ஹெல்த் டிப்ஸ்.. வெயிலை 'நாக்கவுட்' செய்த கோடை மழை.. திடீர் சளி, காய்ச்சலிலிருந்து தப்பிப்பது எப்படி?
சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. வெப்பநிலை வெகுவாக குறைந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது. ஆனால் மறுபுறம் சளி, காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகளும் உருவாகி வருகிறது. இந்த பாதிப்பிலிருந்து மீள மருத்துவர்கள் சில ஹெல்த் டிப்ஸ்களை கொடுத்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இன்னும் அக்னி வெயில் தொடங்கவில்லை. ஆனால் அதற்கு முன்னரே வெயில் பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கூட்டம் கூட்டமாக கோடை வாசஸ்தலங்களுக்கு படையெடுத்துள்ளனர். இதனால் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கையில்தான் கோடை மழை பாரபட்சமில்லாமல் தமிழ்நாட்டை குளிர்வித்துள்ளது.

சென்னை தொடங்கி மேற்கு, கொங்கு, டெல்டா, தென் மாவட்டங்கள் வரை மழை பெய்திருக்கிறது. குறிப்பாக சென்னையில் நேற்று அதிகாலை முதல் லேசான தூறல் தொடங்கியது. பின்னர் மாலை இரவு என மழை விட்டு விட்டு பெய்ததில் முக்கியமான சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல தேங்கியது. இப்படி திடீரென எதிர்பாராத மழை காரணமாக சென்னை மக்கள் குஷியடைந்திருக்கிறார்கள். வெப்பம் ஓரளவு தணிந்திருக்கிறது. அனல் கொஞ்சம் இருந்தாலும் மேகமூட்டமான கால நிலை சென்னை வாசிகளை பெருமூச்சு விட வைத்திருக்கிறது.
ஆனால் இந்த எதிர்பாராத மழை காரணமாக சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. பொதுவாக கோடை மழையில் நனையக்கூடாது என்பார்கள். ஏனெனில் திடீரென மாறும் காலநிலை உடல் நலத்தை பெரியதாக பாதிக்கும். அப்படிதான் தற்போது சளி, காய்ச்சல் உள்ளிட்டவை லேசாக பரவ தொடங்கியுள்ளது. மழை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளதால் இந்த சளி காய்ச்சல் பாதிப்புகள் மேலும் தீவிரமடையும் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அதேபோல இதிலிருந்து தப்பிப்பதற்கான வழியையும் அவர்கள் காட்டியுள்ளனர். கொரோனா தொற்று தற்போது கொஞ்சம் வீரியமடைந்துள்ளதால் சாதாரண சளி காய்ச்சலை கண்டு கொரோனா தொற்று என்று குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை எனவும் கூறியுள்ளனர். முதலில் இந்த பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக அலுவலகம் செல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது வைரஸ் காய்ச்சலா? சாதாரண காய்ச்சலா? என்பது தெரியாது. இந்த மாதிரி சூழலில் அலுவலகம் சென்றால் அங்கு மற்றவர்களுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.
எனவே காய்ச்சல் குறித்து முறையான மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். பிறகு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல ஓய்வு நேரத்தில் செல்போன், லேப்டாப், டிவி உள்ளிட்டவற்றை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். முடிந்த அளவுக்கு தூங்க முயற்சிக்கலாம். நம்மால் முடிந்த சிறு சிறு வேலைகளை செய்யலாம். சளி அதிகமாக வெளியேறுகிறது எனில் அதனை அவ்வப்போது வெளியேற்றிவிட வேண்டும். தூங்கும்போதும் சளி தொல்லை இருப்பின் உயரமான தலையனையை பயன்படுத்தலாம். இல்லையெனில் அந்த நீர் தலைக்கு சென்று சைனஸ் பிரச்னையை ஏற்படுத்திவிடும்.
இந்த நேரத்தில் உடல் மிகுந்த சோர்வாக இருக்ககும். எனவே நல்ல உறக்கத்தை கொரும். ஆனால் நமக்கு இருக்கும் தலைவலிக்கு தூக்கமே வராது. எனவே வெந்நீரில் குளிப்பது இதற்கு தீர்வை கொடுக்கும். வெந்நீரில் குளிப்பதன் மூலம் உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். தூக்கமும் கண்ணை சொக்கிக்கொண்டு வரும். வெந்நீரை குடிப்பதற்கும் பயன்படுத்தலாம். இதன் மூலம் உடலில் நீர் வறட்சியை ஈடு செய்ய முடியும். சோடா, கார்போ ஹைட்ரேட் அடங்கிய குளிர்பானங்கள், மது வகைகள் ஆகியவற்றை விட தண்ணீர் குடிப்பதுதான் சளியை குணப்படுத்துவதற்கு சிறந்த மருந்து. முடிந்தால் சிறதளவு சர்க்கரை, உப்பு கலந்து அந்த தண்ணீரை குடிக்கலாம். இது உடலை வறட்சியிலிருந்து பாதுகாக்கும்.
இங்கு சொல்லப்பட்டுள்ளது வெறும் பொதுவான அறிவிப்புகள்தான். எனவே இணை நோய்கள், வேறு சில பாதிப்புகள் உள்ளவர்களுக்கு இந்த அறிவிப்புகளிலிருந்து மாறுபட்ட மருத்துவ உதவி தேவைப்படலாம். எனவே மருத்துவர்களின் நேரடி ஆலோசனை மட்டும் இறுதியானதாகும்.












Click it and Unblock the Notifications