ஐயோ பிரச்சினை.. பரவும் புதுவகை "டேஞ்சர் நோய்.." பெரு நாட்டில் 3 மாதம் அவசரநிலை பிரகடனம்!
வாஷிங்டன்: பெருவில் ஜிபிஎஸ் எனப்படும் அரிய நரம்பியல் பாதிப்பு நோய் அதிகரித்து உள்ளது. இதனால், அந்த நாட்டில் 90 நாட்களுக்கு சுகாதார அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நோயின் பாதிப்பு, அறிகுறிகள் உள்ளிட்டவை குறித்து இங்கே பார்க்கலாம்.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பெரு. ஈக்வெடார், கொலம்பியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை அண்டை நாடாக கொண்டு இருக்கும் பெரு ஒரு குடியரசு நாடாகும். இந்த நாட்டின் மக்கள் தொகை சுமார் 3.37 கோடியாகும். இயற்கை வளங்கள் அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்று பெரு நாடு. தற்போது இந்த பெரு நாடு பெரும் சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அதாவது, அரிய வகை நரம்பியல் நோய் பெரு நாட்டை தற்போது உலுக்க தொடங்கியிருக்கிறது.

பெரு நாட்டில், குய்லின்-பார் சிண்ட்ரோம்(Guillain-Barre syndrome) என்ற அரிய வகை நோய் பரவல் அதிகரித்துள்ளது. உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலமே ( immune system) நரம்புகளை தாக்க தொடங்குகிறது. இதனால், கால்கள் மற்றும் கைகளில் பாதிப்பு ஏற்படும். அதாவது, கை, கால்களில் உணர்வற்ற நிலை, பலவீனம், வலி ஏற்படும். சில நேரங்களில் பக்கவாதமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சுருக்கமாக ஜிபிஎஸ் (GBS) என்று அழைக்கப்படும் இந்த அரிய வகை நோயின் தாக்கம் பெருவில் அதிகரித்துள்ளது. பெரியவர்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் இந்த நோயின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதுவரை 165 பேருக்கு இந்த குய்லின் பார் சிண்ட்ரோம் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. நோய் பாதிப்பு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நோயின் தீவிர தன்மையை உணர்ந்த பெரு, 90 நாட்களுக்கு சுகாதார நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது.
இந்த ஜிபிஎஸ் நோய்க்கான சரியான காரணம் இன்னமும் தெரியவில்லை என்றாலும் இந்த நோய் பெரும்பாலும் கேம்பிலோபாக்டர் ஜெஜூனி என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. அதேபோல, இன்புளுயன்சா வைரஸ், சைட்டோமெலகோ வைரஸ், எப்ஸ்டீன்-பார் வைரஸ், கொரோன வைரஸ் ஆகியவைகளாலும் இந்த நோய் தூண்டப்படுகிறதாம்.
நோயின் அறிகுறிகள் என்ன?: கை, கால்களில் ஏற்படும் கூச்ச உணர்வு, பேசுவதில், விழுங்குவதில் சிரமமாக உணர்வது, இதய துடிப்பு வழக்கத்திற்கு மாறாக அதிகரிப்பது, மூச்சு விடுவதில் சிரமம், தசைகளில் பலவீனம், நடக்கும் போதோ அல்லது படிக்கட்டுகளில் ஏறும்போதே மிகவும் பலவீனமாக உணர்தல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். . செரிமான கோளாறு, சிறுநீரை அடக்குவதில் ஏற்படும் சிக்கல்கள் போன்றவையும் இதன் அறிகுறிகளாகும்.
இந்த நோய் பாதிப்புக்கு என்று தனியாக சிகிச்சை எதுவும் இல்லை. இருந்தாலும் நோயின் தீவிர தன்மை மற்றும் பாதிப்பை கட்டுப்படுத்தவும் விரைவாக குணம் அடைவதற்கும் சிகிச்சைகள் உள்ளன. பெரும்பாலும் IVIG மருந்து மூலமாக இந்த நோய் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த மருந்து தானம் செய்யப்பட்ட ரத்தத்தில் இருந்து உருவாக்கப்படுவது ஆகும். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் விதமாக இந்த மருந்து செயல்படுகிறது.
இதை பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்துவதன் மூலம் நரம்பு மண்டலங்களை நோய் எதிர்ப்பு சக்தி தாக்குவதன் வேகம் குறையும். அது மட்டும் இன்றி பிளாஸ்மா பரிமாற்ற முறையிலும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நோய் பாதித்தவர்கள் குணம் அடைவதற்கு சில மாதங்கள் வரை எடுத்துக் கொள்கிறது. ஆனால், ஒரு சிலருக்கு தசைகள் பலவீனம், நடப்பதில் சிரமம் உள்ளிட்ட பாதிப்புகள் தொடர்ந்து நீடிக்கிறதாம். ஜிபிஎஸ் நோயின் பொதுவான அறிகுறி என்பது உடல் பலவீனமாக இருப்பதுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications