இதயத்தில் ஸ்டென்ட் கருவி வச்சவங்க மட்டன் சாப்பிடக் கூடாதா?.. விளக்குகிறார் டாக்டர் பரூக்
சென்னை: ஆட்டிறைச்சி சாப்பிட்டால் இதயத்தில் அடைப்பு ஏற்படுமா என நோயாளி ஒருவரின் சந்தேகத்திற்கு சிவகங்கை மருத்துவமனை மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா கூறியிருப்பதாவது: சமீபத்தில் கிளினிக்கில் நிகழ்ந்த சுவாரஸ்யமான உரையாடல் அறுபதுகளின் முற்பகுதியில் இருந்த நபர் என்னைச் சந்தித்தார் . அவரது மகனுக்கு உடல் பருமனுக்காக பேலியோ உணவு முறை பெற வந்திருந்தார். அவருக்கு கடந்த வருடம் இதய ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு முழுவதுமாக அடைப்பதற்குள் முன்கூட்டிய சிகிச்சையாக தோலில் துளையிட்டு சிரை வழி ஊடுருவி இதயத்தின் ரத்த நாளங்களில் உள்ள அடைப்பை எடுத்து விட்டு ஸ்டெண்ட் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

அவருக்கு இப்போதைய பிரச்சனை யாதெனில் உடல் பருமன் அதிலும் மையப்பகுதி உடல் பருமன் எனப்படும் சென்ட்ரல் ஒபிசிட்டி. இது ஆண்களுக்கு ஏற்படும் உடல் பருமன் வகையாகும். உடலில் சேரும் கொழுப்பில் பெரும்பங்கு தொப்பையாக சேரும். கூடவே உள்ளுறுப்புகளைச் சுற்றியும் உள்ளுறுப்புகளுக்குள்ளும் கொழுப்பு படிந்து கொண்டே வரும். உரையாடலுக்குச் செல்வோம் "சார் ..இந்த தொப்பைய குறைக்கணும் சார்" "மாவுச்சத்து உணவுகளை முடிந்த வரை குறைச்சுருங்க. பால் மற்றும் இனிப்பு எடுப்பதை உடனே நிறுத்துங்க. தினமும் ஒன்று முதல் ஒன்றரை மணிநேரம் வேகமாக நடைப்பயிற்சி செய்யுங்க" என்றேன்.
நடக்க முடியாது: "சார்.. மூட்டு வலி இருக்கு. என்னால் அவ்வளவு தூரம் நடக்க முடியல. தொப்பைய குறைக்க வேற நல்ல வழி சொல்லுங்க" "தானிய வகைகளை நிறுத்தி தேவையான அளவு ப்ரோட்டீன் மற்றும் நல்ல கொழுப்புள்ள உணவுகளை பரிந்துரைக்கும் பேலியோ உணவு முறைக்கு மாறுகிறீர்களா? தொப்பையை குறைக்க முடியும் என்று நம்புகிறேன்" "சார்.. இதயத்துல ஸ்டெண்ட் வச்சுருக்குறதால நான் மட்டன்லாம் சாப்புடுறது இல்ல சார். மாசத்துக்கு ஒரு தடவ சாப்டுவேன். முட்டை மஞ்சள் கரு இல்லாம தான் சாப்டுவேன். "

