எப்புட்றா! வெயில் என்ன பொளந்தாலும்.. பானை நீர் எப்போதும் ஜில்தான்! இதில் இருக்கும் நன்மைகள் தெரியுமா
சென்னை: வெயிலின் தாக்கம் தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், கோடையில் இருந்து எஸ்கேப் ஆகி குளிர்ந்த நீரைக் குடிக்க ஒரு சூப்பர் வழி இருக்கிறது. அது குறித்துப் பார்க்கலாம்.
கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கிறது.. அதிலும் கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் இந்தாண்டு வெப்பம் அதிகமாகவே இருக்கிறது. வானிலை ஆய்வாளர்களும் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தாண்டு தமிழ்நாட்டில் பல இடங்களில் வெப்பம் அசாட்லாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.. அதிகபட்சமாகத் தமிழ்நாட்டில் கரூர் பரமத்தியில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தைக் கூட தொட்டுள்ளது.
கோடை வெயில்: மதிய நேரங்களில் வெளியே செல்வது கூட கஷ்டமாகவே உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மதிய நேரத்தில் வெளியே வர வேண்டாம் என்றே பலரும் அறிவுறுத்தி வருகின்றனர். கோடைக் காலத்தில் நமது உடலில் இருக்கும் நீர்ச்சத்து அதிகளவில் வேர்வையாக வெளியேறும் என்பதால் தண்ணீர் போதியளவில் குடிப்பது அவசியமாகும். கோடை காலம் என்று இல்லாமல் எந்தவொரு சீசன் என்றாலும் போதியளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அதிலும் கோடைக் காலத்தில் தண்ணீர் நுகர்வு மேலும் அதிகரிக்கவே செய்யும்.
அதிலும் கோடை வெயிலில் இருந்து எஸ்கேப் ஆகப் பெரும்பாலானோர் பிரிட்ஜில் இருந்து ஜில் தண்ணீரைக் குடிக்கவே விரும்புகிறார்கள். இருப்பினும், வெளியே சென்று வரும் போது, இப்படி உடனடியாக ஜில் நீரைக் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது இல்லை என்றே பலரும் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், மற்ற பாத்திரங்களில் இருக்கும் நீர் கோடைக் காலத்தில் தானாகவே சூடாகிவிடுகிறது. இப்படி இருக்கும்போது உடல் ஆரோக்கியத்திற்கு என்ன செய்யலாம் என்ற கேள்வி இயல்பாகவே வரும். அதற்கான பதிலைப் பார்க்கலாம்.
மண் பானைகள்: சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கோடைக் காலம் என்றாலே வீடுகளில் மண் பானைகளை ஆக்கிரமித்துக் கொள்ளும். ஆனால், இப்போதெல்லாம் இந்த பழக்கம் வெகுவாகவே குறைந்துவிட்டது.. இங்கே நகரத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் பானையில் இருந்து நீர் குடித்திருக்கக் கூட மாட்டார்கள். ஆனால், உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க இப்படி பானை மூலம் தண்ணீர் குடிப்பதால் பல நன்மைகள் கொட்டி கிடைக்கிறது
பிரிட்ஜ் எல்லாம் கண்டுபிடிக்கும் முன்னரே, குளுகுளு நீரை இப்படி தான் குடித்து வந்தார்கள். கோடைக் காலத்திலும் கூட மண் பானையில் வைக்கப்படும் நீர் இயல்பாகவே குளிர்ச்சியாக இருக்கும். இதற்குக் காரணமே மண் பானைகளில் இருக்கும் சிறிய துளைகள்தான். பானையின் மேற்பரப்பில் இருக்கும் இந்த சிறிய துளைகள் மூலம் நீர் விரைவாக ஆவியாகும். இதனால் பானை நீரின் வெப்பம் குறைந்து குளிர்ந்த நீராக இருக்கிறது.
பிரச்சினை இல்லை: பொதுவாக பிரிட்ஜ் நீர் ஜில் என இருந்தாலும் அதை அப்படிக் குடித்தால், தொண்டை எரிச்சல் உட்பட பல பாதிப்புகள் ஏற்படலாம். அதேநேரம் மண்பானை நீர் குளிர்ச்சியாக இருந்தாலும் அதைக் குடிப்பதால் நமக்கு எந்தவொரு சிக்கலும் ஏற்பட வாய்ப்பே இல்லை. பானை நீர் என்றைக்கும் மிகக் குளிர்ச்சியான வெப்பத்திற்கும் போகாது.. மிகவும் அதீத வெப்பத்திற்கும் போகாது. அது இதமாகவே இருக்கும். நமக்குச் சளி மற்றும் இருமல் வராமலும் அது தடுக்கும்.
மேலும், மண் பானைகளில் அல்கலைன் இருப்பதால்.. உடல் இயற்கையில் இருக்கும் அசிட்டிக் தன்மையுடன் வினை புரிந்து அது pH சமநிலையை உருவாக்க உதவுகிறது. இதனால் அசிட்டி மற்றும் வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்படுவது தடுக்கப்படும். மேலும், மண் பானைகள் களிமண்ணில் இருந்து நேரடியாக இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் போன்ற எந்தவொரு கெமிக்கல்களும் இதில் இல்லை.. இதுவும் நமது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும்.
இப்படி மண் பானைகள் மூலம் நீரைக் குடித்தால் உடலுக்கு ஆரோக்கியம் மட்டுமில்லை.. கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க ஜில் ஜில் நீரையும் நம்மால் குடிக்க முடியும்.












Click it and Unblock the Notifications