ஓடோடி வருகின்றன. கர்ப்பிணிகள் தங்களை கர்ப்ப காலத்தில் கவனித்துக் கொள்ள ரூபாய் 18000 ( சத்தூட்டும் பொருட்களாகவும் ரொக்கமாகவும்) வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் போதும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. பிரசவித்த பின்
இலவசமாக தாய் சேய் இருவரையும் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடும் சேவை செயல்படுகிறது. பிறந்த குழந்தைக்கு உயிர்க்கொல்லி நோய்கள் தீண்டி விடாமல் இருக்க தடுப்பூசிகள் இலவசமாக அவர்கள் இருக்கும் கிராமங்களுக்கே சென்று வழங்கப்படுகின்றன.

இத்தனையும் எதற்கு ? ஒரு நாட்டில் பிரசவிக்கும் தாயும் அவள் பிரசவித்த சேயும் உடல் நலனுடன் உயிருடன் இருப்பது என்பது அந்த நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை அளவிடும் விசயமாக உள்ளது. தாய் மரண விகிதத்தில் இந்தியாவின் சராசரி 100க்கு சற்று கீழ் தமிழ்நாடு 50 க்கு கீழ் குறைத்து விட்டோம். எனினும் நாம் இன்னும் முன்னேற வேண்டிய விசயங்கள் இருக்கின்றன. அதை நோக்கி நம் சிந்தனையையும் முயற்சிகளையும் கொண்டு செல்லும் போது இது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன.

இது நம்மை முன்னேற்றப் பாதையில் இருந்து திருப்பி பின்னோக்கி இழுக்கும் செயலாகும் ஆணும் பெண்ணும் இணையும் போது கர்ப்பமாவது இயற்கையானது தான். ஆனால் பிரசவம் என்பது எப்போது சிக்கலாகும் என்பதை அத்துறையில் பல்லாண்டுகள் பண்டிதம் பெற்றவர்களுக்கே சவாலான காரியமாகும். அன்பிற்குரியவர்களே வீட்டில் பிரசவம் பார்ப்பது உயிருக்கு ஆபத்து. குறிப்பாக பெண்கள் தங்களின் உயிர் மற்றும் தங்களின் சேயின் உயிரை முறையான மருத்துவப் பயிற்சி கற்காத நபர்களிடம் ஒப்படைக்காதீர்கள். கர்ப்ப கால கவனிப்பும் பிரசவமும் மருத்துவமனைகளில் நிகழ்வதே சிறந்தது. அறிவினால் ஆகும் உலகு. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+