ஸ்டென்ட் கருவி: "சார்.. நீங்க இதயத்துல ஸ்டெண்ட் வைக்கிறதுக்கு முன்னாடி எத்தனை நாளைக்கு ஒரு தடவ சார் மட்டன் சாப்டுட்டு இருந்தீங்க?" "ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவ சார்.""அப்போ எவ்வளவு மட்டன் சார் எடுப்பீங்க?" கையின் விரல்களைக் குவித்து இத்துணூண்டு என்று குறைவான அளவைக் காட்டுகிறார். நான் கேட்டேன் " எதுக்கு சார் மட்டன் சாப்டறத குறைச்சீங்க..?" " மட்டன்னால தான் இதய நோய் வருதுனு சொன்னாங்க சார்" "ஏன் சார்.. நீங்க ரெண்டு வாரத்துக்கு ஒரு முறை இத்துணூண்டு சாப்புடுற மட்டன்னால பிரச்சனை வருதா? இல்ல...
சோறு சாப்பிடுவதால் பிரச்சினை: தினமும் அளவு இல்லாம சாப்புடுற சீனி / சர்க்கரை / சோறு / இட்லி / சப்பாத்தி/ தோசையால பிரச்சனை வருதுனு நினைக்கிறீங்களா ? ரெண்டு வாரத்துக்கு ஒருதடவ சாப்புடுற மட்டனை மாசம் ஒரு தடவ சாப்புடுறதுனால ஏதாவது மாற்றம் வரும்னு நம்புறீங்களா?" "இல்ல..சார். மட்டன் சாப்ட்டா இதயத்துல அடைப்பு வரும்னு சொன்னாங்க.. கொலஸ்ட்ரால் கூடும்னு சொன்னாங்க" "அதான் சார் நானும் கேக்கறேன். உங்களுக்கு இதயத்துல அடைப்பு ஏற்படுற வரைக்கும் ஸ்டெண்ட் வைக்குற வரைக்கும் நீங்க மாசம் ரெண்டு தடவ நூறு கிராம் மட்டன் எடுத்துட்ருந்துற ஆள் தானே.. இந்த மட்டன் தான் உங்க பிரச்சனைக்கு காரணம்னு நம்புறீங்களா? இல்ல.. தினசரி சதா மூன்று வேளையும் நீங்க எடுத்த மாவுச்சத்து நிறைந்த உணவுகளுக்கு இதுல பங்கு இருக்குனு நினைக்கிறீங்களா?"

மாவுச்சத்து: "கண்டிப்பா மாவுச்சத்து அதிகமா சாப்புடுறதுனால தான் பிரச்சனைனு தெரியுது. ஏன்னா.. நான் மட்டன் பிரியமா சாப்ட மாட்டேன். முட்டையை மஞ்சள் கரு இல்லாம தான் சில வருசமா சாப்ட்டுட்டு வந்துருக்கேன். ஆனாலும் இதய அடைப்பு ஏற்பட்டிருக்கு" "அதே தான் சார்.. ஒரு நபருக்கு தேவையான அளவு ப்ரோட்டீன் வழங்குறதுல முட்டை( மஞ்சள் கருவுடன்) கோழிக்கறி( ப்ராய்லர் உட்பட) மட்டன் , பீஃப், மீன் போன்ற உணவுகளுக்கு பங்கு இருக்கு. இதுக்கும் இதய நோய்க்கும் சம்பந்தம் இல்ல. ஆனாலும் தவறான நம்பிக்கையால இப்படியான உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பரவி மக்களிடையே உணவு சார்ந்த தவறான நம்பிக்கைகளை விதைத்து இருக்கு. இது மாறணும் சார்.. தயங்காம மட்டன் சாப்டுங்க.. ஒன்னும் ஆகாது.
சாப்பாட்டின் அளவை குறைக்கணும்: டீ காபில சீனி சேக்காதீங்க. மதியம் சாப்புடற சோறோட அளவக் குறைங்க. இது தான் ப்ரயோஜனமான மாற்றம்" அன்று ஒருவருக்கு உணவு சார்ந்த ஆரம்பகட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தினேன் என்ற திருப்தியுடன் நாளை நிறைவு செய்தேன். ஒருவர் விருப்பப்பட்டு முழு மரக்கறி உணவாளராக மாறவும் அனைத்துண்ணியாக இருப்பதற்கும் மாமிச உண்ணியாக இருப்பதற்கும் உரிமை உண்டு . அது அவரவர் உணவு சார்ந்த தேர்வு / பழக்கம். ஆனால் மாமிசம் சார்ந்த உணவுகள் மட்டும் தான் இதய நோய்க்கு காரணம் என்று கூறி மரக்கறி உணவாளராக மாறக் கட்டாயப்படுத்துவதில் அறிவியல் இல்லை. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications