தொண்டை வலி.. திடீர்னு ஆஸ்பத்திரிகளில் குவியும் கூட்டம்.. "இதை" உடனே செய்யுங்க.. டாக்டர்கள் அட்வைஸ்
சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், தொண்டை வலியுடன் கூடிய காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை சமீபகாலமாகவே, அதிகரித்து வருவதாக கூறுகிறார்கள்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, இந்தியாவில் "இன்புளூயன்சா எச்.3. என்.2" வகையை சேர்ந்த வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவிய, மக்களை கலங்கடித்தது.. இருமல், காய்ச்சல், தொண்டை வலி, உடல்வலி போன்றவைதான், இந்த வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாகும்.

உயிரிழப்புகள்: உயிரிழப்புகளையும் இந்த வைரஸ் காய்ச்சல் ஏற்படுத்தியதால், நாடு முழுவதும் இதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் அந்தந்த மாநில அரசுகள் தீவிரமாக இறங்கின.
நம்முடைய தமிழகத்திலும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவும் விகிதம் அதிகரித்தபடியே இருந்தது.. குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு ஆளானார்கள். இதனால், அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்பட்டது. வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.
அட்வைஸ்: அத்துடன் சில வழிகாட்டுதல்களை தந்து, உரிய நேரத்தில் சிகிச்சையும் தரப்பட்டதால், தமிழகத்தில் இந்த வைரஸ் தாக்கம் பெரிதாக ஏற்படுத்தவில்லை.
ஆனால், தற்போது, பருவமழை தொடங்கி உள்ள நிலையில், தொண்டை வலியுடன் கூடிய காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை சமீபகாலமாகவே, அதிகரித்து வருவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.. பருவ காலத்தில் பரவும் வழக்கமான வைரஸ் பாதிப்புதான் இது என்றாலும், முன் ஜாக்கிரதையுடன் இருப்பது அவசியம் என்றும் டாக்டர்கள் அட்வைஸ் தந்துள்ளனர்.
பகல் வேளைகளில் அதீத வெப்பமும், மாலை வேளைகளில் மழைப்பொழிவும் என 2 விதமான பருவ சூழல்கள் தமிழகத்தில் நிலவுகின்றன.. கடந்த சில நாட்களாக பருவ நிலையில் மாற்றங்கள் தென்படுவதால், இதன் எதிர்விளைவாக குழந்தைகள், முதியவர்கள், பெண்களுக்கு கடுமையான தொண்டை வலி, உடல் அசதி, காய்ச்சல், சளி பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறதாம். இதையடுத்து, மருத்துவமனைகளிலும், புறநோயாளிகளாக வருபவரின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளதாக கவலை தெரிவிக்கிறார்கள்.
3 வாரங்கள்: தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படத் தொடங்கி 3 வாரங்கள் மட்டுமே ஆன நிலையில், இப்போது, காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்று பரவி வருவது, அதற்கு மேல் கவலையை ஏற்படுத்தி வருகிறது..
இதுதொடா்பாக நோய்த்தொற்றியல் சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டா் அப்துல் கபூா் சொல்லும்போது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. எனினும், சூழலியல் மாற்றங்களால் பரவும் வைரஸ் தொற்றுகள் ஆங்காங்கே பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. அனைத்து வயதினருக்கும் தொண்டை வலி, உடல் சோர்வு மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. பெரும்பாலானோர் டாக்டர்களிடம் செல்வதில்லை.
3-ல் இருந்து 5 நாட்களுக்குள் அந்த பாதிப்புகள் குணமாகிவிடுவதே அதற்கு காரணம்.. ஆனால், எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவா்களுக்கு தீவிர தொண்டை வலி மற்றும் காய்ச்சல் ஏற்படுகிறது. அவா்களுக்கு பாராசிட்டமால் + வைட்டமின் மருந்துகளையே பெரும்பாலும் பரிந்துரைக்கிறோம்.
வெதுவெதுப்பான நீர்: வழக்கமான வைரஸ் தொற்று இது என்பதால் ஆன்டிபயோடிக், ஆன்டி வைரல் மருந்துகள் இதற்கு தேவையில்லை. வெது வெதுப்பான நீரில் உப்பு அல்லது கிருமித் தொற்று நீக்க மருந்துகளை கலந்து கொப்பளித்தால் போதுமானது. காய்ச்சிய தண்ணீரைப் குடிப்பதும், கைகளை சோப்பால் அடிக்கடி கழுவுவதும் நல்லது" என்று வலியுறுத்தியிருக்கிறார்.
அதேசமயம், இந்த தொண்டை வலிக்கு சில பாட்டி வைத்தியங்களும் இணையத்தில் வலம்வருகின்றன.. தொண்டை வலி அதிகமாக உள்ளது என்றால், ஒரு டம்ளர் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் காய்ச்சி குடிக்கும்போது தொண்டை வலிக்கு இதமாக இருக்கும்.. இஞ்சி டீ-யில் மிளகுத்தூளை சேர்த்து குடிக்கலாம்.. அதேபோல, சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாக துளசி இலைகள் உள்ளன.. இலையை அப்படியே சாப்பிடலாம் அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து டீ போட்டு குடித்தாலும் இதமாக இருக்கும்.
பெஸ்ட் தீர்வு: எனினும், டாக்டர் சொல்வதுபோல, தொண்டை வலியைக் குணப்படுத்த உப்பு நீரில் வாய் கொப்பளிப்பதுதான் "பெஸ்ட்" தீர்வு.. இதனால் தொண்டையில் உள்ள தொற்றுகளைக் கொல்வதற்கும் உதவியாக உள்ளது. ஆப்பிள் சைடர் வினிகரை வெந்நீரில் கொப்பளித்து வந்தாலும் தொண்டை வலியைக் குணப்படுத்துவதோடு வலியையும் குறைக்க உதவியாக இருக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications