ஹைதராபாத்தில் மீன் பிரசாதம் விநியோகம் தொடங்கியது! ஆஸ்துமா குணமாவது எப்படி?
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் பிரசாதம் வழங்கும் பணி தொடங்கியதை அடுத்து ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நம்பல்லி கண்காட்சி மைதானத்தில் ஒவ்வொரு ஆண்டும், பருவமழையின் தொடக்க காலமான ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

அப்போது ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிருள்ள மீனின் வாயில் மருந்தை வைத்து அதை அப்படியே பாதிக்கப்பட்டவரின் தொண்டையில் வைத்து விழுங்க வைப்பார்கள். இலவசமாக வழங்கப்படும் இந்த மீன் மருந்தை பெற இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆஸ்துமா நோயாளிகள் கூடுவார்கள்.
இதை பாத்தினி ஹரிநாத் கவுட் மற்றும் அவருடைய குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக செய்து வருகிறார்கள். நிகழ்ச்சியில் மீன் பிரசாதமாக உயிருள்ள விரால் மீனின் வாயில் மஞ்சள் நிற மூலிகை பேஸ்ட்டை வைத்து ஆயிரக்கணக்கான ஆஸ்துமா நோயாளிகளுக்கு கொடுக்கப்படும்.
சைவ உணவுக்காரர்களுக்கு இந்த மருந்து வெல்லத்தோடு சேர்த்து கொடுக்கப்படுகிறது. நம்பள்ளியில் உள்ள கண்காட்சி மைதானத்தில் பாத்தினி குடும்பத்தினரால் ஆண்டுதோறும் மீன் பிரசாரம் வழங்கப்படுகிறது. அது இந்த ஆண்டு ஜூன் 8ஆம் தேதி நேற்று முதல் தொடங்கப்பட்டது.
ஆஸ்துமா மற்றும் பிற சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மீன் பிரசாதத்தை இந்த குடும்பத்தினர் வழங்குகிறார்கள். கடந்த ஆண்டு 2 லட்சம் பேருக்கு இந்த மீன் பிரசாதம் வழங்கப்பட்டது. உயிருடன் இருக்கும் மீனின் வாயில் மருந்து வைத்து உண்ணப்படுவதால் ஆஸ்துமா நோய் எளிதில் குணமாவதாக சொல்லப்படுகிறது.
இன்றுடன் இந்த மீன் பிரசாதம் வழங்குவது முடிவடைகிறது. இத்துடன் அடுத்த ஆண்டுதான். இந்த மீன் மருந்தை பெற நோயாளிகள் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். ஒரு நாளுக்கு முன்னதாக பதிவுகள் தொடங்கும். மஞ்சள் நிறத்தினாலான மருந்தை பாத்தினி குடும்பத்தினர் தயார் செய்கிறார்கள். அந்த மருந்தில் என்னென்ன போடுவார்கள் என்பது குறித்து யாருக்கும் தெரியாது.
இந்த மருந்தை விழுங்கும் நோயாளிகள் ஒரு 45 நாட்களுக்கு குறிப்பிட்ட டயட்டை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமில்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த மருந்து கிடைக்க வேண்டும் என்பதால் பாத்தினி குடும்பத்தினர் இலவசமாக மருந்தை கொடுத்து வருகிறார்கள்.
பல ஆண்டுகளாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வருபவர்கள் ஒரு முறை இந்த மருந்தை எடுத்தால் போதும். இந்த மருந்து குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்து வருகிறது. உயிருடன் உள்ள மீனை எப்படி பயன்படுத்தலாம் என விலங்குகள் நல வாரியத்தினர் போர்க் கொடி எழுப்புகிறார்கள்.
இந்த பாத்தினி குடும்பத்தினர் 170 ஆண்டுகளாக மீன் மருந்தை வழங்கி வருகிறார்கள். ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் காலமான ஜூன் மாதத்தில் முதல் வாரத்தில் மிருகசிரீஷம், கார்த்திகை நட்சத்திர நாட்களில் இந்த மீன் மருந்து தரப்படுகிறது. நீண்ட கால ஆஸ்துமாக்களுக்கு இந்த மருந்து 3 ஆண்டுகளுக்கு சாப்பிட்டால் போதுமானது என்கிறார்கள்.
கொரோனா தொற்றின் போது இந்த மருந்து விநியோகிக்கும் பணி 3 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கொரோனா குறைந்ததும் மீண்டும் மருந்து விநியோகிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. 60 ஆண்டுகளாக இந்த மருந்து வழங்கி வந்த ஹரிநாட் கவுட் கடந்த ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications