இனி சர்க்கரை நோயாளிக்கு பாதங்களை அகற்ற தேவையில்லை! தமிழக அரசின் பாதம் பாதுகாப்போம் திட்டம் இருக்கே
சென்னை: சர்க்கரை நோயாளிகளுக்கான பாதம் பாதுகாப்போம் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டமும் அமலில் உள்ளது. இதன்படி பிபி, சுகர் உள்ளவர்களுக்கு அதற்கான சோதனையும் மருந்துகளையும் தமிழக சுகாதாரத் துறை வழங்கி வருகிறது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 25 சதவீதம் பேர் பாதம் தொடர்பான பாதிப்புகளால் அவதிப்படுவதும், அவர்களில் 85 சதவீதம் பேர் கால்களை இழக்க நேரிடுவதும் தேசிய பேரிடர் ஆகும். தமிழகத்தில் 80 லட்சம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை நோயால் ஏற்படும் பாத பாதிப்புகளை ஆரம்ப நிலையில் கண்டறியாவிட்டால், ஆபத்தான பின்விளைவுகளும், கிருமி தொற்று மற்றும் கால்களை இழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. முன்கூட்டியே கண்டறிந்தால் 85 சதவீத கால் அகற்றத்தை தடுத்துவிட முடியும்.

இதை கருத்தில் கொண்டு, தமிழக அரசால் 'பாதம் பாதுகாப்போம்’ திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. சர்க்கரை நோயால் கால் பாதங்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்கவும், கால் அகற்றப்படுவதை தடுக்கவும் 'பாதம் பாதுகாப்போம் திட்டம்’ முக்கிய பங்கு வகிக்கிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் இதை கட்டமைத்து, நாட்டிலேயே முதல்முறையாக, 36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மூலம் ஒருங்கிணைந்த பாத மருத்துவ சேவைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தியதில், இதுவரை 1.65 லட்சம் பேருக்கு பாத பாதிப்பு கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.26.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 2,336 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 299 அரசு மருத்துவமனைகள், 36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் பாத பாதிப்பு கண்டறிதல் மையங்கள் நிறுவப்பட உள்ளன.
இதன்மூலம் 80 லட்சம் சர்க்கரை நோயாளிகளை பாத பரிசோதனைக்கு உட்படுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஏற்படும் பாத உணர்வு இழப்பு, ரத்த நாள அடைப்புகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications