பால் குடிப்பதால் மாரடைப்பு.. பெண்களுக்கு மட்டுமே இந்த பாதிப்பு வருமாம்.. எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!
டெல்லி: நாம் தினசரி பயன்படுத்தும் பால் காரணமாக இதய நோய்ப் பாதிப்பு, குறிப்பாக மாரடைப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அதிலும் பெண்களுக்கு மட்டுமே இந்த பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும், பாலுக்குப் பதிலாக கால்சியம் சத்துக்கு எது சரியாக இருக்கும் என்பது குறித்தும் ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
நாம் தினசரி பயன்படுத்தும் பால் குறித்து மிக முக்கிய ஆய்வு முடிவு ஒன்று வெளியாகி உள்ளது. நமது உடலில் பால் ஏற்படுத்தும் உடல்நிலை பாதிப்புகள் குறித்து அதில் விளக்கப்பட்டுள்ளது.

ஆபத்து: குறிப்பாகத் தினசரி பாலை குடிப்பது என்பது மாரடைப்பு அபாயத்தை அதிகரிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஸ்வீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இது குறித்த ஆய்வை நடத்தியுள்ளனர். அதில் அவர்கள் பாலில் உள்ள லாக்டோஸ் உடலில் என்ன மாற்றத்தைச் செய்கிறது என்பது குறித்து ஆய்வு செய்துள்ளனர்.
அதில் தான் லாக்டோஸ் செல் சேதத்தை ஏற்படுத்துவதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். மேலும், இது உங்கள் இதயத்தை வேகமாக முதிர்ச்சியடையச் செய்வதாகவும் இதயத்திற்குக் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
பெண்களுக்கு மட்டும்: அதிலும் பெண்களுக்கு மட்டுமே இந்த பாதிப்பு ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆண்களின் உடல்கள் சர்க்கரையை நன்றாக ஜீரணிப்பதால் எந்தவொரு பாதிப்பும் ஆண்களுக்கு ஏற்படுவதில்லை என்பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது சுமார் ஒரு லட்சம் பேரைப் பரிசோதித்து விரிவாக உருவாக்கப்பட்ட ஆய்வாகும். சுமார் 60,000 பேர் பெண்கள், 40,000 பேர் ஆண்களை இதில் சோதித்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை முறை குறித்து முதலில் கேள்வி எழுப்பியுள்ளனர். பின்னர் தொடர்ச்சியாக 33 ஆண்டுகள் அவர்களைப் பின்தொடர்ந்து உடல்நிலை, உணவு முறை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
ஆபத்து: அதில் தான் தினசரி அதிகளவில் பால் குடிப்பவருக்கு இதய செயலிழப்பு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உட்பட கரோனரி இதய நோய்களின் ஆபத்து அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.. குறிப்பாகப் பெண்கள் எவ்வளவு அதிகமாகப் பால் அருந்துகிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களின் இதயம் அதிக ஆபத்தில் இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
தினமும் 600 மிலி பால் குடிக்கும் போது பெண்கள் 12 சதவீதமும், 800 மிலி பால் குடிக்கும் போது 21 சதவீதமும் இதய பாதிப்பு அதிகரிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. முழு கொழுப்பு கொண்ட பால், குறைந்த கொழுப்புள்ள பால் என எதை எடுத்துக் கொண்டாலும் இதே பாதிப்பு தான் இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
எவ்வளவு குடிக்கலாம்: இந்த ஆய்வை நடத்திய பேராசிரியர் கார்ல் மைக்கேல்சன், "இதய நோய்களைத் தடுப்பதற்கு ஆரோக்கியமான உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒரு நாளைக்கு 300மிலி மேல் பால் எடுத்துக் கொள்வது இஸ்கிமிக் இதய நோய் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதை அதிகரிக்கிறது. இந்த பாதிப்பு பெண்களுக்குத் தான் ஏற்படுகிறது. ஆண்களுக்கு இல்லை" என்றார்.
எவை மாற்று: பெரும்பாலும் கால்சியம் சத்து உடலுக்குத் தேவை என்பதாலேயே பலரும் பாலை குடிப்பார்கள். உடலில் உள்ள எலும்பு வலுவாக இருக்க இந்த கால்சியம் சத்து முக்கியமாகும். கால்சியம் சத்து வேண்டும் எனக் கருதுவோர் பாலுக்குப் பதிலாகத் தயிர் அல்லது மோரை எடுத்துக் கொள்ளலாம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். பால் தயிராகும் நொதித்தல் செயல்முறை பாலின் லாக்டோஸில் உடைக்கப்படுகிறது. எனவே தான் தயிர், மோர் உடலின் ரத்த அழுத்த அளவையும் குறைத்து இதய நோய்க்கான ஆபத்துகளையும் குறைப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications