தங்கம் விலை சரிவு.. இனி பாதுகாப்பே இல்லை! வீழ்ந்த சொர்க்கம்! மக்களை பதற வைக்கும் 4 பின்னணிகள்!
சென்னை: உலகில் எங்கு போர் மூண்டாலும் சரி, பொருளாதார நெருக்கடி வெடித்தாலும் சரி, சாமானியர்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரை அனைவரும் ஓடிப் போய் தஞ்சமடைவது தங்கத்திடம்தான். பங்குச்சந்தை முதலீடுகள் சரிவைச் சந்திக்கும் போதெல்லாம், நஷ்டத்தை ஈடுகட்டும் ஒரு 'இடி தாங்கி'யாக (Shock Absorber) தங்கம் செயல்பட்டு வந்துள்ளது. ஆனால், சமீபகாலமாக இந்த வழக்கமான கணக்கு தறுமாறிப் போயுள்ளது. உலகமே பதற்றத்தில் இருக்கும் இந்தச் சூழலில், தங்கத்தின் விலை ஏறுவதற்குப் பதிலாகத் தொடர்ந்து சரிந்து வருவது முதலீட்டாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்கா - ஈரான் மோதல் தீவிரமடைவதற்குச் சரியாக ஒரு நாள் முன்பு, இந்தியாவில் 24 கேரட் தங்கம் 10 கிராம் ₹1.6 லட்சமாக இருந்தது. போர்ச் செய்தி வெளியானதும், ஒரே நாளில் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து ₹1.73 லட்சத்தை எட்டியது. ஆனால், அந்த உச்சத்திற்குப் பிறகு தங்கம் விலை தொடர்ந்து கீழ்நோக்கியே பயணிக்கிறது. ஜூன் 19 நிலவரப்படி, தங்கம் விலை ₹1.46 லட்சமாக சரிந்துள்ளது. இது அதன் உச்ச விலையிலிருந்து சுமார் 16% வீழ்ச்சியாகும். சர்வதேச சந்தையில் தங்கம் விலை 22% வரை சரிந்துள்ள போதிலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததால், இந்திய முதலீட்டாளர்கள் ஓரளவுக்குப் பெரும் நஷ்டத்தில் இருந்து தப்பித்துள்ளனர்.

இந்த விசித்திரமான விலை வீழ்ச்சிக்குக் காரணமான 4 முக்கிய காரணங்களையும், தற்போதைய சூழலில் நாம் தங்கத்தில் முதலீடு செய்யலாமா என்பதையும் விரிவாகப் பார்ப்போம்.
தங்கம் விலை சரிவிற்கான 4 முக்கிய காரணங்கள்
1. அமெரிக்க அரசு பத்திரங்களின் வட்டி உயர்வு (Rising Treasury Yields)
சர்வதேச அளவில் பெரிய முதலீட்டு நிறுவனங்கள், தங்கத்தையும் அமெரிக்க அரசாங்கத்தின் பத்திரங்களையும் (US Treasuries) சமமான பாதுகாப்பான முதலீடுகளாகவே கருதுகின்றன. எனவே, அமெரிக்க அரசு பத்திரங்களின் வட்டி விகிதம் (Yield) அதிகரிக்கும் போது, முதலீட்டாளர்கள் தங்கத்தை விடுத்து அதன் பக்கம் திரும்புவார்கள்.
அதிபர் டிரம்ப் ஈரான் விவகாரத்தைக் கையில் எடுப்பதற்கு முன்பு, அமெரிக்க வட்டி விகிதங்கள் குறையும் என்ற எதிர்பார்ப்பில் இந்த பத்திரங்களின் வட்டி தொடர்ந்து சரிந்து வந்தது. ஆனால், பிப்ரவரியில் போர் வெடித்ததும், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டது. இதனால் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற அச்சம் உருவானது. இதன் விளைவாக, 4 சதவீதத்திற்கும் கீழ் இருந்த பத்திரங்களின் வட்டி விகிதம் மே மாதத்தில் 4.5 சதவீதத்தைத் தாண்டியது. இந்த வட்டி உயர்வால் கவரப்பட்ட முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்றுவிட்டு அரசு பத்திரங்களில் முதலீடு செய்யத் தொடங்கினர்.
2. மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதைக் குறைத்தது (Central Bank Sales)
கடந்த சில வருடங்களாக தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்ததற்கு, உலக நாடுகளின் மத்திய வங்கிகள் (Central Banks) டாலருக்கு மாற்றாக தங்கத்தை அசுர வேகத்தில் வாங்கிச் சேமித்ததுதான் முக்கிய காரணம். ஆனால், இந்த வங்கிகள் தங்கம் விலை குறைவாக இருக்கும்போது அதிகமாக வாங்கி, விலை உச்சத்தை எட்டும்போது வாங்குவதைக் குறைத்துக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்டுள்ளன.
