யூரிக் அமிலம் எகிறுதே.. உப்பு அதிகமானால் தப்பு.. தினமும் நமக்கு உப்பின் அளவு இவ்வளவுதான்.. கவனம்
சென்னை: உணவில் அடிப்படை சுவை கிடைப்பதற்கு காரணமே அதில் சேர்க்கப்படும் உப்புதான்... எனினும், எந்த அளவுக்கு உப்பு சுவையை தருகிறதோ, அந்த அளவுக்கு தீமையையும் தந்து விடுகிறது.. ஆம், உப்பின் அளவு கூடிவிட்டால், வாழ்நாளெல்லாம் இன்னல்தான் என்கிறார்கள் நிபுணர்கள். அந்தவகையில், உப்பு அதிகரிப்பதால் ஏற்படும் உபாதைகள் என்னென்ன? உப்பு பயன்பாடு குறித்து ஆய்வுகள் சொல்வதென்ன? சுருக்கமாக பார்ப்போம்.
உணவில் கூடுதல் உப்பை சேர்ப்பவர்கள் உடல்நிலை பாதிப்பால் முன்கூட்டியே இறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.. நமக்கு சோடியம் தேவையான சத்துதான் என்றாலும், நமக்கு தேவையான சோடியம் இயற்கை காய்கறிகளில் இருந்தே கிடைத்துவிடுகிறது.. எனவே, இதற்கென தனியாக உப்பு என்ற பெயரில் சோடியம் தேவைப்படாது.

உலக சுகாதார அமைப்பு
இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளதாலும், சிறுநீரக தொற்று, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகமாகி வருவதாலும், உலக சுகாதார அமைப்பின் மருத்துவர்கள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உப்பு எந்த அளவு பயன்படுத்தப்படுகிறது என்கிற ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டிருந்தனர். அந்த ஆய்வில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதாவது, உலகின் பல்வேறு நாடுகளிலும் உப்பை மக்கள் அதிகம் விரும்புகிறார்களாம். இதனால், உப்பை அதிகமாக சாப்பிடும்போது, இதய நோய்கள், சிறுநீரக பாதிப்பு, உயர் ரத்த அழுத்த நோய்கள் பெருகுகிறதாம். குறிப்பாக, உலக அளவில் சீன மக்கள்தான் அதிக அளவு உப்பை எடுத்துக்கொள்கிறார்களாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
அதுமட்டுமல்ல, உணவுகளை பதப்படுத்துவதற்காக உப்பு அதிகம் சேர்க்கப்படுகிறது. அதனால்தான், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பழங்கள், காய்கறிகளை தவிர்க்க சொல்கிறார்கள். இவைகளை உண்ணும்போது, வயிற்று புற்றுநோய் அபாயம் ஏற்படலாம்.. சூப், ஊறுகாய், கருவாடு, அப்பளம் போன்ற உணவிலும் உப்பு அதிகமாக சேர்க்கப்படுவதால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. எனவே, சிறுநீரக பாதிப்புள்ளவர்கள், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பை குறைக்க வேண்டும். அதிக உப்பால் ரத்த நாளத்தின் உள்சுவரில் கொழுப்பு படிவதால் உள்சுவரின் செயல்திறன் குறைகிறது. 45 வயதிற்கு மேற்பட்டவர்கள், பெண்களை விட ஆண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவர்.
உப்பு - தப்பு தப்பு
அதிக உப்பு உண்பதால், வயிற்றுப்புண், இதய சுவரில் வீக்கம், சிறுநீரக கோளாறு, சிறுநீரக கல் நோய் ஏற்படும். எலும்பின் அடர்த்தியும் குறைவதுடன், யூரியா மற்றும் யூரிக் ஆசிட் போன்ற அமிலமும் அதிகரித்துவிடும்.. முக்கியமாக, உடல் உழைப்பும், வியர்வையும் இல்லாத சூழலில் உப்பு சேரக்கூடாது. ரத்தகொதிப்பு மாத்திரைகள் சாப்பிட்டாலும்கூட, உப்பை கட்டுப்படுத்தாவிட்டால் ரத்த அழுத்தம் குறையாது. எனவே உணவு கட்டுப்பாடு என்பது சர்க்கரை நோய்க்கு மட்டுமின்றி ரத்த அழுத்த நோய்க்கும் முக்கியமானதாகும்.
உப்பு அளவு எவ்வளவு
உப்பு அதிகமானால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய், ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். உடலில் உப்பு அதிகம் சேரும்போது கால்சியம் வெளியேறுகிறது. இதனால் எலும்பின் பலம் பாதிக்கப்படும். அதேபோல உப்பு அதிகமானால் உடலில் தேவையற்ற நீர் தேங்கும். பொதுவாக, சராசரியாக நாள் ஒன்றுக்கு 5 கிராம் அளவுக்கான உப்பை சேர்த்துக் கொள்ளலாம்.
எனினும், ஆரோக்கியமான ஒரு மனிதனுக்கு தினமும் 2.3 கிராம் அளவு உப்பு போதும் என்கிறார்கள்.. இல்லாவிட்டால், அதிக உப்பு மனிதனின் ஆயுளை குறைத்துவிடும்.












Click it and Unblock the Notifications