அரசுப் பள்ளி மேடையில் குத்தாட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன்.. தவெக பதாகைகளால் மேலூரில் சர்ச்சை!
மதுரை: மதுரை மாவட்டம் மேலூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாரத்தான் நிகழ்ச்சியின் போது அமைச்சர் விஸ்வநாதன் திரைப்படப் பாடல்களுக்கு நடனமாடிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் பள்ளி வளாகத்தில் தவெக சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய்யின் திரைப்பட பாடலுக்கு அமைச்சர் குத்தாட்டம் போட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குத்தாட்டம் போட்ட அமைச்சர்
முதல்வர் விஜய் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, "போதை இல்லா தமிழகம்" மற்றும் "பெண்கள் பாதுகாப்பு" குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில் மதுரை மாவட்டம் மேலூரில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை மையமாகக் கொண்டு நடைபெற்றது.
மாரத்தான் போட்டியை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி மேலூரின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மேடை நிகழ்ச்சியில் திரைப்படப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்ட நிலையில், அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் தவெக நிர்வாகிகள் சிலர் மேடையில் நடனமாடினர். விஜய்யின் சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி விவாதத்தை கிளப்பியுள்ளன.
சமூக ஆர்வலர்கள் அதிருப்தி
மேலும், அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக தவெக சார்பில் ஏராளமான விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. திருமண விழாக்களை ஒத்த வகையில் பள்ளி வளாகம் அலங்கரிக்கப்பட்டிருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கல்வி நிறுவன வளாகத்தில் அரசியல் கட்சிகளின் விளம்பரப் பதாகைகள் மற்றும் பிரசார அம்சங்கள் இடம்பெற்றது குறித்து சில பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அரசு பள்ளிகள் அரசியல் நிகழ்வுகளுக்கான இடமாக மாறக் கூடாது என்றும், கல்வி வளாகங்களில் கட்சி சார்ந்த விளம்பரங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே, இந்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு பல்வேறு தரப்பினரிடையே விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்
இந்த நிலையில் அமைச்சர் விஸ்வநாதன் இது குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. நாங்களும் விஜய் பிறந்தநாளை கொண்டாடினோம். இது ஒரு தப்பா.. அங்கு இருந்தவர்கள் அழைத்ததால் அவர்களுக்கு மதிப்பு கொடுத்து கூடவே நடனம் ஆடினோம். இதில் என்ன தவறு இருக்கிறது. தப்பு கிடையாது" என்றார்.














Click it and Unblock the Notifications