உலக தங்க கவுன்சில் (WGC) தரவுகளின்படி, 2024 இறுதி காலாண்டில் தங்கம் விலை $2,600 ஆக இருந்தபோது 367 டன்கள் வாங்கிய மத்திய வங்கிகள், 2026 ஆரம்பத்தில் விலை $4,800 ஐத் தொட்டபோது தங்களின் கொள்முதலை 243 டன்களாகக் குறைத்துக் கொண்டன. அதுமட்டுமின்றி, போர் மற்றும் அவசர பணத் தேவைகளுக்காக துருக்கி, ரஷ்யா, பல்கேரியா போன்ற நாடுகள் தங்களின் இருப்பிலிருந்து சுமார் 103 டன் தங்கத்தை விற்று பணமாக்கியுள்ளன. இது சந்தையில் தங்கத்தின் மதிப்பை மேலும் குறைத்தது.
3. தங்க நிதி (Gold ETF) முதலீடுகள் வெளியேற்றம்
மத்திய வங்கிகள் விலையைப் பார்த்து நிதானமாகச் செயல்பட்டால், சாதாரண முதலீட்டாளர்கள் அப்படியே தலைகீழாகச் செயல்படுவார்கள். தங்கம் விலை தாறுமாறாக ஏறும் போது 'இடிஎஃப்' (Gold ETF) எனப்படும் தங்க நிதித் திட்டங்களில் போட்டி போட்டுக்கொண்டு பணத்தைக் கொட்டுவார்கள், விலை குறையும் அறிகுறி தெரிந்ததும் பயந்து விற்றுவிட்டு ஓடுவார்கள்.
தங்கம் விலை $2,600 லிருந்து $4,100 ஆக உயர்ந்தபோது, இடிஎஃப் வழியான தங்கம் கொள்முதல் 20 டன்னிலிருந்து 174 டன்னாக எகிறியது. ஆனால், 2026 மார்ச் மாதத்திற்குப் பிறகு தங்கம் விலை சற்று சரியத் தொடங்கியதும், முதலீட்டாளர்கள் தங்களின் இடிஎஃப் பங்குகளை அவசர அவசரமாக விற்கத் தொடங்கினர். இந்த முதலீட்டு வெளியேற்றம் தங்கம் விலையைச் சரிவை நோக்கித் தள்ளியது.
4. அசுர லாபத்தை கையில் எடுத்த முதலீட்டாளர்கள் (Profit-booking)
தங்கத்தின் நீண்ட காலச் சராசரி ஆண்டு லாபம் என்பது வெறும் 10 சதவீத ஒட்டியே இருக்கும். ஆனால், மார்ச் 2025 முதல் பிப்ரவரி 2026 வரையிலான ஓராண்டில் தங்கம் விலை யாரும் ஊகிக்க முடியாதபடி 90 சதவீதம் ($2,800 லிருந்து $5,200 வரை) ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.
டிரம்ப் விதித்த வர்த்தக வரிகளாலும், அமெரிக்க வட்டி விகித சரிவாலும் ஏற்பட்ட இந்த அசாத்திய லாபத்தை, பிப்ரவரி 2026-ல் தங்கம் விலை உச்சமடைந்தபோது முதலீட்டாளர்கள் தக்கவைக்க விரும்பினர். ஈரான் போரினால் பங்குச்சந்தைகள் சரிந்த வேளையில், தங்களுக்குப் பெரும் லாபத்தைக் கொடுத்த ஒரே சொத்தான தங்கத்தை விற்று லாபத்தை கையில் எடுக்க (Profit Booking) முதலீட்டாளர்கள் முற்பட்டதே இந்த திடீர் வீழ்ச்சிக்குக் கடைசி காரணமாகும்.
நாம் என்ன செய்ய வேண்டும்? முதலீட்டாளர்களுக்கான பாடம்:
ஒரு பெரிய உலகளாவிய நெருக்கடியோ அல்லது போரோ தொடங்கிய பிறகு, பதற்றத்தில் அவசர அவசரமாகத் தங்கத்தில் முதலீடு செய்வது எப்போதுமே ஆபத்தானது. தங்கம் எப்போதும் லாபம் தரும் என்ற குருட்டு நம்பிக்கை முதலீட்டிற்கு உதவாது.
பங்குச்சந்தையைப் போலவே தங்கத்தின் விலையையும் யாராலும் துல்லியமாகக் கணிக்க முடியாது. ஏனெனில் தங்கத்திற்கு என்று தனியாக நிலையான வருமானம் (வட்டி அல்லது லாபப்பங்கு) எதுவும் கிடையாது. எனினும், நீண்ட கால அடிப்படையில் (5 ஆண்டுகள்) பார்த்தால், இந்திய முதலீட்டாளர்களுக்கு தங்கம் சுமார் 12-13 சதவீத வருமானத்தை அளித்துள்ளது.
எனவே, உங்களுடைய மொத்த முதலீட்டுப் போர்ட்ஃபோலியோவில் (Portfolio) எப்போதும் 10 முதல் 15 சதவீதத்தை நிலையான முதலீடாகத் தங்கத்தில் வைத்திருக்கலாம். ஆனால் அது பங்குகள் அல்லது பத்திரங்களுக்கு இணையாக இருக்க முடியாது. இனிவரும் காலங்களில் தங்கத்தின் விலையைக் கணிக்க, அமெரிக்காவின் வட்டி விகித மாற்றங்களையும், அரசு பத்திரங்களின் வட்டி விகிதத்தையும் உன்னிப்பாகக் கவனியுங்கள்.












Click it and Unblock the Notifications